Popular Posts

Thursday, December 29, 2011

வன்கொடுமைக் கொடுவாள்

வன்கொடுமைக் கொடுவாள்
க.அருள்மொழி.
     குழந்தைகளின் மீது நடத்தப்படுகின்ற பாலியல் வன்கொடுமை மற்ற எல்லா குற்றங்களைப்போலவே உலகமயமானதுதான்.ஆனால் எல்லா இடத்திற்கும் பொதுவான விளக்கம் என்று எதுவும் இல்லை.ஆனால் பெரியவர்களின்  (Adult) ஆதிக்கம் செலுத்தும் அந்தஸ்து குழந்தைகளிடம் பாலியல் கெடுவாளுமை (Abuse) தூண்டுகிறது.குழந்தை பாலியல்  கெடுவாளுமை(child sexual abuse) என்பது குழந்தைகளின் பாலுறுப்புகளைத் தடவுதல், அசைத்தல்,வாயில் வைத்தல், விரல்களை நுழைத்தல், மற்றும் உடலுறவு கொள்ளுதல். உடல்ரீதியான தொடர்பு மட்டுமல்லாமல் உடல் தொடர்பு இல்லாமல் பாலுறுப்புகளை பார்த்தல், பாலுறவுக் காட்சிகளைப் பார்க்கச் செய்தல் பாலுறவு பற்றி பேசுதல்.ஆகியவையும் அடங்கும். குழந்தைகளிடம் கெடுவாளுமை கொள்கிறவர்களிடையே அந்தஸ்து வேறுபாடு ஏதுமில்லை. மிக மரியாதைக்குரியவர்களாகக் கருதப்படுபவர்கள் கூட இதில் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள்.
     குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் மீதும் நடத்தப்படுகின்ற கெடுவாளுமைக் குற்றங்கள் பற்றிய துல்லியமான புள்ளிவிவரம் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது.ஏனென்றால் அதைப்பற்றி பதிவு செய்வது குறைவாக உள்ளதும், கெடுவாளுமை என்றல் என்ன என்பதற்கான விளக்கம் தெரியாததும் காரணமாகும்.கெடுவாளுமையால் ஏற்படும் தாக்கம் ஓரிடத்தில் ஏதுமில்லாமலும் மற்றோர் இடத்தில் மிக கடுமையாகவும் இருக்கிறது. ஆனால் இந்த வன்செயலால் பாதிக்கப்படும் குழந்தைகள் -குறிப்பாக குடும்ப உறுப்பினர்களால் கொடுமைப் படுத்தப்பட்டவர்களும் உடல்ரீதியான தாக்குதல் அதிகம் ஏற்பட்டவர்களும் 'பயம் பதட்டம்' (anxiety) மோசமான மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப் படுகிறார்கள்.அது அவர்கள் வாழ்க்கை முழுவதும் வெவ்வேறு சமயங்களில் வெளிப்பட்டு துன்பத்தை உண்டாக்குகிறது. அவர்களுக்கு உரிய பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிப்பது அவசியம்.
கெடுவாளுமையால் பாதிக்கப்படுபவர்கள் யார்?
குழந்தைகளோ,வயது வந்தோரோ இனம்,கலாச்சாரம்,பொருளாதார நிலைமை,தோற்றம்,என எந்த வேறுபாடும் இல்லாமல் பாலியல் கெடுவாளுமைக்கு ஆளாக்கப் படுகிறார்கள்.சிறுவர்களை விட சிறுமிகள் அதிக அளவில் கொடுமைப்படுத்தபடுகிறார்கள்.
இந்தியாவில் பாலியல் கெடுவாளுமைக்குள்ளானோர் விவரம்:
இந்தியாவில் முதன் முதலாக 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 மாநிலங்களை உள்ளடக்கி 12 ,446 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு  அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் அதிர்ச்சிகரமான விவரம்.
53 % க்கும் அதிகமான குழந்தைகள் ஒன்று அல்லது அதற்கு அதிகமான வகைகளில் பாலியல் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
22 % குழந்தைகள் மோசமான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். 6 % பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள் .
50 % குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிந்தவர்களாக அல்லது நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கிறார்கள்.(குடும்ப உறுப்பினர்,நெருங்கிய உறவினர்,நண்பர்கள்,அருகில் வசிப்பவர்கள்.)
5 -12  வயதுள்ளவர்கள் பெரிய அளவில் பாதிப்புக்காளானாலும் பெரும்பாலும் பதிவு செய்யப்படவில்லை.
ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளைப் போலவே சம அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
11 -16 வயதுடையோர் மோசமாக கெடுவாளுமைக்காளாகிறார்கள்.
73 % பாதிக்கப்பட்டவர்கள் 11 -18 வயதுடையவர்கள்.
     2006 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட Tulir-CPHCSA வின் ஆய்வில் சென்னையில் உள்ள 2211 பள்ளி செல்லும் குழந்தைகள் பங்குபெற்றனர். அதில் குழந்தை பாலியல் கெடுவாளுமைக்குள்ளானோர் 42 % என்று தெரிகிறது.இங்கும் பொருளாதார பாகுபாடு இல்லாமல் கொடுமை நடந்திருப்பது தெரிகிறது. இந்த ஆய்வில் 48 % சிறுவர்களும்- 39 % சிறுமிகளும் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறா
ர்கள். இதில் 15 % இருபால் சிறார்கள் மோசமாக கெடுவாளுமை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சர்வதேச அளவிலும் ஏறக்குறைய இதே அளவில் இந்தக் குற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
குழந்தைகளைக் கொடுமைப்படுத்தும் குற்றவாளிகள் யார்?      இதைப்பற்றிய ஆய்வுகள் வெவ்வேறு தகவல்களைத் தருகின்றன.ஆனால் அதிர்ச்சிகரமான செய்தியாக இக்குற்றத்தை செய்பவர்கள் குடும்ப உறுப்பினர்களாகவும் குழந்தைகளிடம் நெருங்கிப் பழகும் தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். பழக்கமில்லாத புதியவர்களின் பங்கு இதில் குறைவாகவே இருக்கிறது. மேலும் ஆண்களே இக்குற்றத்தை அதிகம் செய்கிறார்கள். பெண்களும் இக்குற்றத்தில் ஈடுபடுவதாகப் பதிவுகள் இருக்கின்றன. பொதுவாக நினைப்பதுபோல் அல்லாமல்  ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் இக்குற்றத்தில் அதிகமாக ஈடுபடுவதில்லை.
பாலியல் கொடுமையால் ஏற்படும் விளைவுகள் என்ன?
   இக்கொடுமைக்கு ஆளானோர் உளவியல் மற்றும் நடத்தைக் கோளாறுகளால் பாதிக்கப் படுகிறார்கள். இப்பாதிப்பு சாதாரண முதல் கடுமையானது வரை குறுகிய காலத்திற்கும் நீண்டகாலத்திற்கும் மாறுபட்டு உள்ளது. மன அழுத்தம்,பயம் பதட்டம்,குற்ற உணர்வு,அச்சம், பாலியல் செயல்பாடின்மை,விலகி இருத்தல்,காணாமல் போதல் என   விளைவுகள் பலவகையில் இருக்கிறது.
நிகழ்வின் தன்மையைப் பொறுத்து எதிர் பாலின வெறுப்பு ,பாலுறவு விருப்பமின்மை போன்ற நடத்தை மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல்,
1   உண்பதில் ஒழுங்கின்மை
2  தன்னம்பிக்கைக் குறைவு.
3  உடல் இயக்கக் குறைபாடுகள்.
4  நாட்பட்ட உடல் வலி.
5  கருவுறும் மற்றும் தோற்று நோய்கள் பீடிக்கும் அபாயம்.
6  கற்றல் குறைபாடுகள்.
7  பொருட்களை உடைத்தல்,தவறாகப் பயன்படுத்தல்.
8 பருவமடைந்த பின் பாலுறவு விருப்பமின்மை.
9 குற்றச் செயல்களில் ஈடுபடுதல்.
10 சிறு குழந்தைகள் போல் விரல் சூப்புதல், படுக்கையில் சிறுநீர் கழித்தல்.
11 குறிப்பிட்ட சிலருடன் இருந்து விலகி இருத்தல்.
12  தற்கொலை செய்துகொள்ளுதல்.

கெடுவாளுமையைத் தடுப்பது எப்படி?
   பெற்றோர்களும் பாதுகாவலர்களும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.:
அடிப்படையான பாலியல் கல்வி சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.தேவைப்பட்டால் மருத்துவர்கள் மூலமாக...
பெரியவர்களின்  பாலியல் அணுகுமுறை தவறு என்பதை...
அவர்களுக்கு நேர்ந்ததை உங்களிடமோ நம்பிக்கைக்குரிய மற்றவர்களிடமோ வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்பதை
ஒருவேளை அப்படி ஒரு கொடுமை நேர்ந்திருக்கலாம் என்பது தெரிந்தால் நேரடியாகக் கேட்கலாம்.
எதை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் எதைத் தெரிவித்து விடவேண்டும் என்பதை...
தொடுதலில் உள்ள 'தவறு' மற்றும் 'சரி' என்பதைப் பற்றி...
அவர்களுடைய அந்தரங்க உறுப்புகளின் பெயர்கள் அதை பராமரிக்கவேண்டிய முறை;அவசியம் பற்றி...
அதனால் அவர்கள் மூத்தவர்கள் பார்க்க அல்லது தொட  அனுமதிக்க மாட்டார்கள்.
உங்கள் குழந்தைகளின் நண்பர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
தெரிந்தவர்களின் மூலமாகவே அதிகமாக இக்கொடுமை நடக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
உறவினர்களைக் கட்டிப் பிடிப்பது முத்தமிடுவது போன்ற பழக்கங்களைத் தவிர்த்து விடுங்கள்.
கார் போன்ற வாகனங்களில் உங்கள் அனுமதி இல்லாமல் வேறு யாருடனும் பயணம் செய்ய அனுமதிக்காதீர்கள்.
உங்கள் குழந்தையை யாரிடமாவது விட்டுச் செல்வதில் தயக்கமோ சந்தேகமோ இருந்தால்... வேண்டாம் என்று முடிவெடுங்கள்.
கொடுமைப் படுத்தப்பட்டிருப்பதாக சந்தேகப்பட்டால் என்ன செய்வது?
குழந்தையை  பாதுகாப்பான சூழ்நிலையில் வைத்து உங்களிடமோ வேறு நம்பிக்கைக்குரியவர்களிடமோ பேச வையுங்கள்.
அதைப் பற்றி பேச தைரியம் கொடுங்கள்.
உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருங்கள். அமைதியாக கேளுங்கள். குழந்தையின் வார்த்தைகளுக்கும் குறிப்புகளுக்கும் ஆதரவாக இருங்கள்.
அந்தக் குழந்தையின் மீது தவறு ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்திச் சொல்லுங்கள்.
ஒரு உளவியல் நிபுணர் அல்லது மனநல மருத்துவரின் உதவியை நாடுங்கள்.
இதைப் பற்றிய அனுபவமுள்ள மருத்துவரின் மூலம் பரிசோதனை செய்து முடிவு எடுக்கலாம்.
சட்ட உதவியை நாட வேண்டும்.
சிகிச்சைகள்:
    கொடுமைப் படுத்தப்பட்ட குழந்தைகளின் நல வாழ்வுக்காக பல சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும்.
சம்பந்தப்பட்டவருக்கான சிகிச்சை.
குடும்ப சிகிச்சை.
குழு மருத்துவம்.
அறிவு சார் நடத்தை மாற்று சிகிச்சை.
குழந்தையை மையப் படுத்திய சிகிச்சை.
எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை பயன் தராது. ஒவ்வொருவரின் குணாதிசயங்களுக்கு ஏற்ப பல்வேறு அணுகுமுறை,மற்றும் கால அளவில் சிகிச்சை தேவை.
பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் ஒத்துழைப்பைப் பொறுத்து குணமாகும் கால அளவு மாறுபடும். ஆனால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு.
       'பூக்களைப் பறிக்காதீர்கள்' என்பார்கள். மொட்டுகளை சுட்டு விடாதீர்கள் என்று கற்பிக்க வேண்டும். மனிதன் என்று மனிதாபிமானத்தோடு நடந்துகொள்வான் என்று கவலையோடு காத்திருக்க வேண்டியிருக்கிறது.

Thursday, December 15, 2011

தி. அனிதா தாரணி

உலகின் சமபங்கு அளவிலுள்ள பெண்கள் சமமான வாழ்க்கை வாழ்கிறார்கள் எனக் கூற முடியாது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி மனித இனத்தில் முதலில் தோன்றியது பெண்தான். பின்னர்தான் ஆண் வர்க்கம்  தோன்றியது. பெண் சமூக ரீதியாக விலை மதிப்பற்றவளாக இருக்கிறாள். உலகில் உயிர்கள் தோன்றவும் வாழவும் பெண் இன்றியமையாதவள்.
உலகில் ஒவ்வொரு உயிரினமும் தன்னுடைய இனத்தை நிலைநாட்டவே போராடிக்கொண்டி ருக்கிறது. 'survival of life' என்பதுதான் ஒவ்வொரு இனத்தின் வாழ்க்கை மந்திரமாக உள்ளது. தொடர்ந்து வாழ்வதற்கு தன் இனத்தைப் பெருக்குவது மிகவும் முக்கியம். இனப்பெருக்கம் என்பது பெண்ணினத்திற்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.
ஆணின் ஒருதுளி விந்தில் பல லட்சம் விந்தணுக்கள் உள்ளன. அறிவியலின் துணைக் கொண்டு பல லட்சம் பெண்களைக் கருத்தரிக்க வைக்க முடியும். அப்படி பல லட்சம் பெண்களைக் கருத்தரிக்க வைத்தால்கூட இந்த உலகின் அடுத்த தலைமுறையை ஈன்றெடுக்க பெண்ணுக்குப் பத்து மாதங்கள் ஆகும்தானே. ஆனால் ஒரு பெண் ஒரு மாதத்தில் ஒரு கரு முட்டையை மட்டுமே உற்பத்தி செய்யமுடியும். அந்தக் கரு முட்டைகூட பெண்ணின் வாழ்நாளில் பதினாறு வயது முதல் நாற்பது அல்லது அய்ம்பது வயது வரை மட்டுமே கருத்தரிக்க வாய்ப்புள்ளது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பெண்ணின் வாழ்க்கையை இந்த உலகம் முழுமையாக உணர்ந்துள்ளதா?
சமத்துவம் பேசும் ஆண்கள்கூட மனதளவில் பெண்களுக்குச் சமநிலை தருகிறார்கள் எனக் கூறமுடியாது. அவர்களே அந்த நிலை என்றால் மற்றவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பெண் என்பவள் தன்னுடைய பொருட்களில் ஒன்றாகவே ஆண்கள் நினைக்கிறார்கள். அந்தக் காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களை குளத்தில், ஆற்றில் இறங்கக்கூடாது எனக் கூறிவிட்டு, அவர்களிடம் சுத்தம் இல்லை எனப் பேசும் பார்ப்பனக் கூட்டம் போலத்தான் ஆண்களும் பெண்களை வாழ்க்கை முழுதும் சமையல றையில் அடைத்துவிட்டு, பெண்கள் எந்த ஒரு சின்ன நாட்டு நடப்பு கூட தெரியாமல் இருக்கிறார்கள் எனப் பேசுகிறார்கள். இது சரியா?
பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்து மீளமுடியாத நிலையில்தான் இன்றும் நம் நாடே உள்ளது. எத்தனையோ பிரச்சாரங்கள் செய்தாலும் இன்னும் முழுமையான மாற்றம் நிகழவில்லையே ஏன்? இத்தனை காலமாக ஊறிப்போன  விசயமாக அது உள்ளது. பழகியும் போய்விட்டது. பெண்களின் நிலை கூட அதுபோன்றதுதான்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள்
பொருளாதார சமநிலையின்மை:
காலத்திற்கு ஏற்றாற்போல் முன்னேறாத விவசாயக் குடும்பங்களிலும் சரி, மேல்தட்டுக் குடும்பங்களிலும் சரி பெண்களின் நிலையில் பெரிய மாற்றங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. மேல்வர்க்கத்தினர் பார்ப்பதற்குச் சமநிலையில் இருப்பது போல்தான் தோன்றுகிறது. ஆனால் அங்கும் பெரிய மாறுபாடுகள் இருப்பதில்லை. கணவன்களுக்கு அவர்களின் வேலைகளில் சம்பளம் பெறாத கூலிகளாகத்தான் வேலை செய்வது முதல் வீட்டிலுள்ள அனைவருடைய வேலைகளையும் பகிர்ந்துகொள்வது (சில குடும்பங்களில் முழுமையாக எல்லா வேலைகளையும் செய்வது) என எல்லா இடங்களிலும் பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
வேறு இடங்களில் பெண்கள் வேலையில் இருந்தாலும் அங்கும் அவர்களின் நிலை மேலும் மோசமாக உள்ளது. மிகக் குறைந்த கூலி, கடினமான, கீழ்த்தரமான, நிரந்தரமற்ற, வரையறுக்கப்படாத வேலைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இருந்தும் ஆண்களைவிட அய்ம்பது சதவிகிதத்துக்கும் குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. உலகின் சமபங்கு அளவிலுள்ள பெண்களுக்குக் குறைந்த அளவேதான் சொத்துகளும் இருக்கின்றன. ஆப்ரிக்க நாடுகளில் மொத்த நிலப்பரப்பில் 2% கூட பெண்களுக்குச் சொந்தமானதாக இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன.
கல்வி
பெண்களுக்குக் கல்வி என்ற ஆயுதத்தைக் கொண்டுதான் அவர்கள் இழந்த சமத்துவ உலகை மீட்டெடுக்க முடியும். கல்வி கற்ற பெண்கள் இளவயதுத் திருமணம், தாழ்வான, குறைந்த சம்பள வேலைகளைச் செய்ய மறுத்துவிடுகின்றனர். இன்றைய இளம் பெண்கள் தங்கள் தாயைவிட பல மடங்கு முன்னேறியுள்ளனர். சமூகத்தில் தானும் ஒரு வீரியம் நிறைந்த அங்கம் என்பதை இன்றைய பெண்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.
இதனால்தான் millennium development goals (MDGS) ஆண்குழந்தைகளுக்குச் சமமாக பெண்குழந்தைகளையும் ஆரம்பப் பள்ளியில் சேர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளது. 2008இல் நூற்றுக்குத் தொண்ணுற்றாறு  பெண் குழந்தைகள் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது மகிழ்ச்சி தரும் செய்திதான்.
பெண்கல்வியை ஊக்குவிக்க முழுமையான கல்விக் கட்டண நீக்கம், அவர்களுக்கான தனி கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். பெண் கல்வி பற்றி விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைச் செய்ய வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்முறை:
ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக வேறுபாடு இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவது பெண்களின் மேல் கட்டவிழ்க்கப்படும் வன்முறைகள் தான். செயலாளர் (ஹிழிமிஜிணி) பாங்கி மூன் கூறுகிறார்: மூன்றில் ஒரு பெண் அடிஉதைகள் பட்டோ, பலவந்தமாக கீழ்ப்படிய வைக்கப்பட்டோ, தவறான வழிகளில் நடத்தப்பட்டோதான் வாழ்கிறார்.
வல்லரசு நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகளில்கூட பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் குறைவில்லை. பெண்களை வன்கொடுமை செய்வது என்பது போர்களின் ஆயுதங்களின் ஒன்றாகத்தான் உள்ளது. ஆனால் பெரும்பாலான இந்த வன்கொடுமைகள் போர்க் குற்றங்களில் கணக்கிடப்படுவதில்லை.
பெரும்பாலான பாலினம் சார்பான குற்றங்கள் வறுமை மற்றும் போரால் மூடி மறைக்கப்படுகின்றன. பெண் குழந்தைகளைக் கொலை செய்தல், பெண்குழந்தை  என்று தெரிந்தால் கருக்கலைப்பு  போன்றவை இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் அதிக அளவில் உள்ளது.
இனப்பெருக்கம்
பெண்ணுக்கு எத்தனை குழந்தைகளை, எப்போது, எத்தனை கால இடைவெளிகளைக் கொண்டு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்  அவளுக்கே  அதிக உரிமை உண்டு.  ஒவ்வொரு குழந்தைப் பேற்றுக்குப்பின் பெண்ணின் ஆரோக்கியம் பெருமளவு பாதிக்கிறது. குழந்தைப் பேறின்போது ஏற்படும் மரணத்தால்  அவளுடைய குடும்பம் மட்டுமல்லாமல் அவளைச்  சார்ந்த சமூகமும் பாதிக்கப்படுகிறது.
பெண்ணின் சமத்துவம் என்பது இந்தக் காலத்தில் அவ்வளவு பேசவேண்டிய தேவை இல்லை என்று தோன்றலாம். ஆனால் இன்றும் நூற்றுக்கு மூன்று அரசியல்வாதிகள் கூட பெண்கள் இல்லை என்பதே உண்மை. நம்முன் இருக்கும் பிரச்சினைகளில் முக்கியமானது மக்கள் தொகை அதிகரிப்பு. சராசரியாக குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதம் 6 குழந்தைகளிலிருந்து 2.6 ஆக குறைந்துள்ளது.
பொருளாதாரத்தில் பெண்கள்
பெண்கள் உலகில் மூன்றில் இரண்டு பங்கு வேலைகளைச் செய்கின்றனர், ஆனால் பத்து விழுக்காடு மட்டுமே வருமானம் பெறுகின்றனர், ஒரு விழுக்காடு சொத்துகள் மட்டுமே அவர்களிடம் உள்ளது.
ஊடகங்களில் பெண்கள்
பெண்களை இழிவாக நடத்துவதில் ஊடகங்களின் பங்கு மிகவும் அதிகம். ஆண்கள் பயன்படுத்தும் ப்ளேடு, உள்ளாடைகள், மதுவகைகள், வாசனைத்திரவியங்கள் போன்ற விளம்பரங்களில் பெண்களைத் தேவையில்லாமல்  பயன்படுத்துகின்றனர். நாடகங்களில் (தொலைக்காட்சித் தொடர்கள்) பெண்களைச் சித்தரிக்கும் விதமே பெண்களை இழிவுப்படுத்துவதாக உள்ளது. பெண்கள் தன் உறவு பெண்களைப் பார்க்கும் விதமே வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு பெண்ணையுமே வில்லிகளாகச் சித்தரிக்கும் விதம் வினோதம்தான். விளம்பரங்கள் மூலம் பெண்களைத் தேவை இல்லாத பொருட்களை வாங்கத் தூண்டுகின்றனர். திரைப்படங்களில் பெண் கதாநாயகனோடு பாடல் காட்சிகளில் அரைகுறை ஆடைகளோடு ஆடும் பதுமையாகவே காட்டப்படுகிறாள்.
சமமான நிலை பெற
1. சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவதில்லை, தாமே எடுத்துக்கொள்வது என்பதைப் பெண்கள் உணர வேண்டும். பூனைகளிட மிருந்து என்றுமே எலிகளுக்கு விடுதலை கிடைக்கப் போவதில்லை என்ற பெரியாரின் கூற்றுப்படி பெண்களே சுதந்திரத்தை எடுத்துக்கொண்டால்தான் முடியும்.
2. ஓர் ஆய்வில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான சோதனைகள் (tasks) கொடுக்கப்பட்டன. ஒரு ஆணும் பெண்ணும் புறத்தோற்றத்தில் எந்த ஒரு வேறுபாடும் காட்டப்படவில்லை. அவர்களின் உடை, தலைமுடி அனைத்தும் ஒரே மாதிரியாக வைக்கப்பட்டது.  இருவரில்  பெண்ணே   அந்தச் சோதனைகளை வெற்றிகரமாக முடித்திருக்கிறாள். உடலால் பெண்கள் பலவீனமானவர்கள் என்பதை ஒருபோதும் ஏற்கக்கூடாது. உடல் நலம் பாதிக்கப்பட்டி ருக்கும் போதுகூட தன் கணவனுக்காகவும், குழந்தைகளுக்காகவும் தன் நிலையைப்  பற்றிக் கவலைப்படாமல் உணவைச் சமைத்துக் கொடுக்கும் பெண்களை நாம்  நிறையவே பார்த்திருக்கிறோம்தானே!
3. கல்வி என்ற கவசத்தை எந்தக் காலத்திலும் பெண்கள் தவிர்க்கக்கூடாது. பகுத்தறிவுடனான கல்வியால் உலகையே கைவசம் கொண்டுவர முடியும். எனவே பெண்கள் எப்பாடுபட்டாலும் கல்வியைப் பெற்றிட வேண்டும்.

"பிச்சைப் புகினும் கற்கை நன்றே", என அவ்வையார்  கூறியது பெண்களுக்காகத்தான்.
4. ஆண்கள் பெண்களின் முன்னற்றத்திற்கு  வழிவிடும் பொழுது பெண்ணைத்  துணைவி யாகவோ, வேறு ஒரு பெண்ணாகவோ நினைக் காமல் தன்னுடைய தாயாகவோ, தமக்கை யாகவோ மகளாகவோ நினைத்து வழிவிட வேண்டும்.
5. பெண்கள் இன்று கல்வி கற்று மருத்துவம், பொருளாதாரம், இராணுவம், அறிவியலாளர் கள், கணிபொறித்துறை போன்ற பல துறைகளில்   சாதித்துள்ளார்கள். பங்களாதேஷில்  பெண்கள் தொண்ணூறு விழுக்காடு வங்கி இருப்புகளை வைத்துள்ளனர்.
6. பெண்கள் தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டு எந்தச் சூழ்நிலையையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பெண்கள் ஏற்கவேண்டிய உறுதிமொழிகள்
1. இயற்கையின் படைப்பில் நான் சமவாய்ப்பைப் பெற்றுள்ளேன்.
2. நான் கல்வி உரிமையை அனுபவிக்க முடியும்.
3.    எனக்குச் சொத்துரிமை உண்டு :சொத்துகளை அனுபவிக்க எனக்கு உரிமையுண்டு.
4.    ஒப்பந்தங்களில் கையெழுத்திட எனக்கு உரிமையுண்டு.
5.    எனக்கான வாழ்க்கைத் துணைவரைத் தெரிந்தெடுக்கும் உரிமை உண்டு.
6.    என் விருப்பத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய யாரும் வற்புறுத்த இயலாது.
7.    வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தத்தின்படி என்னுடைய துணைவர் நடக்க வேண்டும் என்று வலியுறுத்த முடியும்.
8. மணவிலக்கு கோருவதற்கான உரிமை உண்டு.
9. நான் மதிப்பு, மரியாதைகளை ஏற்று வாழ முடியும்.
10.    நான் எனக்காகச் சிந்திக்க முடியும்.
11.    என்னுடைய மக்களைச் சரியான பாதையில் நடத்திச் செல்ல எனக்கு உரிமை உண்டு.
உறுதியுள்ள நெஞ்சினாய் வா ....வா ....வா!
உலகம் உந்தன் கைகளில் வா...வா....வா....
- தி. அனிதா தாரணி

Thursday, November 24, 2011

பிழைத் திருத்தம்

பிழைத் திருத்தம்
க. அருள்மொழி
    மானமும் அறிவும் -இந்த இரண்டு வார்த்தைகளை தமிழர்கள் வாழ்க்கையில் பெற வேண்டும் என்பதற்காகத்தான் தந்தை பெரியாரும் அன்னை மணியம்மையாரும் உழைத்தனர். அவர்களுக்குப் பிறகும் தமிழர் தலைவர் தலைமையில், தி.க.காரன் என்று அழைக்கப்படுவதைப் பெருமையாகக் கொண்டு கருஞ்சட்டைக்காரர்களும் தனிவாழ்க்கையில் தன்மானம், பொதுவாழ்க்கையில் இனமானம் பெரிது என்று எண்ணி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். 
      " உலகத்தில் உள்ள மற்ற மக்களைப்போல திராவிட மக்களும்  மானமும் அறிவும் பெற வேண்டும் என்பதற்காக நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன் " என தந்தை பெரியார் அந்த பணியை தன்மேல் போட்டுக்கொண்டு தொண்டறம் என்ற வாழ்க்கை முறையை நடைமுறைப்படுத்திக்காட்டினார்.
    தான் விரும்பிய சமுதாயம் அமைய வேண்டுமானால் தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி, வேலைவாய்ப்புத்  தடையின்றி கிடைக்கவேண்டும், அதை அந்த மக்களைக்கொண்டே போராடிப் பெறவேண்டும் என்பதற்காக மக்களோடு மக்களாக கலந்து அறிவு விதையைத் தூவினார்.
      அவருடைய உழைப்பு வீண் போகவில்லை . கல்வி வள்ளல் காமராசர் திறந்து விட்ட  கல்வி நீரோடை இன்று கலைஞர் ஆட்சியில் வெள்ளமெனப் பாய்கிறது. ஆரம்பக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை இலவசமாகப் படிக்கலாம். வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டை, இலவசப் பாடப்புத்தகங்கள், சீருடை, இலவசப் பேருந்து வசதி படிப்பில் முதலிடம் பெறுபவர்களுக்கு கணினி,முதல் தலைமுறையாகப் பட்டப் படிப்புப் படிப்பவர்களுக்கு கட்டணக் சலுகை, ,உயர் கல்வி கற்க வங்கிக்கடன் வரை கொடுத்து பண வசதி இல்லை என்பதற்காக எவரும் கல்விபெற முடியவில்லை என்ற நிலை இருக்கக்கூடாது என்பதால் அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி கற்கும் உரிமை என நடுவண் அரசும் மாநில அரசும் கல்விக்காக உண்மையிலேயே செய்கின்ற திட்டங்கள் ஏராளம். இதற்கெல்லாம் அடிப்படை தந்தை பெரியாரின் அறிவாயுதப் புரட்சி.
    பெரியாரின் சிந்தனைகளை நடைமுறைப் படுத்த திமுக ஆட்சி இருக்கிறது. நடைமுறைப்படுத்தச் செய்ய திராவிடர் கழகம் இருக்கிறது. ஆட்சியில் இருப்பவர்கள் நமக்குச் சாதகமானவர்களாக இருந்தால் வேண்டுகோள் விடுத்தும்  மற்றவர்களாக இருந்தால் அறைகூவல் விடுத்தும் மக்கள் பணியைச் செய்யச் செய்வது பெரியார் காலத்தில் இருந்து நாம் கடைபிடித்துவரும் நடைமுறையாகும். இதற்காக மக்களிடம் எதிர்பார்ப்பது எதுவுமில்லை,அவர்களுடைய நல்வாழ்வைத் தவிர.  தி.க.காரனுடைய உழைப்பால் பயன் பெற்ற மக்கள் அதனை உணர்ந்து செய்த கைம்மாறு என்ன?
      'நன்றி என்பது உதவியைப் பெற்றுக் கொண்டவர்கள் காட்ட வேண்டியது,உதவியை செய்தவர்கள் எதிர்பார்க்கக்கூடாதது'என்று பெரியார் சொன்னது நமக்கும் புரியும். அது தனி மனிதனுக்குப் பொருந்தும், இயக்கப் பணிகளுக்குப் பொருந்தாது என்று கருதுகிறோம்.  பெரியாரின் உழைப்பால் பலனடைந்த மக்கள் செய்யும் செயல்களைப் பார்க்கும் பொது இதற்காகவா இவ்வளவு உழைத்தார்கள் பெரியாரும் திராவிடர் கழகத்தவரும் என்று சலிப்படைய வேண்டியிருக்கிறது.
      வகுப்புரிமை பெற்றே தீருவதென போராடி,முதல் சட்டத் திருத்தமே இட ஒதுக்கீட்டுக்கான திருத்தம்தான்.அதைசெய்ய வைத்தப் பெருமை பெரியாருக்குத்தான்.ஆனால் அதன் மூலம் படித்து வேலைவாய்ப்புப் பெற்ற நம்மவர்கள் முதலில் செய்வது கோயிலுக்குப் போய் பார்ப்பானுக்கு தட்சணை அழுவத்தானே. இட ஒதுக்கீடுக்கு ஆபத்து என்று கழகம் போர்க் குரல் எழுப்பினால் 'ஜாதியே வேண்டாம் என்பவர்கள் எதற்கு ஜாதி வாரியாக இட ஒதுக்கீடு கேட்கிறார்கள்; தகுதி உள்ளவர்களுக்கு கிடைக்கட்டும்'  என்று  பார்ப்பனர்களுக்கு டப்பிங் (dubbing) கொடுப்பவர்கள் நம்மவர்கள்தான்.
        அதற்குக் காரணம் நம்முடைய கல்வி திட்டம்தான். தமிழ்நாட்டில் நாற்பத்து மூன்று ஆண்டுகளாக 'திராவிட' ஆட்சி நடந்தாலும் கல்விமுறை என்னவோ 'ஆரிய' முறையில் தான் இருந்து வருகிறது. தந்தை பெரியார் அவர்களைப் பற்றிய பாடம் என்றால் 'பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக வைக்கம் என்னும் ஊரில் போராட்டம் நடத்தினார்,கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு 500 தென்னை மரங்களை வெட்டினார்' என்று இரண்டு வரிகளில் அவருடைய அறுபதாண்டு உழைப்பை 'விளக்கி' விடுகிறார்கள்.
      அண்ணா ஆட்சிக்கு வந்து சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றிய பிறகு இனி சுயமரியாதைத் திருமணம் மட்டுமே தமிழ்நாட்டில் நடக்கும் என எதிர் பார்த்தோம். ஆனால் ஆடம்பரமானத் திருமண மண்டபங்களில் பார்ப்பானுக்கு தாராளமாய் தட்சணை கொடுத்து 'தீ' வலம் வருகிறார்கள் தமிழர்கள்.
      'கோயில்கள் அறிவு, பணம் இரண்டையும் இழக்கும் இடம்' என்றார் பெரியார்.  இன்று கோயிலுக்குப் போவதைச் சொல்லவே ஆயிரக்கணக்கில் ஒவ்வொருவரும் பாடுபட்டு உழைக்கும் பணத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள். அறிவுக்குப் பொருந்தாத பிறவி ஐயப்பன் கோயிலுக்குப் போவதற்கு டிஜிட்டல் பேனர் வைக்கிறான்.ஆடம்பர செலவு செய்கிறான் என்பது எவ்வளவு அருவருப்பாக இருக்கிறது என்பதை எழுத்தில் சொல்ல முடியவில்லை.
     பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்ததை அங்கீகரித்து பெண்கள்தான் ஈ .வெ.ராமசாமி என்பவருக்கு பெரியார் என்று பட்டம் அளித்தனர்.அதுவே அவருடைய இயற் பெயரைப்போல இன்றும் விளங்குகிறது. ஆனால் அந்தக் காலப் பெண்களே பரவாயில்லை போலிருக்கிறது. இன்று பெரியார் பற்றி எந்த செய்தியும் தெரியாத, தெரிந்துகொள்ளாத 'படித்த' பெண்கள் நிறைய இருக்கிறார்கள். இன்று பெண்கள் தான் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள் என்பது கூடுதல் செய்தி.
       கணினி படிக்காத மாணவர்கள் இன்று இல்லை. அத்துறையில் வேலைவாய்ப்பு பெற்று பல்லாயிரம் அல்லது லட்சக்கணக்கில் ஊதியம் பெறும் இளைஞர்கள் அத்துறையில் பார்ப்பனர்கள் செய்துகொண்டிருக்கின்ற சூழ்ச்சியைக் (தமிழ்ஒருங்குறியில்(unicode)சம்ஸ்கிருத எழுத்துக்களை செருகும்முயற்சியைக் )கூட கண்டுகொள்ளாமல் இருக்க, தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தான் முதல்வர் கலைஞர் மூலமாக நடுவண் அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
அந்தோ பரிதாபத்துக்குரிய இளைஞர்களே. பணம் உங்களைத் தன்மானம் இழக்கச் செய்துவிட்டதோ? என்ன செய்வது உங்கள் பெயர்கள் கூட அநேகமாய்த் தமிழில் இருக்க வாய்ப்பில்லை. ஏதாவது ஒரு வடமொழி எழுத்து அல்லது முழுவதுமே வடமொழிப் பெயராகத்தான் இருக்கும். ஸ்டைல்!,பேஷன்! பலே!
   ஒன்றைக் கவனித்தீர்களா? தலைமுறை தலைமுறையாக தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் பணத்தில் கொழித்துக் கொண்டிருக்கும் வடநாட்டவர்கள் தப்பித் தவறிக் கூட தமிழ் பெயர் அழகாக இருக்கிறது என்று தங்கள் பிள்ளைகளுக்கு வைத்துவிட மாட்டார்கள். மார்வாடிகளின் வெள்ளை நிறத்தில் மயங்கி தன் கருப்பு நிறப் பிள்ளையை 'சேட்டு' என்று அழைத்த தமிழன் இப்போதெல்லாம் மார்வாடிகளின் பெயரையே வைத்துவிடுகிறான்.
          தமிழன் இப்போது நல்ல நிலைக்கு வந்துவிட்டான். ஆம். நன்றாக சம்பாதிக்கிறான். நல்ல துணி மணி அணிகிறான். மகிழ்ச்சி. அப்புறம், பத்திரிகைகளெல்லாம் படிக்கிறான். தினமலர், தினமணி,இங்கிலீஷ் பேப்பர் கூட-ஹிந்து! அடிமை, படித்த அடிமையாகிவிட்டதை எப்படி நல்ல நிலைக்கு வந்துவிட்டதாகக் கொள்ள முடியும். பொய்க்கும் 'உண்மை'க்கும் உள்ள வேறுபாடு தெரியாதவனுக்கு அடிமைத்தனத்திற்கும் 'விடுதலை'க்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடியாதுதான். அந்நியனிடமிருந்து விடுதலை கிடைத்து விட்டதாக நம்பிக்கொண்டிருப்பவன்தானே?
    ராஜாக்களையே அடிமையாய் வைத்திருந்த கூட்டம் ராசா அமைச்சரானதைப் பொறுத்துக்கொள்ளுமா? கடவுள் என்ற கற்பனையைக் காட்டி வித்தைக் காட்டிக் கொண்டிருக்கும் கூட்டம் யூகக் கணக்கை ஊதிப் பெருக்கி உண்மையென்று நம்பவைத்தது. பார்ப்பான் பத்திரிக்கை சொன்னதே வேதம்!. மந்திரத்தில் மாங்காய்; பாம்புக்கும் கீரிக்கும் சண்டை எனச் சொல்லி வேடிக்கை காட்டுபவன் கடைசிவரை பாம்பை வெளியில் விடமாட்டன் என்றாலும் ஒவ்வொரு நாளும் ஒரு கூட்டம் ஏமாந்து கொண்டுதானே இருக்கிறது? ஊழல், ஊழல்  என்று சொல்லி பத்திரிக்கை விற்பதில் பார்ப்பனக் கூட்டம்  அசகாய ஊழல் செய்தது தெரியுமா தமிழனுக்கு?
    எப்படித் தெரியும் ? இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஜெயித்து விடக்கூடாது; ஆனால் இலங்கை -இந்திய அணிகள் விளையாடினால் இலங்கை வென்றால் பரவாயில்லை. யார் எதிரி; யார் எதிரணி என்பது கூட தெரியாத அப்பாவியாக இருக்கிறானே தமிழன்?! 'தமிழா  இன உணர்வு கொள்!' என்கிறோம் இவன் மத உணர்வில் அல்லவா மந்தமாகத் திரிகிறான்?
 ஈழத்தில் உறவுகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அது  'விதி' என்கிறான்.
காவிரி உரிமை பறிபோனால் 'மிச்சமிருந்தால் விடப் போகிறான்' என்கிறான்.
முல்லைப் பெரியாறு அணை காக்க  வா என்றால் ஐயப்பன் கோயிலுக்குப் போகவேண்டும் என்கிறான்.
தமிழக மீனவர்கள் சுடப்படுகிறார்கள் என்றால் அவர்கள் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்கிறான்.-
எந்திரன் கட் அவுட் க்குப் பாலபிஷேகம் செய்ய பனைமர உயரம் ஏறுகிறான். அலகு குத்தி தேரிழுக்கிறான்.
கன்னடக்காரன் உதைக்கிறான்;
மலையாளி மிரட்டுகிறான்;
மராட்டியன் மண்டையை உடைக்கிறான்;
இந்திக்காரன் ஏசுகிறான்
ஏன் நீ எதுவும் திருப்பிச் செய்ய வில்லையா? என்றால்
நான்தான் ரொம்ப நல்லவன் ஆச்சே?! என்கிறான்.
'அடுத்த மாநிலத்தில் வேண்டாம் உன் நிலத்தில் உனக்கே உரிமை இல்லாத இடம் உண்டு தெரியுமா? கோயில் இருப்பது உன் நிலம். அதைக் கட்டியது நீ. அர்ச்சகனுக்கு சம்பளம் கொடுப்பதும் நீ! ஆனால் 'அவன்' இருக்கும் இடத்தில் நீ போக முடியாது. உரிமைக் குரல் எழுப்ப வேண்டாமா'? என்றால் கடவுள் சமாச்சாரம், சுத்த பத்தமாக நம்மால் இருக்க முடியாது என்கிறான்-தேவனாதன்களை,நித்யானந்தாக்களை,சங்கராச்சரிகளைப்  பார்த்த பிறகும்.
     தகவல் தொழில் நுட்பத்தில் தமிழன் தலைமையிடத்தில் இருக்கிறான். ஆனால் அந்த இடத்திற்கு அவன் வர பெரியாரின் சிந்தனை, உழைப்பு, தியாகம் காரணமென்ற தகவலை வசதியாக மறந்துவிட்டானே? அதிகாரிகளாக ,அறிவியலார்களாக,ஆட்சியர்களாக வந்துவிட்டார்கள் தமிழர்கள். இன்னமும் கூட அவனை அந்த உயரத்தில் இருந்து தள்ளிவிட கீழே பள்ளம் பறிக்கும் ஓநாய்க் கூட்டம் காத்திருப்பதும் அதைத் தடுத்துக் கொண்டிருப்பது கறுப்புச் சட்டைப் பட்டாளம்தான் என்பது கொஞ்சம் கீழே குனிந்து பார்த்தால் தெரியும்.
   உண்ணும் உணவும் பருகும் பானமும் உடுக்கும் உடையும் பேசும் பேச்சும் அடுத்தவன் சொல்லிக் கொடுத்ததாக இருக்கிறது.
கொண்டாடும் விழாக்கள் அந்நியத்தன்மையுடன் இருக்கிறது. 'எதைப்பற்றியும் கவலை இல்லை.இனவுணர்வும்  எங்களுக்கு இல்லை' என்றிருக்கும் இளைஞர்களே! கடன் வாங்கப்பட்ட எதுவும் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்.
உன் சொந்த நாடு, சொந்த மொழி, சொந்த இனம்,அடிமைப்பட்டிருக்கிறது; உன் உரிமை  மறுக்கப்பட்டிருக்கிறது.
கடனைத் திருப்பிக் கொடு.உரிமையை மீட்டெடு!
    'கட்டுரையாளருக்கு நேர்மறையான செய்திகள் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லையா?' என்று சிலர் கேட்பது எனக்கும் கேட்கிறது. நான் பிழைத் திருத்துபவன்.(proof reader )!.பிழைகள் குறையட்டும். வாழ்க்கை நிறையட்டும்.
                                     **********************************************************************************************************************
   

Saturday, October 1, 2011

சடங்குகள் விலக்கு சமூகம் விளக்கு!

சடங்குகள் விலக்கு சமூகம் விளக்கு!

- க.அருள்மொழி
'எல்லாக் குழந்தைகளுமே நாத்திகர்களாகத்தான் பிறக்கிறார்கள்' என்றார் இங்கர்சால்.
அவர்களை வளர்க்கும்போதுதான் அவர்களுக்கு மதச் சாயம் பூசி கடவுள் நம்பிக்கையை ஏற்படுத்தி சம்பிரதாயங்களைத் திணித்து ஒரு  வட்டத்துக்குள் அடைத்து விடுகிறார்கள். அவர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பது பற்றிக் கவலைப்படுவ தில்லை. 'என் பெற்றோர்கள், பெரியவர்கள் சொன்னதாகச் சொல்லி இதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். நானும் பின்பற்றி வருகிறேன். இப்போது நான் பெரியவன், அதனால் நான் சொல்வதை நீங்கள் கடைபிடியுங்கள்' என்று அறிவுக்கும் காலத்திற்கும் பொருந்தாத விஷயங்களைச் சொல்லித்தரும் சமூகம் நிகழ்காலத்தில் இருக்கும் அறிவியல் மாற்றத்திற்கு ஏற்ப சிந்தனையைக் கூர் தீட்டிக் கொள்ள வேண்டுமென்று சொல்லித்தரத் தயங்குகிறது.
மனிதன் ஒரு சமூக விலங்கு என்று சொல்வதற்குக் காரணம் அவன் குழுவாக இணைந்து வாழ்கிறான்-, வாழ வேண்டிய கட்டாயத்திலிருக்கிறான் என்பதால்தான்.
அப்படி ஒரு சமூகத்தில் இணைந்து வாழும்போது அந்தச் சமூகத்தின் பழக்க வழக்கம், நாகரிகம், பண்பாடு நடை உடை பாவனைகளைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு 'சமூகமயமாக்கல்' (Socialization)  என்று பெயர்.  உலக மயம், தாராள மயம் என்பது பொருளாதாரத் துறையில் மட்டுமல்லாமல் பண்பாடு கலாச்சாரத்திலும் எதிரொலிக்கிறது- தொழில்நுட்பம், தகவல் தொடர்பு வளர்ந்துவிட்ட காரணத்தால்.    ஒவ்வொரு சமூகத்திலும் நிறையான அல்லது குறைபாடான பழக்கவழக்கங்கள் உண்டு. ஊடகங்கள் நொடிப்பொழுதில் தகவல் தொடர்புப் பரிமாற்றம் செய்யும் இக்காலத்தில் உலகத்தில் எந்த மூலையிலும் உள்ள மக்களின் நாகரிக பழக்க வழக்கங்களைத் தெரிந்துகொண்டு அன்றாட வாழ்வில் பயன்படுத்தும்போது மனிதன் மேலும் நாகரிகமடைகிறான்.
இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் 'சமூகமயமாக்கல்' என்பதற்குப் பதிலாக 'மதமயமாக்கல்' என்ற நடைமுறையே இருந்து வருகிறது. குழந்தை பிறந்ததிலிருந்து இறக்கும் வரைக்கும் எங்கும் எதிலும் மதம், சம்பிரதாயம், சடங்குகள், மதக் குறிகள், வழிபாட்டு முறைகள் இவை பற்றியே அதிகம் பேசப்படுகிறது. -நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் கடவுளுக்குக் கொடுக்கும் மரியாதைகள். இவற்றைக் கற்றுக் கொடுக்கும் அளவுக்கு உடன் வாழும் மனிதர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை, பழகு முறைகள், ஒழுகலாறு பற்றிச் சொல்லித் தரப்படுவதில்லை. அன்றாட வாழ்வில்  நாம் பின்பற்ற  வேண்டிய நடத்தை விதிமுறைகள் பற்றி குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க ஒரே வழி அதை நாம் செய்து காட்டுவதுதான்.
சமூகமயமாதலின் மைல் கற்கள்:
சமூக வளர்ச்சியில் எல்லாக் குழந்தைகளும் நிச்சயம் சில படிகளைக் கடந்தாக வேண்டியிருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் தனியாகவே மகிழ்ச்சியுடன் விளையாடுகிறது. பிதற்று மொழி பேசி கை கால்களை உதைத்து அதன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. அடுத்ததாக தன்னையொத்த குழந்தைகளுடன் விளையாடும் பருவம். இது ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும் போட்டியிடவும், முந்திச் செல்லவும், வளைந்து கொடுக்கவும், யார் 'முதல்' யார் 'கடைசி' என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் ஏற்ற பருவம். இது மேடு பள்ளம்- தோல்விகள் நிறைந்த வழி.
சகாக்கள் ஒருவரை ஒருவர் விரும்புவதும் வெறுப்பதும் நடக்கும். குழுக்களுள் ஏற்படும் அனுபவங்கள் அவர்களுக்கு நிறையக் கற்றுக் கொடுக்கும்.
சமூகச் செயல் திட்டம்:
பெற்றோர்கள் குறிப்பாக தாய் தன் குழந்தையின் சமூக ஊடாட்டங்களில் தலையிட வேண்டிய நேரம் உள்ளது. குழந்தைகள் அக்கம்பக்கத்துக் குழந்தைகளுடன் விளையாடும்போது அவர்களின் விளையாட்டுத் தோழர்களைத் தேர்ந்தெடுக்க உதவ வேண்டும். பால் வேறுபாடு பிரச்சினையில்லை. அந்த வயதில் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் சேர்ந்து விளையாடுவது இயல்பே. அப்போது தாயும் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவது அவர்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் உதவும். அல்லது விளையாட்டை முடிக்க வேண்டிய நேரம் பற்றி அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
அடுத்த (வீட்டுப்) படி:
அக்கம் பக்கத்தாருடன் தொடர்பு கொள்ளும் முறையைப் பற்றி குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் அண்டை வீட்டுக்குச் சிறிது நேரம் சென்று வர அனுமதிக்க வேண்டும். இதுவும் வடிவமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். குழந்தைகளுடன் தாயும் சேர்ந்து சென்று குறிப்பிட்ட நேரத்தில் திரும்பி வந்துவிட வேண்டும். பின்னர் படிப்படியாக குழந்தையைத் தனியாக அனுப்பி தூரத்திலிருந்து கண்காணிக்க வேண்டும். இதனால் வயதுக்கு ஏற்ப குழந்தையின் சமூக வளர்திறன் மேம்படும்.
குழு விளையாட்டு:
குழந்தைகள் தங்கள் நட்பு வட்டத்தை விரிவுபடுத்தும் காலம் இது. முதலில் சொன்னது போலவே வடிவமைக்கப்பட்ட, தாயின் கண்காணிப்பில் எச்சரிக்கையுடன் உடல்நலம் கெடாமல் பாதுகாக்க வேண்டும். பெற்றோர்கள் புத்தாக்க எண்ணத்துடனும் புதுமையாகவும் குழந்தைகள் விளையாடக் கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும், வீட்டில் உள்ள வேலைகளைச் செய்யப் பழக்க வேண்டிய பருவம் இது. அவர்களைத் தூண்டும் விதமாக 'சிற்றுண்டி செய்ய எனக்கு உதவப் போவது யார்?' அல்லது 'வண்டியைத் துடைப்பது எப்படி என்று யாருக்குத் தெரியும்?' என்பது போன்ற கேள்விகள் நிச்சயம் வேலைசெய்யும்.
கெட்ட வார்த்தைகள் தவிர்த்தல்:
குழந்தைகள் சிலநேரம் சுற்றியுள்ளவர்கள் பேசுவதைப் பார்த்து தானும் அதைப்போல பேச வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒவ்வாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதுண்டு. அதன் அர்த்தம் அவர்களுக்குப் புரியாமலும், தெரியாமலே அவர்கள் அந்தச் சொற்களைப் பேசுவதுண்டு. அந்தச் சூழலை எப்படிக் கையாள்வது? உறுதியாகவும் உடனடியாகவும் நடவடிக்கை தேவை. தாமதித்தால் பயனற்றுப் போகலாம். கடுமையாகக் கையாள்வதோடு கோபப்படாமலும் செய்ய வேண்டும். அதாவது, வள்ளுவர் சொல்வதுபோல 'கடிதோச்சி மெல்ல எறிக!'. எடுத்துக்காட்டாக 'இதுபோன்று பேசுவது நம்மைப் போன்ற குடும்பத்தில் வழக்கமல்ல'. 'நல்ல குழந்தைகள் என்றால் நல்ல வார்த்தைகள் பேசுபவர்கள் என்றுதானே பொருள்?' என்பது போன்று சொல்லித் திருத்தலாம். அதே சமயம் அவர்களின் நண்பர்கள் முன்னால் அவர்களை மட்டம் தட்டாமல் பேச வேண்டும்.
முறையற்ற  செயல்கள்:
முரட்டுத்தனமாக அல்லது ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும்போது மேற்கண்ட அணுகுமுறையையே கையாள வேண்டும். ஒருவரையொருவர் தள்ளிவிடுதல், முறையற்று முந்திச் செல்லுதல், இடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும்போது 'இனி விளையாட அனுமதிக்க முடியாது' அல்லது 'வீட்டை விட்டு வெளியில் செல்லாதே' என்பது போன்ற 'தண்டனைகள்' போதும்.
ஆசிரியர்களுடன் பழகும் முறை:
எல்லாச் சமூகச் சூழல்களும் நிறைந்த இடம் பள்ளிக்கூடமாகும். வீட்டிலும் வெளியிடத்திலும் அல்லாத புதிய உறவுகளை, பழகுமுறைகளைக் கற்றுக் கொள்ளக் கூடிய இடம். இதையெல்லாம் ஆசிரியர்கள் கற்றுத்தர வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. ஆசிரியர்களிடம் உங்கள் குழந்தைகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் நடத்தைக் குறைபாடுகள் அல்லது பாராட்டக்கூடிய நடத்தைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். குழந்தை அந்த வகுப்பில் பிரபலமான பிறகு அவர்களுக்கான இருக்கை, விளையாட்டுத் தோழர்கள், போன்றவற்றை ஆசிரியர்கள் முறைப்படுத்துவார்கள். அதோடு, பள்ளியிலி ருந்து வீடு வரை செல்லும்போதும் வரும்போதும் நடந்துகொள்ளும் முறைகளையும் கற்றுத் தருவார்கள்.   சமூக வளர்ச்சிப் படிநிலையில் வெற்றிகளும் சந்தேகமில்லாமல் பல தோல்விகளும் அனுபவமாகக் கிடைக்கும். பெற்றோர்கள் நம்பிக்கையிழக்காமல் குழந்தைகளின் உடல், அறிவு, சமூக வளர்ச்சிக்கான வழிகளைக் காட்ட வேண்டும்.
வீட்டிலும் 'முறை' உண்டு:
வீட்டிலுள்ள ஒவ்வொரு வருக்கும் 'தனித்திருத்தல்' (Privacy) அவசியம் என்பதை மற்றவர்கள் உணர வேண்டும். வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. அவர்களுக்கான 'தனி'யிடம் தான் முக்கியம். சிறுவயது முதலே குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டிய சில 'முறை'கள் (Manners):
1. மூடியிருக்கும் கதவைத் தட்டி உள்ளே இருப்பவர்கள் திறக்கும் வரையோ அல்லது உள்ளே வரச் சொல்லும் வரையோ காத்திருக்கவும்.
2. மற்றவர்களுக்கென்று இருக்கும் அலமாரி, பெட்டிகள், மேசை இழுவைகள் போன்றவற்றை அவர்களின் அனுமதியில்லாமல் திறக்கக் கூடாது.
3. மற்றவர்களுக்கு வந்த கடிதத்தையோ அல்லது அவர்களின் நாட்குறிப்பையோ அவர்கள் கேட்டுக் கொண்டாலொழிய படிக்க முற்படாதீர்கள்.
4. உங்கள் வீட்டு உறுப்பினர்களின் தனிப்பட்ட செய்திகளை வெளியாரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
பங்கிட்டுக் கொள்ளல்:
குடும்ப ஒழுங்கு முறையில் முக்கியமானது பங்கிட்டுக் கொள்ளல் ஆகும். ஒரு படுக்கை யறை, டி.வி., தொலைப்பேசி, குளியலறை, கழிப்பறை அல்லது ஒரு மேசை எல்லாவற் றையும் பங்கிட்டுக் கொள்ளலாம். அதே சமயத்தில் வேலையையும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். அதாவது, பயன்படுத்தியபின் அடுத்தவர்கள் பயன்படுத்தும் வகையில் அவற்றைத் தூய்மையாக வைத்தல் முக்கியமாகும்.
தொலைப்பேசியில் அழைப்பதற்கும் நேரம் காலம் உண்டு. (ராகு காலம் குளிகை காலம் மட்டும் தெரிந்து கொண்டால் போதுமா?) உணவு நேரத்திலும் காலை 9 .00 மணிக்குள்ளும் இரவு 9.30 மணிக்குப் பிறகும் அழைப்பதைத் தவிர்ப்பது நல்லது.  தொலைப்பேசியில் தவறான எண்ணை டயல் செய்தால் உடனே வருத்தம் தெரிவியுங்கள். அல்லது அடுத்த முனையில் உள்ளவர் தவறுதலாக உங்கள் எண்ணைக் கூப்பிட்டுவிட்டால் பொறுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு அவர்கள் இல்லாத நேரத்தில் தொலைப்பேசி வந்தால் அவர்களுக்கான செய்தியைப் பெற்று அவர்கள் வந்ததும் மறக்காமல் செய்தியைத் தெரிவிக்கவும்.
உணவிட ஒழுக்கம் (Table Manners):
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு முறையான உணவிடப் பழக்கம் இருக்கும். உங்கள் சொந்த வீட்டிலோ அல்லது விருந்துக்குச் சென்ற இடத்திலோ நினைவில் கொள்ள வேண்டிய செய்திகள். உங்களுக்கு அருகில் இல்லாத ஏதேனும் ஒரு உணவை எடுக்க வேண்டுமானால் நீங்களாக எடுக்க முயற்சி செய்யாதீர்கள்.
அதற்கு அருகில் இருப்பவரை எடுத்துத் தரச் சொல்லுங்கள். உங்கள் உணவு மிகச் சூடாக இருந்தால் சற்றுப் பொறுத்திருங்கள். வாயால் ஊதிச் சாப்பிடாதீர்கள்.
சூடாக உள்ள உணவை வாயில் போட்டுவிட்டால் அதைத் துப்ப வேண்டாம். உடனே தண்ணீரைக் குடிக்கவும்.
வாயில் உணவை வைத்துக் கொண்டு பேசாதீர்கள்.
நிமிர்ந்து உட்கார்ந்து கையை வாய்க்கு அருகில் கொண்டு சென்று உண்ணுங்கள். குனிந்து உணவுக்கு அருகில் வாயைக் கொண்டு செல்லாதீர்கள்.
உணவகங்களில் சாப்பிடும்போது சில முறைகளுண்டு:
எதையாவது தவறுதலாகச் சிந்திவிட்டால் மானக்கேடாக நினைக்க வேண்டாம். இது நிகழ்வது இயல்பே. ஓட்டல் பணியாளர்கள் அதைத் தூய்மைப்படுத்திவிடுவார்கள்.
ஸ்பூன் போன்ற உண்ணும் கருவிகளைக் கீழே போட்டுவிட்டால் வேறு கரண்டியைத் தருமாறு பணியாளரிடம் கேளுங்கள்.
உங்களுடைய சுமைப் பைகளை மேசையின் மீது வைக்காதீர்கள்.
உணவு மேசையில் அமர்ந்துகொண்டு தலை வாராதீர்கள்.
அனைவரின் முன்பும் அமர்ந்துகொண்டு குச்சியால் பல்லைச் சுத்தம் செய்யாதீர்கள்.
நாம் மற்றவர்களுக்கு விருந்தளிக்கும்போது நமக்கென்று சில கடமைகள் இருப்பது தெரியும்.
அதே நேரத்தில் நாம் விருந்தினராகச் சென்றிருக்கும்போது சில பொறுப்புகள் இருக்கிறது.
உங்களை அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் செல்லாதீர்கள்.
உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்திற்கு மேல் தங்காதீர்கள்.
அழைப்புக்காகக் காத்திருக்காதீர்கள். நீங்களாகச் சென்று உதவுங்கள்.
அழைத்தவரின் விருப்பத்தையறியாமல் இரவு தங்க திட்டமிடாதீர்கள்.
அவர்கள் குடும்பப் பழக்கத்திற்காக முகம் சுளிக்காதீர்கள்.
அவர்கள்  அதிக வேலை செய்யும்படி நடந்துகொள்ளாதீர்கள். உங்கள் வேலையை நீங்களே செய்துகொள்ளுங்கள்.
அவர்கள் அளித்த விருந்துக்கும் விருந்தோம்பலுக்கும் நன்றி சொல்லுங்கள்.
தெருவில் 'நடக்கும்' முறைகள்:
உங்கள் வீட்டிலோ அல்லது நண்பர்களின் வீட்டிலோ இல்லாமல் வெளியில் இருக்கும்போது நீங்கள் பொதுச் சொத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்று பொருள்.
உங்களைப் போலவே அதைப் பலரும் பயன்படுத்த வேண்டும் என்று உணருங்கள்.
நண்பர்களோடு சேர்ந்து கூட்டமாக நடக்காதீர்கள். அது அடுத்தவர்களின் வழியை மறிப்பதாகும். நடைபாதையின் நடுவே நின்றுகொண்டு அரட்டை அடிக்காதீர்கள்.
உங்களுக்காக அடுத்தவர்கள் சுற்றிக்கொண்டு போகவேண்டியிருக்கும்.
பார்ப்பதற்கு இளக்காரமாகத் தெரிந்தாலும் அவர்களை 'முறைத்துப்' பார்க்காதீர்கள். அல்லது வேடிக்கை காட்டாதீர்கள். தெருவில் குப்பை போடுவது அநாகரிகம் என்பதை உணருங்கள்.
ஏதாவது சுவரின் மேல் அல்லது பொது சொத்துக்கள் (பேருந்து போன்றவை) மீது எழுதாதீர்கள் (கிறுக்காதீர்கள்). பொது இடத்தில் யார்மீதாவது இடித்துவிட்டாலோ அல்லது மிதித்து விட்டாலோ வருத்தம் (Sorry) தெரிவியுங்கள்.
இன்னும் நம் பகுதியில் நடந்துகொள்ளும் ஆனால் நடந்துகொள்ளக் கூடாத முறைகளைப் பற்றித் தெரிந்து திருத்திக் கொள்ளுங்கள். மற்றப் பகுதிகளில் (மற்ற நாடுகளில்) நடைமுறையிலிருக்கும் நல்ல பழக்க வழக்கங்களைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.
பெரியவர்கள் சொன்னார்கள் என்பதற்காக அர்த்தமே இல்லாமல் சடங்குகளையும் சாஸ்திரங்களையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் நம் சமூகம், உண்மையிலேயே பெரியவர்களான அறிஞர்கள் சொன்ன பண்பாட்டு முறைகளைக் கடைபிடிக்கக் கற்றுத் தருவதில்லை என்பதுதான் உண்மை.
தனக்கும் அடுத்தவர்களுக்கும் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நன்னடத்தைதான் சிறு வயதிலிருந்தே கற்பிக்கப்பட வேண்டியது.
மாறாக,. பண விரயத்தையும் மன விரசத்தையும் ஏற்படுத்தும் சடங்குகளால் ஏற்படுவது சங்கடங்கள்தான்.

Monday, August 1, 2011

முரண்பாடுகளைத் தீர்க்கும் சமன்பாடு 2


முரண்பாடுகளைத் தீர்க்கும் சமன்பாடு

சொன்னதும் புரிந்துகொண்டதும்:
சில வார்த்தைகள் சூழ்நிலைக்கேற்பவும் பேசுபவர் அல்லது கேட்பவரின் மனநிலைக்கேற்பவும் பொருள் கொள்ளப்படும். எனவே. சொல்லப்படும் வார்த்தைகளை சூழ்நிலையோடு ஒப்பிட்டு மற்றவரின் நிலையிலிருந்தும் கவனித்துப் புரிந்து கொள்ள வேண்டும். அது உறவுகளைப் பலப்படுத்த உதவும்.
வெற்றி முக்கியமல்ல :
உறவுகளை வலுப்படுத்துவதும் தொடர்வதும்தான் முக்கியமே தவிர விவாதத்தில் வெற்றியடைவதோ தன்னுடைய முடிவே  சரியானது என்று நிறுவுவதோ அல்ல. மற்றவர்களின்  கோணத்தில் வெளிப்படும் கருத்தை மதிக்க வேண்டும்.
பழைய விஷயங்களைக் கிளற வேண்டாம்:
பழைய வலிகளையும் பகையையும் நினைத்துக் கொண்டிருந்தால் இப்போதுள்ள சூழ்நிலையின் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இருக்காது. இப்போது என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பது பற்றி முடிவெடுங்கள்.
முரண்பாட்டை மதிப்பிடுங்கள்: முரண்பாடு உங்கள் சக்தியை வீணடித்துவிடும். நீங்கள் முரண்படும் காரணம் உண்மையில் அதற்கான மதிப்புடையதா? அல்லது வீண் வீராப்புக்காக அப்படி நடந்துகொள்கிறீர்களா என்று கவனியுங்கள். உங்கள் வீட்டுக்குப் போகும் வழிகள் பல இருந்தாலும் இந்த வழியில்தான் போவேன் என்று அடம் பிடிக்க வேண்டுமா? மாற்று வழியில் உங்களுக்கு சில ஆச்சரியங்கள் காத்திருக்கலாம்.
மன்னிக்கத் தயாராக இருங்கள்: நீங்கள் மன்னிக்க விருப்பமில்லாமலோ மன்னிக்க இயலாதவராகவோ இருந்தால் முரண்பாட்டைத் தீர்ப்பது  என்பது இயலாத காரியம். ஒருவரைத் தண்டித்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்துவிடுவது, பின்னர் ஈடு செய்ய முடியாத இழப்பையும் காயத்தையும் ஏற்படுத்தும்.
விலகிப் போக முடிவெடுங்கள்:
ஒரு முடிவுக்கு வரமுடியாத சூழ்நிலையில் ஒத்துப் போவதில்லை என ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். அதாவது, பிரிவதென முடிவெடுத்து அவரவர் வழியில் செல்லுங்கள்.
அமைதியாக இருத்தல்:
சிக்கலான தருணத்தில் அதிகப்படியாக செயல்படாதீர்கள். அமைதியாக இருப்பதன் மூலம் உங்களுடைய கருத்துகளை மற்றவர்கள் பரிசீலிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.
உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்துங்கள். செயல்களால் அல்ல: ஒரு  விஷயத்தை உண்மையாகவும்  நேரடியாகவும் நீங்கள் தெரிந்து வைத்துள்ள வலிமையான தகவல் தொடர்பு நுட்பம் மூலம் வெளிப்படுத்தலாம். அதே சமயம் நீங்கள் மிகக் கோபமாகவோ சோர்வடைந்தோ உள்ளபோது  உங்களை நிலைப்படுத்திக் கொள்ள நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறு நடை, சிலமுறை ஆழ்ந்த மூச்சு,செல்லப் பிராணிகளோடு விளையாட்டு, வேறு உங்களுக்குப் பிடித்த -அந்த சமயத்தில் பயன் தரும் செயல்களைக் கையாளுங்கள்.
உங்களுக்குப் பிரச்சினையாக இருப்பதை மட்டும் கவனியுங்கள். பொதுவாக குற்றம் கூறிக் கொண்டிருப்பது வேலையைக் கடினமாக்கும்.
ஒரு நேரத்தில் ஒரு பிரச்சினையை மட்டும் கையாளுங்கள்:
ஒரு விஷயத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும்போது இன்னொரு விஷயத்தைப் புகுத்தாதீர்கள். இதனால் எந்தப் பாத்திரத்தை முதலில் தேய்த்துக் கழுவுவது என்பது போன்ற (kitchen sink effect ) குழப்பம்  ஏற்படாது.
அடி வயிற்றில் அடிக்காதீர்கள். தனிப்பட்ட முறையில் உணர்ச்சி வயப்படக் கூடிய விஷயங்களை விட்டுவிடுங்கள். அது அவ நம்பிக்கையையும், கோபத்தையும், சேதங்களையும் உண்டாக்கும்.
குற்றம் சாட்டுவதைத் தவிர்த்துவிடுங்கள். அது அவர்கள் திருப்பித் தாக்குவதற்கு வழிகோலும். மாறாக, அவர்களின் எந்தச் செயல் உங்களைப் பாதிப்படையச் செய்தது என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.
பொதுவாகச் சொல்லாதீர்கள்: 'எப்போதும்' அல்லது 'எப்போதுமில்லை' என்பது போன்ற சொற்களைப் பயன்படுத்தா தீர்கள். அது துல்லியமில்லா மலும் கோபத்தை அதிகப்படுத்துவதாகவும் இருக்கும்.
திரித்துக் கூறாதீர்கள்:
புதிதாகக் குற்றம் கண்டுபிடிக்க முயற்சி செய்வதும், திரித்துக் கூறுவதும் சமாதானத்தை நோக்கிப் போவதைத் தடுக்கும்.
குப்பை சேர விடாதீர்கள்:
புகார்களையும் உணர்வுக் காயங்களையும் உடனே தீர்க்காவிட்டால் மேலும் மேலும் பெருகிக்கொண்டே இருக்கும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டால் பிறகு அதைப் புரிந்துகொள்வதும் சிக்கலைத் தீர்ப்பதும் கடினமாக இருக்கும்.
நீண்ட மவுனம் தேவையில்லை:
ஒருவருக்கு நீண்ட காலமாக சரியான சமாதானம் சொல்லாமல் மவுனம் காப்பது கோபத்தைக் கிளறும். இரு தரப்பு தகவல் பரிமாற்றம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
தெரியப்படுத்துங்கள்:
உங்களுடைய செயல்கள் மூலமாகவும் சொற்கள் மூலமாகவும் எதிர் தரப்பினரும் பொதுவான முரண்பாட்டுக் கள விதிகளைத் தெரிந்துகொள்ளவும் பயன்படுத்தவும் செய்யுங்கள்.
நேர்மையான சண்டை: படிப்படியாக.....
குறிப்பிட்ட ஒரு முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு நேர்மையான போர்க்களத்தைப் பயன்படுத்தலாம்.
படி.1. சண்டையை ஆரம்பிப்பதற்குமுன் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். உண்மையில் என்னைத் தொல்லைப் படுத்துவது எது? மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யாமலிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்? என்னுடைய மனநிலை பிரச்சினைக்குச் சம்பந்தமுடையதா?
படி.2. சண்டையை ஆரம்பிப்பதற்குமுன் உங்களுடைய நோக்கத்தைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். இதனால் உண்டாகக்கூடிய விளைவுகள், அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கிறதா? என யோசியுங்கள்.
படி. 3 . இந்தச் சண்டை 'வெற்றி' யை நோக்கமாகக் கொண்டதல்ல. மாறாக, இருதரப்பும் மன நிறைவடையவும் சிக்கலுக்குத் தீர்வு காணவுமே என்பது நினைவிலிருக்கட்டும்.
படி. 4 . உங்களுடன் முரண்படும் உங்கள் பங்காளியுடன் இது குறித்துப் பேசுவதற்கு நேரம் குறிப்பிடுங்கள். இது எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகவும், இருவருக்கும் ஏற்ற நேரமாகவும் இருக்க வேண்டும்.
உடனே நேரம் குறிப்பது  எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர்களுக்குப் புரிய வையுங்கள்.
படி. 5. பிரச்சினையைத் தெளிவாக எடுத்து வையுங்கள். உண்மையில் உள்ள நிலையை உங்கள் மன நிலையில் சொல்லுங்கள். 'நான்' வருத்தத்திற்குள் ளானேன், காயப்பட்டேன்,  மனச் சோர்வடைந்தேன்...  என்பது போல பேசுங்கள். 'நீ' என்ற வார்த்தையைத் தவிர்த்துவிடுங்கள். அதாவது, "நீ என்னைக் கோபப்படுத்தினாய்".... என்பது  போல.
படி.6. உங்களோடு முரண்பட்டிருக்கும் ந(ண்)பரைக் கூப்பிடுங்கள். அவருடைய பார்வையில் அவரின் கருத்துகளை எடுத்துவைக்கச் சொல்லுங்கள். குறுக்கிடா தீர்கள். அவருடைய கருத்துகளை உண்மை யாகக் கருத்தூன்றி காது கொடுத்துக் கேளுங்கள். அது பயனளிப்பதாகத்  தெரிந்தால் அதை  மீண்டும் நீங்கள் புரிந்துகொண்டவாறு கூறுங்கள். பிறகு, அவரையும் அதைப் போலவே செய்யச் சொல்லுங்கள்.
படி. 7. எதிர்த் தரப்பினரின் பார்வையில் பிரச்சினையைப் பார்க்க முயற்சி செய்யுங்கள். 'எதிர்க்கும்' பார்வை ஒரு வேளை கருத்தொற்றுமைக்கு வழி கோலக்கூடும்...
நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட!
படி. 8. குறிப்பிட்ட தீர்வை முன்வையுங்கள். அதே போல் மற்றவர் களையும் தீர்வை முன்வைக்கச் சொல்லுங்கள்.
படி. 9. இரு தரப்பு  கருத்துகளின் நிறை-குறைகளை விவாதியுங்கள்.
படி. 10. ஒரு சமாதானத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள். ஒரே வழிதான் இருக்கிறது என்று எதிர்த் தரப்பை நெருக்காதீர்கள்.
ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தபின் கொண்டாடுங்கள். புதிய மாற்றத்தை நடை முறைக்குக் கொண்டு வாருங்கள் . சில காலக் கெடுவுக்குப்பின் புதிய நடைமுறையிலுள்ள குறை-நிறைகளைப் பற்றி விவாதியுங்கள். தேவை என்றால் மீண்டும் பேசி புதிய முடிவுக்கு வாருங்கள்.
சில நேரம் நம்முடைய இந்த அணுகுமுறை பலனளிக்காமல் போகலாம். அப்போது அனுபவமிக்க வல்லுநரை அணுகலாம். அவர்கள் சிறந்த சாத்தியமுள்ள வழிகளை ஆற்றல் மிக்க முறையில் விளக்கி தீர்வை நோக்கி அழைத்துச் செல்வார்கள்.
முரண்பாடு என்பது இயல்பானது,  வரவேற்கத்தக்கது, நலமான உறவுமுறை என்ற நோக்கத்திற்குத் தேவையானது. இதை சிறப்பாகக் கையாண்டால், நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுபவர்கள், வாழ்க்கைத் துணைவர்கள் ஆகியோருடன் உள்ள பிணைப்பு வலுவாகவும் நீடித்தும் இருக்கும்.


Wednesday, July 20, 2011

முரண்பாடுகளைத் தீர்க்கும் சமன்பாடு

முரண்பாடுகளைத் தீர்க்கும் சமன்பாடு

  • Print
மனிதர்கள் ஒவ்வொருவரும் வேறுபட்டவர்கள், மாறுபட்டவர்கள். -இனத்தாலும், குணத்தாலும், நிறத்தாலும், கருத்தாலும். ஒருதாய் மக்கள் என்றாலும் ஒட்டிப் பிறந்தவர்கள் என்றாலும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனித்தனி உடல், மூளை, சிந்தனை. எனவே,  ஒருவருடைய கருத்திற்கும் மற்றவருடைய எண்ணத்திற்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கும். மாறுபட்ட வழிமுறைகளைக் கொண்டிருக்கும் இருவருக்கிடையே நடக்கும் கருத்துப் போராட்டமே முரண்பாடு ஆகும். குடும்பத்தில், சமூகத்தில், அலுவலகச் சூழலில், தொழில் செய்யும் இடத்தில் என்று அனைத்து இடங்களிலும் கருத்து முரண்பாடு ஏற்படலாம்.

உண்மையில் முரண்பாடு என்பது இயல்பானதும், ஆரோக்கியமான உறவு முறைகளைக் கடைபிடிக்க வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றுமாகும். ஆனால், முரண்பாட்டை முற்றவிட்டால் உறவுகளில் முறிவை ஏற்படுத்திவிடும். அதை மரியாதைக்குரிய முறையிலும் நேர்மறையாகவும் கையாளும்போது வளர்ச்சிக்கான வாய்ப்பாக இருக்கும். மேலும், இருவருக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் முரண்பாடுகளைக் கையாண்டு முடிவுக்குக் கொண்டுவரும் திறன்களைத் தெரிந்துகொண்டால் எந்தவொரு மாற்றுக் கருத்துகளையும் தைரியமாக எதிர்கொண்டு தனி வாழ்க்கையிலும், தொழில் சூழலிலும் உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டு வளர்ச்சி காணலாம்.
உறவுகளில் ஏற்படும் முரண்பாட்டைப் புரிந்து கொள்ளுதல்
மாறுபாட்டிலிருந்து முரண்பாடு தோன்றுகிறது. ஒருவருடைய மதிப்பீடுகளை, நோக்கங்களை, பார்வையை, யோசனைகளை, விருப்பங்களை, மற்றவர் மறுக்கும்போது முரண்பாடு தோன்றுகிறது. சிலநேரம் இது பெரிதாகத் தோன்றுவதில்லை. ஆனால், முரண்பாடுகள் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் போது தன்னுடைய பாதுகாப்பிற்கும் மதிப்பீட்டிற்கும் தனித்தன்மைக்கும் ஆபத்து என்று நினைக்கத் தோன்றுகிறது.  ஒவ்வொருவரும் பிறரால்தான்  புரிந்து கொள்ளப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும், மதிப்பளிக்கப்பட வேண்டும், ஆதரிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். தனி வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் இணக்கமான உறவுமுறைகளை ஏற்படுத்திக் கொள்வது சவாலாக இருக்கிறது.
சாதாரணமாக நம் வீட்டில் தத்தித் தவழ்ந்து நடைபோடும் குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே நடைபெறும் போராட்டம் போன்றதுதான் இது. குழந்தை தெருவிற்கு வந்து ஓடி விளையாட விரும்புகிறது. ஆனால், பெற்றோர் குழந்தையின் பாதுகாப்பைக் கருதி அதைத் தடை செய்கிறார்கள். குழந்தை அடம் பிடிக்கிறது. தடையும், தடை மீறலும் பூசலுக்குக் காரணமாகிறது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்களையும் கருத்துகளையும் மதித்து ஏற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் புரிந்துகொள்ளுதலில் ஏற்படும் பின்னடைவு இருவருக்கிடையே இடைவெளியை ஏற்படுத்துவதோடு வீண் விவாதங்களில் ஈடுபட்டு பிரிவை உண்டாக்குகிறது. வேலை செய்யுமிடங்களில் ஏற்படும் முரண்பாடு தொழில் தகராறுகளை (நீதிமன்ற வழக்கு) ஏற்படுத்துகிறது.
ஒவ்வொருவரும் மற்றவரின் கருத்துகளை நடுநிலைமையோடு ஆய்ந்து புரிந்துகொண்டால் பிரச்சினைகளைத் தீர்த்து கூட்டு முயற்சியோடு உறவுகளைப் பலப்படுத்தும்  வழி திறக்கும்.
  • முரண்பாடு என்பது மறுதலித்தல் என்பதன் முற்றிய வடிவமாகும். அதாவது, மாற்றுக் கருத்துள்ள இருவரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ அச்சுறுத்தும் நிலையாகும்.
  • முரண்பாட்டை முளையிலேயே கிள்ளாவிட்டால் புரையோடிய புண்ணாகிவிடும்.
  • முரண்பாட்டைத் திறமையாகக் கையாண்டு தீர்வு காணாவிட்டால் உணர்ச்சிக் கொந்தளிப்பை உண்டாக்கும்.
  • அதே நேரத்தில் முரண்பாட்டைத் திறமையாகக் கையாண்டு நம்பிக்கையையும் உறவையும் பலப்படுத்தினால் அதுவே வளர்ச்சிக்கு வாய்ப்பாக அமையும்.
முரண்பாட்டைக் கையாள குறைபாடான வழியும், சிறந்த வழியும்:
குறைபாடான வழிமுறை
1.  மற்றவரின் கருத்துகளை மதிக்கவும் ஏற்கவும் தகுந்த திறன் பெறாதிருத்தல்.
2. சீற்றம், கோபம், புண்படுத்தல், வெறுப்பான வெளிப்பாடுகள்.
3. நேசித்தவரை வெறுத்தல், விலக்குதல், தனிமைப்படுத்தல்,  அவமானப்படுத்தல், கைவிடுதல்.
4. சமாதானப்படுத்தவோ அவரின் நிலையிலிருந்து சிந்திக்கவோ திறனற்ற நிலை.
5. விரும்பத்தகாத விளைவுகளுக்கு அஞ்சி முரண்பாட்டைச் சந்திக்க மறுத்தல்.
சிறந்த வழிமுறை
1. மற்றவரின் கருத்துகளை மதிக்கவும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையையும் பெறுதல்
2.அமைதியாயிருத்தல், மறுக்காதிருத்தல், மரியாதை கொடுத்தல்
3. மன்னிக்கவும் மறக்கவும் தயாராயிருத்தல் மற்றும் சீற்றத்தைக் கைவிடுதல்
4. சமாதானத்தை எதிர்பார்த்து தண்டனையைத் தவிர்க்கும் குணம்.
5. முரண்பாட்டை நேர்கொள்வது இருவருக்கும் நன்மையே என்ற நம்பிக்கை உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனும் முரண்பாட்டுத் தீர்வும்:
முரண்பாடுகள் வலிமையான உணர்வுகளைத் தூண்டிவிடுவதோடு மனக்காயத்தையும், ஏமாற்றத்தையும், உடல் - மன  நலக்கேட்டையும் விளைவிக்கும். முரண்பாடுகளை ஆரோக்கியமற்ற வழிகளில் கையாளும்போது கோபத்தையும், உறவு முறிவையும் சரிசெய்ய முடியாத விளைவுகளையும் ஏற்படுத்தும். ஆனால், சரியான வழியில் கையாளும்போது மற்றவர்களைப் புரிந்துகொள்வதோடு நம்பிக்கை மற்றும் உறவுகளை வலுப்படுத்தலாம்.
கணவன் மனைவியருக்கிடையே ஒன்றுமில்லாத விஷயங்களுக்கெல்லாம் விவாதம் ஏற்படுவதும் பிரிவதும் முரண்பாடுகளைக் கையாளும் திறன் இல்லாததே. வீட்டை ஒழுங்குபடுத்துவது உடையணிவதில் ரசனையில்லாமலிருப்பது போன்ற சிறு பிரச்சினைகளுக்குக்கூட சண்டை ஏற்படுகிறது.
  • அமைதியாக இருப்பதன் மூலம் மற்றவர்களின்  வார்த்தைகளையும் நடத்தைகளையும் சரியாகப் புரிந்துகொண்டு உறவாடலாம்.
  • உணர்ச்சிகள் கட்டுப்பாட்டில் இருக்கும்போது உங்களுடைய தேவைகளை பயமுறுத்தாமலும் கோபப்படாமலும் தெரிவிக்கலாம்.
  • மற்றவர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளுக்கும் பேசுவதற்கும் இடம்கொடுத்து கவனியுங்கள்.
  • மரியாதைக் குறைவான வார்த்தைகளையும் நடத்தைகளையும் தவிருங்கள்.
முரண்பாடுகள் அழுத்தும் சூழ்நிலைகள்: நீங்கள் சந்திக்கும் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அந்த நேரத்தில் சம நிலையிலும், ஒருமுகப்பட்டும், கட்டுப்பாடாகவும் இருப்பது முக்கியம். இல்லையென்றால் முரண்பாடுகளை முறையற்ற வழிகளில் கையாண்டு பிரச்சினை தீவிரமடையக்கூடும்.
மக்கள் பொதுவாக முரண்பாடுகளைக் கையாளத் தெரியாமல் கீழ்க்காணும் வழிகளில் தங்கள் உணர்ச்சிகளை  வெளிப்படுத்து கிறார்கள்.
நெருப்பின் மேல் நிற்பது : 'சுடுதண்ணியைக் காலில் ஊற்றிக் கொண்டதைப் போல' என்று சொல்வார்களே அதுபோல் உணர்ச்சிகள் சூடேறியும் முடுக்கி விடப்பட்டும் அதிக உணச்சிவயப்பட்டு ஓரிடத்தில் உட்காராமல் இருப்பது.
அதீத அமைதி :
எந்த உணர்ச்சியையும் வார்த்தைகளையும் வெளிப்படுத்தாமல் விலகியிருத்தல், மவுனம் காத்தல்.
மவுனப் போராட்டம்: இது இருவேறு உணர்ச்சிகளின் கலவையான வெளிப்பாடு. செயலற்ற வெளித்தோற்றமும் உள்ளுக்குள் புகைமூட்டமுமாக இருப்பது.
மன அழுத்தம் முரண்பாட்டைக் கையாளும் திறனைக் குறைக்கிறது. அதாவது,
  • அடுத்தவர்களின் உடல் மொழியைப் (body language) புரிந்துகொள்ள இயலாது.
  • ஒருவர் சொல்வதைக் கேட்கும் மனநிலை இருக்காது.
  • உங்கள் உணர்ச்சிநிலை பற்றிய விழிப்புணர்வு இல்லாமை.
  • உள்மனத் தேவைகளோடு தொடர்பு இல்லாமை.
  • உங்கள் தேவைகளை தெளிவாக வெளிப்படுத்த இயலாமை.
நீங்கள் மன அழுத்தத்தோடு இருப்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
  • உங்கள் உடலின் ஏதேனும் ஒரு பகுதி அழுத்தமாகவோ இறுக்கமாகவோ உணரலாம்.
  • மூச்சு விடும்போது வயிறு மற்றும் மார்புப் பகுதி இயல்பாக அசையாமல் இருக்கலாம்.
  • முரண்பாடு உங்கள் நேரத்தையும் கவனத்தையும் உறிஞ்சிக் கொள்ளலாம்.

    உணர்ச்சிகளைப்  பற்றிய விழிப்புணர்வு வேண்டும்
  • மற்றவர்களைப் பாதிக்கும் காரணிகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.
  • உங்களை நீங்களே புரிந்து கொள்வதோடு உங்களைப் பாதிக்கும் காரணிகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.
  • முரண்பாடு தீரும் வரை அந்த நோக்கத்திலிருந்து விலக வேண்டாம்.
  • தெளிவாகவும் திறமையாகவும் தொடர்பு கொள்ளுங்கள்.
  • மற்றவர்களை ஈர்த்து தாக்கத்தை ஏற்படுத்துங்கள்.
அய்ம்புலன்களையும் ஒருங்கிணைத்து முரண்பாட்டுச் சிக்கலைத்  தீர்க்கப் பழக வேண்டும்.
உங்கள் உணர்ச்சிகளோடு உங்களுக்கு  உள்ள உறவு ?
ஒவ்வொரு நிமிடமும் உணர்ச்சிகள் மாறி மாறி அலைமோதுகின்றனவா? அதை உணர முடிகிறதா?
உணர்ச்சிகள், உடல் ரீதியான உணர்வுகளைத் தூண்டி விடுவதாக, -அதாவது வயிறு மார்புப் பகுதிகள் அழுத்தப்பட்டதாக உள்ளதா?
கோபம், கவலை, பயம் , மகிழ்ச்சி போன்ற மெய்ப்பாடுகளைப் பொருத்தமான இடத்தில் பொருத்தமான முகபாவனையோடு வெளிப்படுத்த முடிகிறதா?
கடுமையான உணர்ச்சிகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் உங்களுக்கே தெரியும் வகையிலும் இருக்கிறதா?
முரண்பாடுகளைப் பற்றிய முடிவெடுக்க வேண்டியவரின் உணர்ச்சிகளுக்குக் கவனம் செலுத்த முடிகிறதா?
இவற்றில் ஏதேனும் அறியமுடியாத அளவுக்கு அனுபவமற்றதாக இருந்தால் உங்கள் மனவெழுச்சி குறைபாடுள்ளதாக இருக்கிறது என்று பொருள்.
முரண்பாட்டைத் தீர்ப்பதில் சொற்களற்ற தகவல் தொடர்பின் பங்கு:
முரண்படும்போதும் விவாதத்தின்போதும் முக்கியத் தகவல்கள் வார்த்தைகளில்லாமல் (nonverbal communication)  பரிமாறப்படுகின்றன. அதாவது, முகபாவனைகள், தோரணைகள் சைகைகள், அசைவு, குரலின் கடுமை.
மனிதர்கள் மனக் குழப்பத்திலிருக்கும்போது பிரச்சினைகளைச் சொல்வதற்கு வார்த்தைகளை மிகக் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள். ஒன்றைக் கேட்டு அதை உணரும்போது அதை நம்முடைய தேவைகள் உணர்ச்சிகளோடு தொடர்புப்படுத்திக் கொள்கிறோம்.
நீங்கள் முரண்பாட்டின் மய்யத்திலிருக்கும்போது அடுத்தவர்களின் சொற்களற்ற குறியீடுகள் அவர்கள் உண்மையில் சொல்ல வருவது என்ன? எப்படி மறுமொழிகிறார்கள்? என்று தெரிவிப்பதை உணர்வீர்கள். அது பிரச்சினையின் ஆணி வேரைக் காட்டுவதோடு புதிய நம்பிக்கையைக் கொண்டு வரும். சின்ன ஒலி, நம்பிக்கையூட்டும் தொடுதல், ஆர்வமான முகபாவனை போன்றவை இறுக்கம் தளரும் வழியில் நீண்ட தூரம் அழைத்துச் செல்லும்.
உங்கள் மனவெழுச்சி பற்றிய அறிவுதான் மற்றவர்களின் மெய்ப்பாடுகளைப்  (emotions) புரிந்துகொள்வதற்கு உதவும் - வார்த்தைகளற்ற குறியீடுகளைப் புரிந்துகொண்டு முரண்பாடு களைத் தீர்க்கும்.
முரண்பாட்டைத் தீர்க்க என்ன செய்யலாம்?
- அடுத்த இதழில்

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Wednesday, June 1, 2011

கொதிக்கும் ரத்தம்

கொதிக்கும் ரத்தம்

மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா உயிரினங்களுக்கும் ரத்தவோட்டம் இருக்கிறது. தாவரங்களுக்கு ரத்தம் என்பது தண்ணீர்தான். எல்லா விலங்குகளுக்கும் ரத்தம் சிவப்பாக இருப்பதில்லை. சில உயிரினங்களுக்கு வெள்ளையாகக்கூட இருக்கிறது. பதினாறாம்  நூற்றாண்டு வரை உடலில் ரத்தம் இருக்கிறது என்று தெரியுமே தவிர அது சுற்றோட்டம் (circulation)ஆகிக் கொண்டிருக்கிறது என்பது மருத்துவர்களுக்குக் கூடத் தெரியாமல்தான் இருந்தது.
இங்கிலாந்தில் வாழ்ந்த வில்லியம் ஹார்வி ( ஏப்ரல் 1, 1578 -  ஜூன் 3, 1657 )என்பவர்தான் இதயம் ஒவ்வொரு முறையும் துடிக்கும்போது இரண்டு அவுன்ஸ் ரத்தம் வெளியேற்றப் படுவதையும் நிமிடத்திற்கு எழுபத்திரண்டு முறை துடிப்பதையும் ஒரு நாளைக்கு ஆயிரத்து அய்நூறு காலன் ரத்தம் அதன் வழியாக செல்வதையும்  கண்டறிந்தார். இதயத்திலிருந்து ரத்தம் தமனிகளின் மூலமாக வெளிச்சென்று சிரைகளின் மூலமாய் அது மீண்டும் இதயத்தை அடைகிறது என்பதையும் வில்லியம் ஹார்வி கண்டறிந்து உலகிற்குச் சொன்னார்.
இந்த ரத்தச் சுற்றோட்டம் குறிப்பிட்ட அழுத்தத்தில் இருக்கவேண்டும். குறையினும் மிகையினும் நோய் செய்யும்!
18 அல்லது அதற்கு அதிகமான வயதையுடைய வயதுவந்தோருக்கு பின்வரும் இரத்த அழுத்த வகைப்பாடு பயன்படுத்தப்படுகிறது. கீழே உள்ள அட்டவணை   2 அல்லது அதற்கு அதிகமான அலுவலக வருகையின் போது சரியாக அளவிடப்பட்ட அமர்ந்த நிலையில் எடுக்கப்பட்ட  இரத்த அழுத்த அளவுகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
வயதுவந்தோருக்குரிய இரத்த அழுத்தத்தின் வகைப்பாடு
நம்முடைய ரத்த அழுத்தம் இயல்பான நிலையில் இருந்தால் நல்லது. ஆனால், எல்லோரும் எல்லா நேரத்திலும் அமைதியாக இருந்துவிட முடியாது. தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள், அலுவலகப் பிரச்சினைகள், தொழிலில் ஏற்படும் நட்டம், நம்பிக்கைத் துரோகம்,உலக நடப்புகள், ஆகிய காரணங்களால் நம்முடைய ரத்த அழுத்தத்தில் மாறுதல் ஏற்படும்.
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்காக எந்த உணர்ச்சியும் இல்லாத ஜடமாக வாழ்ந்துவிட முடியாது.
"நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடென்ப "
என்பது தொல்காப்பியம் கூறும் மனவெழுச்சிகள் (emotions). சூழலுக்கேற்ப நம்முடைய உணர்சிகளை வெளிப்படுத்தித்தான் ஆகவேண்டும். அதை அழுத்தி வைக்கவோ அளவுக்கதிகமாக வெளிப்படுத்தவோ கூடாது. மனதிற்கு மகிழ்ச்சியளிக்காத நிகழ்வுகள் நடக்கும்போது ரத்த அழுத்தம் நிச்சயம் அதிகரிக்கும். அம்மாதிரியான நிகழ்ச்சிகள் நடக்காமல் தடுப்பது என்பது இயலாத காரியம். ஆனால், மனதையும் உடலையும் பயிற்சிகள் மூலம் பக்குவப்படுத்தி குருதியழுத்தத்தைக் குறைத்துக்கொள்ள முடியும்.
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்

உயர் ரத்த அழுத்தம் உள்ள பலருக்கு (95%) அதன் அறிகுறி தெரிவதில்லை.
அதனால்தான் இதை அமைதிக் கொலையாளி (silent killer) என்கிறார்கள். உயர் ரத்த அழுத்தம் ரத்தக் குழாய்களைச் சுருக்கி ரத்தவோட்டத்தைத் தடை செய்கிறது. இதனால் இதயமும் சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. சில நேரம் மூளையையும் தாக்குகிறது. இதனால் இதயத்திற்கு அதிக வேலைப்பளு ஏற்படுகிறது. இதன் காரணமாக உடல் செயலிழப்பு, இதய செயலிழப்பு, சிறு நீரக செயலிழப்பு, நெஞ்சுவலி போன்றவை ஏற்படுகின்றன.
மேற்கண்ட பிரச்சினைகள் வராமல் தவிர்க்க, முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்த அழுத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி அவரவர் களுக்கு ஏற்ற உடற்பயிற்சி,உணவு அட்டவணையை தயார் செய்துகொண்டு அதை தினசரி பின்பற்ற வேண்டும்.
உயர் ரத்த அழுத்தத்திற்கான சில தவிர்க்க  இயலாத காரணிகள் முதுமை: முதுமை காரணமாக ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தைத் தவிர்க்க முடியாது. இனம்: ஆப்ரிக்க அமெரிக்கர்கள் (கறுப்பினத்தவர்) போன்ற ஒருசில இனங்களில் மற்ற இனத்தாரைக் காட்டிலும் இளம் வயதிலேயே ரத்த அழுத்தம் தாக்குகிறது.
சமூக அந்தஸ்து: கீழ் நடுத்தர மக்களுக்கும் கல்வியறிவு குறைந்தவர்களுக்கும் சமூகத்தில் உயர்நிலையில் இருப்பவர்களைக் காட்டிலும் உயர் ரத்த அழுத்தம் சிக்கலை ஏற்படுத்துகிறது.
பரம்பரை: குடும்பச் சொத்தாக அனைவருக்கும் இந்நோய் வருவதுண்டு.
கர்ப்பக் காலம்: நிறைய பெண்களுக்கு கருவுற்றிருக்கும் காலத்தில் உயர் ரத்த அழுத்தம் வருவதுண்டு. பேறு காலத்திற்குப் பின் இயல்பாகிவிடும்.
உயர் ரத்த அழுத்தத்திற்கான சில மாற்றக் கூடிய  காரணிகள்
உடற்பருமன்: அதிக்கபடியான உடல் எடை உயர் ரத்த அழுத்தத்திற்கான முதன்மைக் காரணமாகும்.
சோடியம் உப்பு: சோடியம் சென்சிடிவ் என்ற நுட்பமான உணர்ச்சி  உள்ளவர்களுக்கு  உட்கொள்ளும் உப்பின் அளவிற்கேற்ப ரத்த அழுத்தம்  அதிகரிக்கவோ குறையவோ கூடும்.சோடியம் உப்பு, உணவின் மூலமாகவும் சில வலி நிவாரணி மருந்துகள் மூலமாகவும் உட்செல்கிறது.
மது: அதிக அளவில் தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
மருந்துகள்: கருத்தடை மாத்திரைகள், உணவுக் கட்டுப்பாடு (diet) மாத்திரைகள், மற்றும் ஒவ்வாமைக்கான மருந்துகள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
வேறு சில காரணங்கள்: புகைப் பிடித்தல் அல்லது புகைப்பவர்களின் அருகில் தொடர்ந்து இருத்தல்.
சர்க்கரை நோய். (சாப்பிடாத போது 125 mg /dL க்கும் அதிகமாக  இருந்தால்.)
சிறுநீரகக் கோளாறு.
உழலுழைப்பு இல்லாமை, உட்கார்ந்தே வேலை செய்பவர்கள்.
45 வயதைத் தாண்டிய ஆண்கள்.
55 வயதைத் தாண்டிய பெண்கள்.
கருத்தடை மாத்திரை உட்கொள்பவர்கள்.
மேற்கண்ட காரணிகளைத் தவிர்ப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?
பொதுவாக ரத்த அழுத்தம் அதிகரித்திருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை. வழக்கமான உடற் பரிசோதனைகளின் போது இதைத் தெரிந்து கொள்ளலாம். உங்கள் நெருங்கிய உறவினர் களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பின் அதற்கான வாய்ப்பு உங்களுக்கும் அதிகம் என்பதைக் கவனத்தில் கொண்டு அவ்வப்போது சோதனை செய்து கொள்ளுங்கள். மேலும், மன உளைச்சலைத் தரும் நிகழ்வுகளால் தொடர்ந்து தூக்கமின்றியும் தவிப்பாகவும் இருக்கும்போது சோதனை செய்து மருத்துவரின்  ஆலோசனையின்படி நடப்பது நல்லது.
உயர் ரத்த அழுத்தத்திற்கான சிகிச்சைகள் என்ன?
உயர் ரத்த அழுத்தத்திற்கு முக்கியமாக வழக்கமான வாழ்க்கை முறையிலிருந்து (life style)  சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.
1. உடல் எடையைக் குறைத்தல்.
2. புகைப் பிடிப்பதை நிறுத்துதல்.
3. ஆரோக்கியமான உணவு முறை
4. உணவில் உப்பைக் குறைத்தல்.
(தமிழ்நாட்டு மக்கள் ஏன்தான் இவ்வளவு  அதிக உப்பும் சர்க்கரையும் சாப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை!)
5. நாள்தோறும் முறையான உடற்பயிற்சி.
6. மது அருந்துவதைக் குறைத்தல்.
இதனுடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம். எச்சரிக்கை! மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளைக் கூட்டியோ குறைத்தோ உட்கொள்ளாதீர்கள்.
எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்?
நலமான (ஆரோக்கியமான)உணவு, அதாவது DASH (Dietary Approaches to Stop Hypertension)  diet  எனப்படும் உணவு முறை ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு மிகச் சிறந்த வழியாகும். இது வழக்கமாக உண்ணும் முறையிலிருந்து மாறுபட்டது. அதாவது,
* அதிக அளவு பழங்கள்,காய்கறிகள், மற்றும் கொழுப்புக் குறைக்கப்பட்ட பால் உணவுகள்.
* கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல்.
* தானிய வகைகள், மீன், கொழுப்பில்லாத கோழிக் கறி ஆகியவை.
* இனிப்பு மற்றும் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவற்றைக் குறைவாக உண்ணல்.
* மக்னீசியம், பொட்டாசியம் , மற்றும் கால்சியம் ஆகியவை அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளல்.
இக்காலத்தில் இளைஞர்களையும் கூட இந்நோய் தாக்குவதால் 20 வயதிலிருந்தே ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது. அவர்களும் மேற்கண்ட உணவு முறைகளையும் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வது கட்டாயம்.
தினந்தோறும் நம்மைச் சுற்றி பல அநியாயங்களும், மனக்குமுறல்களை உண்டாக்கும் நிகழ்வுகளும் நடந்துகொண்டு தானிருக்கின்றன. அவற்றை எதிர்த்துப் போராடவேண்டிய சமுதாயக் கடமையும் நமக்கிருக்கிறது. அப்போதெல்லாம் நம் குருதியழுத்தம் கொதி நிலைக்கு வரும் என்பதும் உண்மை. அந்த உணர்ச்சிதான் நமக்குப் போர்க்குணத்தைக் கொடுக்கிறது என்பதும் உண்மை. ஆனால், அந்தப் போர்க்களத்தில் நிலைத்து நிற்க நம் உடலையும் மனதையும் பக்குவப்படுத்த மேற்சொன்ன நல வழிகளைப் பின்பற்றி நீண்ட நாள் வாழ்ந்து   நாமும் சமுதாயமும் பயன் பெறுவோம்.
- க. அருள்மொழி