Popular Posts

Thursday, October 28, 2010

பிரச்சாரம்

பிரச்சாரம்
மக்களை முட்டாள்களாக்கப் பஜனை செய்யுமாறு பிரச்சாரம் செய்வதை விட்டு, மக்களை அறிவுள்ள மக்களாக்க அறிவுப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.
விடுதலை, 5.1.1972

Tuesday, October 26, 2010

மூடநம்பிக்கையின் முடைநாற்றம்!

மூடநம்பிக்கையின் முடைநாற்றம்!
ஆவி பயத்தில் மாடியில் இருந்து குதித்த 11 பேர்- இறந்தது குழந்தை
பாரிஸ், அக். 26- பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் புறநகரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் மூன்றாம் மாடியில் தங்கியுள்ளனர். சம்பவத்தன்று அதிகாலை அவர்கள் அனைவரும் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு குழந்தை பசியால் அழுதது.
உடனே அக்குடும்பத்தைச் சேர்ந்த ஆடை அணியாத நிர்வாண நபர் ஒருவர் குழந்தைக்கு பால் கொடுக்க பால் புட்டியுடன் எழுந்து சென்றார். அதே நேரத்தில் அவரது மனைவியும் அழும் குழந்தையை நோக்கி வந்தார். சுவர் நிழலில் நிர்வாண நபரின் உருவம் ஆவி (பேய்) போன்று தெரிந்ததாம். இதனால் பயந்த அவரின் மனைவி பேய்... பேய்... என அலறினார். இதனால் டி.வி.பார்த்துக் கொண்டிருந்த குடும்பத்தினர் அலறியடித்தபடி பரபரப்புடன் எழுந்தனர்.
அப்போது நிர்வாண நபரை அவரது மைத்துனி கத்தியால் குத்தினார். உடனே, அந்த நபர் வீட்டின் முன்புற கதவை டமார் என திறந்தார். இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்த அனைவரும் உண்மையில் பேய் நடமாட்டம் இருப்பதாக கருதினராம். எனவே, தப்பிக்க 3-ஆம் மாடியில் இருந்து ஒருவர் பின் ஒருவராக 11 பேர் குழந்தைகளுடன் கீழே குதித்தனர். இதில் அனைவரும் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு குழந்தை பரிதாபமாக இறந்தது. காயம் அடைந்தவர்களுக்கு கை, கால்கள் மற்றும் உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்களின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.
                     சிந்திப்பவனே மனிதன்.நீங்கள்?

மதப் பிரச்சாரகர்கள்

மதப் பிரச்சாரகர்கள்...
நாள் முழுவதும் பாடுபட்டும், வேலை செய்தும் குடிக்கக் கஞ்சிக்கு வழி யில்லாது அலையும் நம் சகோதரர் களைத் திரும்பிப் பார் என்றால், நமது மதப் பிரச்சாரகர்கள் கடவுளைப் பார் என்கிறார்கள்
                                                                                               -தந்தை பெரியார் 

தீபாவளி பற்றி...?

தீபாவளி பற்றி...?
காளை மாட்டுக்கும், பசு மாட்டுக்கும் பசுங்கன்றுதான் பிறக்கும்! எருமைக் கன்றுக்குட்டி பிறக்காது.
விஷ்ணுக் கடவுளின் அவதாரத்துக்கும், பூமிக் கடவுளச்சிக்கும் பிறந்த பிள்ளை எப்படி அசுரப் பிள்ளை?
பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் இரண்யாட்சதன் கடலில் ஒளிந்து கொண்டான் எனத் தீபாவளிக் கதை கூறுகிறது!
பூமி தட்டையா? தட்டையாக இருந்தால்தானே சுருட்ட முடியும்? பூமி உருண்டையானது என்கிற அறிவே இல்லாதவனால் எழுதப்பட்டதுதானே தீபாவளிக் கதை!

Sunday, October 24, 2010

யானை



சித்தர் பாடல்கள் 


நேசமுற்றுப் பூசைசெய்து நீறுபூசிச் சந்தனம்
வாசமோடு அணிந்துநெற்றி மைதிலகம் இட்டுமே
மோசம்பொய் புனைசுருட்டு முற்றிலும்செய் மூடர்காள்
வேசரிகளம் புரண்டவெண் ணீராகும் மேனியே. 

                         -                                                 -சிவவாக்கியர்

Friday, October 22, 2010

வாலை அறு









வாலை அறு
   
 
   




வேப்பமரத்தில் பால் வடிவது அம்மன் சக்தியாலா?
சிகரம்
அப்பா அப்பா ... எல்லோரும் கூட்டமாப் போறாங்களே எங்கே! மதியொளி கேட்டாள்.
கூட்டத்தைத் திரும்பிப் பார்த்த அவள் தந்தை வளவன், ஏ...தம்பி, இங்கவா... என்று கூட்டத்தில் சென்ற ஒருவனை அழைத்து, எங்கப்பா எல்லோரும் கூட்டமாப் போறீங்க? என்று கேட்க,
வாய்க்கால் கரையில் ஒரு வேப்பமரத்தில் பால் வடியுதாம்.... வாயில் வைத்தால் தித்திக்கிதாம்.... என்று சொல்லிக் கொண்டே ஓடி கூட்டத்தில் மீண்டும் சேர்ந்தான்.
வேப்ப மரத்தில் பால் வடியுமா? என்று மதியொளி வளவனிடம் கேட்கும்போது, அவ்வழியே கிண்ணத்துடன் வந்த சின்னசாமி,
இங்கபாருப்பா ஆத்தா மகிமையை! கசக்கிற வேப்பமரத்தில் வடியிறபால் எப்படித் தித்திக்குதுபாரு! என்று வளவனிடம் கிண்ணத்தில் உள்ள வேப்பமரத்தில் வடிந்த-பாலை எடுத்துவந்து காட்டினார்.
அதற்குள் அப்பாலை விரலால் தொட்டு, தன் வாயில்வைத்த மதியொளி, ஆமாம்ப்பா... தித்திக்குதுப்பா! என்று மகிழ்வும் வியப்பும் பொங்கக் கூறியபடியே,
இது மாரியாத்தாள் மகிமையாப்பா? என்று இரண்டாவது கேள்வியையும் கேட்டாள்.
இல்லம்மா! என்று வளவன் கூற, கோபம் பொங்க, நீ வேணும்னா வாயில் ஊற்றிப்பாரு! என்று கிண்ணத்தை நீட்டினார் சின்னசாமி.
மாரியாத்தாள் மகிமையில்லாமல் கசப்பான தன்மைகொண்ட வேப்பமரத்தில் எப்படி இனிப்பான பால் வடியும்? என்றாள் மதியொளி.
நீயே கேளும்மா! என்றார்.
நான் சொல்லப் போறத இருவரும் கேளுங்க என்று வளவன் கூற, சின்னசாமி திண்ணையில் அமர்ந்தார்.
வேப்பமரத்தில் பழுக்கும் வேப்பம்பழம் கசக்குதா? தித்திக்குதா? வளவன் கேட்ட கேள்வி சின்னசாமியின் சிற்தனையைத் தூண்டியது.
வேப்பம்பழம் தித்திக்கும் என்றாள் மதியொளி.
வேப்பமரத்தில எல்லாமும் கசக்கும் என்பது சரியல்ல என்பது இப்போது புரிகிறதா? வேப்பமரத்துப் பழம் தித்திப்பது போலத்தான் வேப்பம்பாலும் தித்திக்கிறது.
எல்லா வேப்ப மரத்திலும் பால் வடியுமா? இந்த மரத்தில் மட்டும் எப்படி வடியுது? சின்னசாமி மடக்கினார்.
பால் வடியும் மரத்திற்கு அருகில் தண்ணீர் நிற்கிறதா? வளவன் கேட்டார்.
ஆம். வாய்க்கால் கரையில்தான் மரம் உள்ளது
உங்களுக்கு வயது அறுபது இருக்கும். இதற்கு முன் இதுபோல வேப்பமரத்தில் பால் வடியுறதப் பார்த்திருக்-கீங்களா?
நான்கைந்து இடத்தில் பார்த்திருக்கேன்.
தண்ணீர் இல்லாத இடத்தில் உள்ள எந்த வேப்பமரத்திலாவது பால் வடிந்ததா?
சின்னசாமி சற்று யோசித்துவிட்டு,
இல்ல இல்ல. எல்லாம் தண்ணீருக்கு அருகில் இருந்த மரங்களில்தான் பால்வடிந்தது என்றார்.
வேப்பமரத்தில் பால் வடியறதுக்கும், தண்ணீர் அருகில் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் மதியொளி குறுக்கிட்டுக் கேட்டாள்.
வேப்பமரத்தின் அடிமரம், கிளை இவற்றுள் மாவுச்சத்து (ஸ்டார்ச்சு) நிரம்பியிருக்கிறது. வேப்பமரத்தின் இலைகள் இந்த மாவுச்சத்தைச் சர்க்கரையாக மாற்றும். அதன் விளைவுதான் வேப்பம் பழம் இனிப்பாக இருக்கிறது.
வேப்பமரத்திற்கு அருகில் நீர்ப்பகுதி அதிகம் இருந்தால், மரத்தினுள் செல்லும் தண்ணீரின் அளவு அதிகமாகி, அதன்காரணமாய் வேப்ப-மரப்-பட்டைக்கு அடியிலுள்ள திசு (புளோயம்) பாதிக்கப்பட்டு வெடிக்க, மரத்திலுள்ள மாவுச்சத்து அதிகத் தண்ணீர் மரத்துக்குள் வந்ததால், அதில்கலந்து பால்போல் மாறி, அந்த வெடிப்பின்-வழியே கசிந்து சொட்டும். இதைத்தான் வேப்பமரத்தில் பால்வடிவதாக நாம் எண்ணுகி-றோம், காரணம் புரியாததால் மாரியாத்தாள் மகிமை என்று நம்புகிறோம்.
மரத்துக்கு அருகிலுள்ள தண்ணீரின் அளவு குறைந்தபின், மரத்துக்குள் செல்லும் நீரின் அளவும் குறைய, பால்வடிவது நின்று போகும்.
பால்வடிகின்ற மரங்கள் எல்லாம் தண்ணீருக்குப் பக்கத்தில் இருப்பதும், வறண்ட பகுதியில் உள்ள மரத்தில் பால் வடிவதில்லை யென்பதும் இந்த உண்மையை உறுதியாக்கும் வளவன் தெளிவாக்கினார்.
சின்னசாமி கிண்ணத்தைக் கவிழ்த்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். எண்ணம் மாறியதை அது உணர்த்தியது. என்ன தாத்தா அப்பா சொல்வது சரிதானே! மதியொளி கேட்டாள். சின்னசாமி சிரித்தபடி தலையசைத்தார்

விடாக்கண்டன்


100 முறை தோல்வி ஆனால்?

பிடிவாத குணம் இல்லாத குழந்தைகளே இல்லை எனலாம். குழந்தைகள் எதற்கெல்லாம் பிடிவாதம் செய்வர்? தங்களுக்குப் பிடித்த சாப்பிடும் பொருள்கள், விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் பிடிவாதம் செய்வர். அல்லது தாங்கள் விரும்பும் கடற்கரை, பொருட்காட்சி, மிருகக் காட்சிசாலை... போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லவில்லை எனில் பிடிவாதம் செய்வர்.
மேலும், தொடர்ந்து ஒவ்வொரு முறையும் பள்ளியில் விடுமுறை நாள்கள் வரும்போது அழைத்துப் போகச் சொல்லி விடாமுயற்சியுடன் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பர்.
குழந்தைகள் தங்களுடைய பிடிவாத குணத்தையும் விடாமுயற்சியையும் படிப்பிலும், பிற திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் காட்ட வேண்டும். இப்படி, பிடிவாத குணத்தினாலும் விடாமுயற்சியினாலும் இன்று உலகம் புகழும் அறிஞராக _ பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்பவரே தாமஸ் ஆல்வா எடிசன்.
எடிசன் ஓர் ஆய்வினைத் தொடங்கிவிட்டால், அதன் முடிவைக் கண்டறியும்வரை ஓய்வே எடுக்க மாட்டார். ஒரு நாள், எடிசனின் சோதனைச்சாலையில் அவரது உதவியாளர்கள் இசைத்தட்டு ஒன்றினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அன்று இரவுக்குள் இசைத்தட்டினை உருவாக்கிவிட வேண்டும் என உதவியாளர்களுக்கு எடிசன் கூறியிருந்தார்.
உதவியாளர்களுள் ஒருவர் கிராமபோன் இசைத்தட்டினைத் தயாரிப்பதற்காக மெழுகு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பலமுறை முயற்சி செய்தும் மெழுகினைப் பக்குவமான தேவையான பதத்தில் தயார் செய்ய அவரால் முடியவில்லை. எரிச்சலும் வெறுப்பும் அடைந்தார்.
எடிசனிடம் சென்று, பலமுறை முயன்றும் மெழுகு சரியான பதத்தில் வரவில்லை. நாம் செய்த செயல்முறையின் அடிப்படையில் ஏதோ ஓர் தவறு உள்ளது. ஆகையால், அதனை முதலில் சரிசெய்ய வேண்டும். இன்றைய ஆய்வினை இத்துடன் நிறுத்தி விடலாம். நாளை புதிதாக முயற்சி செய்யலாம் என்றார்.
எடிசன் கோபத்துடன், மெழுகு சரியான பதத்தில் வரவில்லையெனில், அதற்குரிய செய்முறையை மாற்றி திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். தாங்கள் சரியாகச் செய்யாமல் அடிப்படையில் தவறு என்று இன்னொன்றின் மீது குறையைச் சுமத்தக் கூடாது. திரும்பத் திரும்பச் செய்வதுதான் வெற்றிக்கு வழியே தவிர, பாதியில் விட்டுவிட்டு ஓடுவது வெற்றிக்கு வழிவகுக்காது என்றார்.
ஒரு முறை, விஞ்ஞானிகளுக்கு வேண்டிய தகுதிகள்பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எடிசன் என்ன பதில் கூறினார் தெரியுமா?
ஒரே நேரத்தில் நான் எந்த விசயத்தையும் கண்டுபிடித்ததில்லை. பல காலம் இடைவிடாமல் தொடர்ந்து செய்த முயற்சிகளின் விளைவுதான் என் வெற்றிகள். இதில் அதிர்ஷ்டம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. விஞ்ஞானிகளில் சிலர் ஓரிரு சோதனைகளைச் செய்து பார்த்துவிட்டு நிறுத்திவிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, நான் விரும்பியதை அடையும்-வரை நான் மேற்கொண்ட சோதனையை இடையில் நிறுத்தியதே இல்லை.
100 முறை தோல்வியடைந்த ஒருவர் 101 ஆவது முறை வெற்றியடைந்துவிட முடியும் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை. எனக்கு அபாரமான அறிவும் ஆற்றலும் இருப்பதால்தான் நான் வெற்றி பெறுவதாகச் சிலர் சொல்கிறார்கள். அது என் நண்பர்கள் கூறும் புகழ்ச்சி உரையே தவிர அதில் உண்மையில்லை.
விடா முயற்சியுடன் தொடர்ந்து பாடுபடுபவர்-களும் என்னைவிடச் சிறப்பான வெற்றிகளைப் பெற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.
எல்லாப் பாடங்களையும் விரும்பிப் படிக்கும் குழந்தைகள் மிகச் சிலரே, குறிப்பிட்ட ஒரு பாடத்தைப் படிக்கச் சிரமப்படும் குழந்தைகள் திரும்பத் திரும்பப் படித்து, அதனைப் புரிந்து மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். மனதில் பதிய வைத்த பாடங்களைப் பிழையின்றி எழுதுகின்ற பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படிப் பயிற்சி செய்வதை விட்டுவிட்டு, எனக்கு அறிவியல் என்றால் அலர்ஜி; கணக்கு என்றால் கசப்பு என்று கூறக் கூடாது.
எல்லோரும் எல்லாம் தெரிந்து கொண்டு பிறப்பதில்லை. நமது அறிவைப் பயன்படுத்தி, நாம்தான் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளால் பகுத்தறிந்து சிந்தித்துச் செயல்பட்டு வெற்றிகளைக் குவிக்க வேண்டும்.
அமெரிக்காவில் பிறந்து அகிலப் புகழ் பெற்ற விஞ்ஞானி எடிசன் மின்விளக்கு, கிராமபோன், ஒலிபெருக்கி, திரைப்படம் போன்றவற்றை-யெல்லாம் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். எனவே, பள்ளியில் சென்று படிக்காதவர். வீட்டில் தன் தாயிடமே அரைகுறையாகக் கல்வி பயின்றவர். இருப்பினும், எடிசன் தன் ஆய்வுகளைத் திரும்பத் திரும்ப விடாமுயற்சியுடன் செய்து வெற்றி பெற்றுள்ளார். அதேபோல, நீங்களும் திரும்பத் திரும்பப் படிப்பதன் மூலம் பல சாதனைகளை நிகழ்த்தலாமே!
வீட்டில் தன் தாயிடம் அரைகுறையாகக் கல்வி கற்ற எடிசனே இவ்வளவு சாதனைகளைப் புரிந்துள்ளார் என்றால், பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களின் அரவணைப்பில் _ அன்பில் முறைப்படி பாடங்களை முழுமையாகப் பயிலும் நீங்கள் எவ்வளவு சாதனைகளை நிகழ்த்த வேண்டும்?
- அருள்மொழி 

சீனா எங்கே செல்கிறது?



சீனா எங்கே செல்கிறது?
கம்யூனிஸ்ட் நாடு என்று முத்திரை குத்திக் கொள்ளும் சீனா திசை தடுமாறி எங்கேயோ பயணித்துக் கொண்டு இருக்கிறது. பொருளா தாரக் கண்ணோட்டத்தில் முதலாளித்துவத் திசையில் அது செயல்படுவது ஒருபுறம் இருக்கட்டும்.
அடிப்படைக் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களி லிருந்து சிதறிப் போய்விட்டது என்பதுதான் பரிதாபத்திற்குரியதாகும்.
சீனாவில் மதத் தலைவர்களின் மாநாடு இத்திங்கள் 24, 25 ஆம் தேதிகளில் நடை பெறவுள்ளதாம்.
400 மதத் தலைவர்கள், ஆன்மிகவாதிகள் இதில் பங்கேற்க உள்ளனராம். சீன அரசால் நடத்தப்படும் சீன அயல்நாட்டு நண்பர்கள் சங்கம் இந்த ஏற்பாட்டினைச் செய்துள்ளது.
இதில் கலந்துகொள்ள வாழும் கலை என்னும் அமைப்பை நடத்தி வரும் சிறீ ரவிசங்கருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.
இந்தியாவுடனான உறவை மேம்படுத்த இந்த நிகழ்ச்சி உதவப் போகிறதாம்.
ஒரு நாட்டின் உறவு ஆன்மிகத்தால்தான் ஏற்படும் என்பது 2010 ஆம் ஆண்டின் மார்க்சியத் தத்துவம் போலும்!
அண்மையில் சீனாவின் பெய்ஜிங் நகருக்குச் சென்று வந்த - பெங்களூரு வாழும் கலை ஆசிர மத்தின் யோகாசிரியர் அமோல்ஜி, சீனாவில் ஆன்மிக உணர்வு தலை எடுத்திருப்பது குறித்து கூறியுள்ளார்.
பொருள் முதல் வாதத்தை முன்னிறுத்தி சித்தாந்த உணர்வைத் தூண்டி மக்களைப் பக்குவப்படுத்த கடமைப்பட்டுள்ள சீன அரசு - அதற்கு நேர் எதிரான திசையில் ஓடுவது - ருசியாவுக்கு ஏற்பட்ட கதி சீனாவுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தன்னம்பிக்கையை முன்னிறுத்தி - முதலாளித்துவ முதலைகளை முகவரியில்லாமல் ஆக்கவேண்டிய கடப்பாடு உள்ள ஓர் அரசு, ஆன்மிக முதலைக்குத் தீனி போடும் ஒரு வேலையில் இறங்குவது இரங்கத்தக்கதாகும்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் பாசிஸ்ட் ராஜபக்சேவுக்குக் கைலாகு கொடுத்ததன்மூலம் சீனாவின் நிறம் சிகப்பு அல்ல என்ற கருத்து ஏற்கெனவே உருவாகிவிட்டது.
மக்களின் மனப்பான்மை என்பது மிகவும் முக்கியமானதாகும். இதில் சீனா கோட்டை விட்டுவிடக் கூடாது என்று எச்சரிப்பது முற் போக்குச் சிந்தனையாளர்களின் கடமையாகும்.
சீனாவில் ஆன்மிக மாநாடு என்ற தகவல் வந்து அதன் ஈரம் காய்வதற்குள்ளாகவே அடுத்த ஒரு தகவல் - மூடநம்பிக்கையின் கைபிள்ளை யாக சீன அரசு தவழ ஆரம்பித்துள்ளது என்பதாகும்.
4 என்ற எண் அதிர்ஷ்டம் இல்லாதது என்றும், சீன மொழியில் நாலு என்பது சாவு என்பதுபோல் ஒலிப்பதாகவும், இந்தக் காரணத்தால், வாகனங்களின் எண் பலகையில், அதிர்ஷ்டம் இல்லாத 4 என்ற எண் நீக்கப்படு வதாகவும் வெளிவந்துள்ள தகவல்தான் அது.
எந்த அளவுக்கு செஞ்சீன அரசு பிற்போக் குத்தனத்தின் கடைகோடிக்குச் சென்று இருக் கிறது என்பதற்கு இது ஒன்று போதாதா? இன்னும் சிலர் அங்கு 7 என்ற எண்ணையும் வெறுக்கிறார்களாம்.
உலகின் பல நாடுகளில் 13 என்ற எண்ணை வெறுப்பதுண்டு. அவை எல்லாம் முதலாளித்துவ சாயலை உடையவை.
அய்ரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் 13 என்ற எண்ணை விரும்புவதில்லை; 12 ஆவது மாடிக்கு அடுத்து 14 என்று போட்டுக் கொள் வார்களாம். சிலர் 12-க்குப் பிறகு 12-ஏ என்று குறிப்பிடுவதுண்டாம்.
இந்தக் கேடுகெட்ட நிலை சீனாவுக்கும் வரவேண்டுமா? ஏன் இந்த நிலை? வெறும் அரசோடு நின்றுவிட்டு, கட்சியின் சித்தாந்தங் களை, கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பும் கடமையைச் செய்யத் தவறிய எந்த ஆட்சிக்கும், எந்தக் கட்சிக்கும் இந்த நிலைதான் ஏற்படும் - எச்சரிக்கை!

பெரியார் சொன்னது

பெரியார் சொன்னது 
ஆதாரமே இல்லை
சரித்திரத்தை, புராணத்தை எடுத்துக்கொண்டால், பார்ப்பனர்கள் மற்றெவரையும் வாழ வைத்ததாக ஆதாரமே இல்லை.
விடுதலை, 26.8.1967

Thursday, October 21, 2010

kadavul?


அறிஞர் சொன்னது 

தோல்வி என்பதே
கிடையாது !
ஒவ்வொரு முறை
தவறும்போதும் 
இதைச்
செய்வதற்கான
வழி இதுவல்ல
எனத்
தெரிந்து கொண்டேன்

                       -எடிசன்



Wednesday, October 20, 2010





 
செப்டம்பர் 01-15_2010


ஆய்வு
ஓரினச்சேர்க்கை
க.அருள்மொழி
உலகிலுள்ள மனிதர்கள் எல்லோரும் ஓர்குலம் என்ற மனிதநேய முழக்கம் ஒருபக்கம், எல்லோரும் ஒரே இனமாக இருக்கமுடியாது என்ற கருத்தால் குண்டுவெடிக்கும் போர் முழக்கம் ஒருபுறம்.
மனித இனஇயல் (Anthropology) கொள்கையின்படியோ அல்லது மதம், நாடு, மொழி ஆகிய காரணங்களால் பிரிந்துள்ள எல்லோருமே ஒரே குரலில் கூறுவது என்னவென்றால், ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேரக்கூடாது! அதாவது, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் உடல்புணர்ச்சி செய்யக்கூடாது என்பதுதான்.
மனித இனம் பல குழுக்களாகப் பிரிந்திருந்தாலும் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்பதில் கருத்து மாறுபாடு வரவில்லை. ஏனென்றால், இனப்பெருக்கம் நடைபெற ஆண் பெண் இணைவது அவசியமாகிறது.
ஆண் பெண் புணர்ச்சியில் இன்பமடைவது மனிதஇனம் மட்டும்தான். மற்ற உயிரினங்களுக்கு அது ஒரு உந்துதல் மட்டும்தான் _ சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதுபோல்!
மனிதர்கள் தங்கள் இனத்தைப் பெருக்கவும், மற்ற உயிரினங்களைவிட ஆதிக்கமுள்ள இனமாக ஆக்கிக் கொள்ளவும் தினமும் உடலுறவுகொண்டு வேகமாகத் தன்இனத்தை மறுஉற்பத்தி செய்தார்கள். அதனால், தேவை மற்றும் பழக்கம் காரணமாக மனிதர்களின் அன்றாடத் தேவைகளில் பாலுறவும் ஒன்றாகிவிட்டது.
மனிதர்களின் சமுதாயத் தேவைகள் குறைவாக இருந்த காலத்தில், உணவு உடை, இருப்பிடம் மூன்றும் இருந்துவிட்டாலே (அதுவும் எளிமையான வசதிகள் கொண்டதாக இருந்தாலே) போதும் என்ற நிலையில் ஆணும் பெண்ணும் பருவ உணர்ச்சிகள் தோன்றிய உடனே திருமணம் செய்து கொண்டார்கள். அல்லது செய்து வைக்கப்பட்டார்கள். அப்போது அந்தத்தேவையும் உடனடியாக நிறைவேற்றப்பட்டுவிட்டது.
இதுபோன்று இளம்வயதிலேயே உடலுறவு கொண்டதால் பெண்கள் கருவுற்று, பேறு-காலத்தில் மரணமடைவது பெரிய அளவில் இருந்தது. மருத்துவ அறிவியல் வளர்ந்துள்ள இக்காலத்திலேயே இளவயதுக் கருவுருதல் பாதுகாப்பற்றது எனும்போது, ஆதிகாலப் பெண்-களின் நிலை எப்படி இருந்திருக்கும்? இந்தியச் சமுதாயத்தில் இளவயதுத் திருமணத்தைத் (பால்ய விவாகம்) தடைசெய்வதற்கு மேலும் ஒரு காரணம் உண்டு. அதுதான் குழந்தைகளுக்கும் விதவைக்கோலம் என்ற அலங்கோலம்.
பெண்கள் பூப்படையும் காலம் சராசரியாக பன்னிரெண்டு முதல் பதினான்கு வயதுவரை (இடம், இனம், சூழல்மாறுபாடுகளுக்கு உட்பட்டது). ஆண்கள் பாலுணர்வுத் தூண்டு-தலை உணரும் வயது சராசரியாக பதினைந்தாகும்.
இந்த வயதிலிருந்து ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் கவர்ச்சிப் பொருளாகத் தெரிவார்கள். இதனால், பாலுணர்வு தூண்டப்-பட்டு உடலுறவுக்குத் தயாராகிறார்கள். ஆனால், இந்த வயதில் உடல்தகுதி மட்டு-மல்லாமல் கல்வி, பணம், அந்தஸ்து ஆகியவை போதிய அளவுக்குப் பெறமுடியாததால் அவர்களுக்குத் திருமணம் செய்து பாலுணர்வுத் தேவையைத் தீர்த்துக்கொள்ள வழி ஏற்படுத்த முடிவதில்லை.
இந்தக் காலகட்டத்தில் எதிர்பாலினரின் துணை கிடைக்காததால் பாலுணர்ச்சியைத் தணிக்கும் வழியில்லாமல் திண்டாடுவார்கள். இதற்கு, பாலுறுப்புகளின் வேலையில்லாத் திண்டாட்டம் (Sexual organs unemployment) என்று பெயர்.
சுய இன்பம்
பெண் துணையில்லாமல் ஆணும், ஆண் துணையில்லாமல் பெண்ணும் தனக்குத்தானே பாலுணர்ச்சியைத் தணித்துக்கொள்ளும் முறைதான் தன் இன்பம் (சுயஇன்பம், மைதூனம்) எனப்படுவது. பொதுவாக எல்லா ஆணும் பெண்ணும் துணை கிடைக்காத நிலையில் மேற்கொள்ளும் முறை இதுதான். இந்த முறை எல்லா வகையிலும் பாதுகாப்பானது என்பதால், மருத்துவர்களும் இதைத் தவறில்லை என்கிறார்கள். ஆனாலும், மக்கள் இதைப்பற்றி வெளிப்படையாகப் பேசுவதில் தயக்கம் காட்டுகிறார்கள்.
ஓரினச்சேர்க்கை
சுயஇன்பம் கொள்வதையே வெட்ககரமானது என்று நினைக்கும் சமூகம் ஓரினச் சேர்க்கையை ஏற்றுக்கொள்ளும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? சுயஇன்பத்தைப் போலவே எதிர்-பாலினரின் துணைகிடைக்காத நிலையில்தான் பெரும்பாலான ஓரினச்சேர்க்கைகள் நடை-பெறுகின்றன.
சமூகக் கட்டுப்பாடுகள் இறுக்கமாக உள்ள இடங்களிலும், கருவுரும் அபாயம் காரண-மாகவும் ஆணுடன் உடலுறவைத் தவிர்க்கும் பெண்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள்.
இராணுவ வீரர்களில் சிலர் பெண்களுடன் தொடர்புகொள்ள முடியாத காரணத்தால் ஓரினச்-சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள். இதேபோல் திருமணம் செய்து கொள்ளத் தடை செய்யப்பட்ட மத நிறுவனத் தலைவர்கள், ஊழியர்கள் சிலர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள்.
இதுதவிர விரும்பியே ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் உண்டு. வித்தியாசமான அனு-பவத்திற்காக இதில் ஈடுபடுகிறார்கள். ஓரினச் சேர்க்கையாளர்களில் மாற்றுப்பாலினருடன் இயல்பாக உடலுறவு கொள்பவர்களும் உண்டு, முற்றிலும் தவிர்ப்பவர்களும் உண்டு.
இந்துமதமும் ஓரினச் சேர்க்கையும்
ஓரினச் சேர்க்கை விருப்பம்பற்றி இலக்கியங்-களிலும், கலைகளிலும் மத்தியகால இந்துத்து-வத்திலும், இந்திய இஸ்லாத்திலும் இருப்பதைப்-பற்றி சலீம் கித்வாய் மற்றும் ரூத்வனிதா என்பவர்-கள் Same Sex in India: Reading from Literature and History என்ற நூலில் எழுதியிருக்-கிறார்கள்.
பழங்கால இந்துச் சட்டத்தில் முதல் நூற்றாண்டிலிருந்தே அயோனி (Non-Vaginal sex) அசுத்தமானது என்று கூறப்படுகிறது. ஆனால், விரதம் இருப்பவர்கள் முறையற்ற காமம் கொள்ளல், வன்கலவி செய்தல் போன்றவற்றை-விட ஓரினச்சேர்க்கை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.
மாடுகள் பூட்டிய வண்டி முதலிய ஊர்தி-களிலும், நீரிலும், பகலிலும் மனைவியுடன் சேர்ந்தால் கட்டிய உடையுடன் தலைமுழுக வேண்டும். ஆணுடன் ஆண் கட்டியணைத்து ஒழுக்கு ஏற்பட்டாலும் இதேபோல்தான்
_ மனுதர்ம சாஸ்திரம் 11.174
அர்த்த சாஸ்திரமும் சிறிய தண்டத் தொகையை மட்டுமே புறவழி உறவு (ayoni sex) கொண்டதற்குத் தண்டனையாகச் சொல்கிறது.
புனித நூல்களாகக் கருதப்படும் இதிகாசங்-களும், புராணங்களும் பல கடவுள்கள், தேவதைகள், கதாநாயகர்கள் புறவழி உறவு மூலமாகப் பிறந்ததாகக் கூறுகின்றன. மாறாக, ஓரின உறவுக்காக யாரும் தண்டிக்கப்பட்டதாகக் கூறவில்லை.
அய்யப்பன் என்கின்ற கடவுள் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.
பதினான்காம் நூற்றாண்டின் சமஸ்கிருத, பெங்காலி இலக்கியங்கள் (இன்றளவும் மிகப்பிரபலமான கீர்த்திவாச ராமாயணம் உட்பட) பாகிரத மன்னன் (கங்கை நதியைச் சொர்க்கத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வந்தவன்) இரண்டு விதவைப்பெண்களுக்குப் பிறந்ததாகக் கூறுகிறது. பாகிரதன் என்ற பெயரே இரண்டு பெண்ணுறுப்புகளுக்குப் பிறந்தவன் என்ற பொருளைத் தருகிறது. (Bhaga - Vulva) இந்து மருத்துவ நூல்களும் முதல் நூற்றாண்டிலிருந்தே பால், பால்வேறுபாடு, ஓரினச்சேர்க்கை விருப்பம் ஆகிய அறிவியல் ரீதியான பாகுபாடுகளை விளக்குகின்றன.
காமசூத்ரா நூலும் ஓரினச்சேர்க்கையை மூன்றாம் இயற்கை என்று வருணிக்கிறது.
கணிதமேதை சகுந்தலா தேவி எழுதிய ‘The world of Homosexuals’ (1977) நூலில், திருவரங்கம் கோயில் தலைமை அர்ச்சகர் சீனிவாச ராகவாச்சாரியார் அளித்த பேட்டியில், ஓரினக் காதலர்கள் முன்ஜென்மத்தில் மாற்றினக் காதலர்-களாகத் தான் இருந்திருப்பார்கள். இப்பிறவியில் பால் மாறியிருந்தாலும், அவர்களுடைய ஆன்மாவின் ஈர்ப்பு அப்படியே இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
திருமணம் என்பது ஆன்மாவின் கலப்பு, இதில் ஆண் பெண் வேறுபாடு இல்லை. இரண்டு பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்த சைவ அர்ச்சகரின் கருத்து இது.
ஓரினச் சேர்க்கைப்பற்றிய அறிவியல் விளக்கங்கள்:
ஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது, அந்தப் பழக்கமுள்ளவர்களின் தூண்டுதல் (சிகரெட், மதுப் பழக்கங்களைத் தொடங்குவது போல்) மற்றும் பரம்பரைக் காரணம் இரண்டுமே
- P. Santtila et. al. Dept of Psychology, Abo Akkademi University.
பரம்பரைக் கூறு ஆய்வுகள் உறுதி செய்வது, ஆண் பெண் உறவைத் தீர்மானிப்பது பரம்பரைக் காரணிகள்தான்.
- Q. Rahman, School of Psychology, University of East London.
ஜீன்கள்தான் பாலுறவு கொள்ளும் விருப்பத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.
- B.S. Mustanski, et.al. Dept of Psychology. Indiana University.
பரம்பரைக் கூறுகள்தான் மனிதப் பாலுறவு நாட்டத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
- Pillard & Bailey, Dept of Psychology, Boston University. School of Medicine
பரம்பரைக் கூறுகளின் தாக்கத்தை, சட்டத்தாலோ, சமூகத்தின் கண்டனத்தாலோ மாற்றுவது என்பது இயலுமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
ஆண், பெண் உடலுறவு கொள்வதால் தான் மனித இனம் நிலைத்து வாழமுடிகிறது என்பது உண்மைதான். அதே சமயம் இனப்பெருக்-கத்திற்காக உடலுறவு கொள்ளுதல் மட்டுமே ஒவ்வொரு ஆண் பெண்ணின் முடிவான செயலல்லவே! அப்படிப் பார்த்தால் குழந்தைப்-பேறு தேவையில்லை எனும்போது உடலுறவு கொள்ளவே கூடாதல்லவா? குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதே மகப்பேறு-பற்றிய கவலையில்லாமல் உடலுறவு கொள்-வதற்காகத்தானே!
ஆண் _ ஆண், பெண் _ பெண் உறவில் மறுஉற்பத்தி ஏற்படாது என்பது உண்மைதான். ஆனால், புதியமுறை அன்பு பிறக்கிறது என்பது உண்மை.
ஆண்களால் நோகடிக்கப்பட்ட பெண்களும், பெண்களால் வெறுத்தொதுக்கப்பட்ட ஆண்களும்-கூட ஓரின உறவில் ஈடுபடுகிறார்கள். ஹார்மோன்கள் செய்யும் கோளாறுகள் ஓரினச் சேர்க்கைக்கு முதல் காரணமாக அமைகின்றன.
இரண்டாவதாக, அதிகமாகப் பெண்களுட-னேயே பழகி வாழவேண்டிய சூழ்நிலையிலுள்ள ஆண், பெண்தன்மை அடைவதால் ஆணின் மீது கவர்ச்சி கொள்கிறான்.
தன்பாலினருடனே (Same Sex) வாழும் சூழல் அதிகமாகும்போதும் ஓரின உறவு கொள்-வதற்கான மூன்றாம் காரணம் உண்டாகிறது.
மனிதர்கள் வெவ்வேறு நிறத்தில் பிறக்கிறார்-கள். சிவப்பு, வெள்ளை, கறுப்பு, மஞ்சள் நிற மனிதர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை, ஆசை, விருப்பம், வெறுப்பு என மாறு-பட்ட குணங்கள் உண்டு. என்றாலும், ஒருவரை ஒருவர் வெறுக்கக் கூடாது என்று சொல்கிறோம். ஆனால், ஒரே நிறத்தி-லிருக்கும்_ஒரே இனத்தி-லிருக்கும் (race) ஓரின உறவுப் பழக்க-முள்ளவர்களை வேறு இனமாக வெறுப்புடன் பார்க்க வேண்டிய அவசியம் என்ன?
சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு அசைவ உணவு பிடிப்பதில்லை. ஆனால், அசைவ உணவுக்காரர்களுடன் பொருந்தி வாழ்கிறோமே!
அசைவ உணவு சாப்பிடுபவர்கள்கூட பாம்பு, பல்லி போன்றவற்றைச் சாப்பிடுபவர்களைப் பார்த்து முகம் சுழிக்கிறோம்தான். ஆனால், வெறுத்து ஒதுக்குவதில்லையே!
பிரம்மச்சரியம் கடைப்பிடிப்பவர்களுக்கு ஆண், பெண் உறவும் வெறுப்பு! ஆனால், சாதாரணமாக சமூகத்தில் பழகி வாழ்வ-தில்லையா?
ஆண் _ பெண் விரும்பி திருமண உறவு கொள்-வதைப்பற்றி எந்தக் கேள்வியும் கேட்காதது-போலவே ஓரின உறவில் ஈடுபடுபவர்-களையும் எந்த விமர்சனத்திற்கும் உள்ளாக்க வேண்டியதில்லை.
நம்முடைய படுக்கை அறையை யாரும் எட்டிப்பார்த்துவிடக் கூடாது என்று நினைக்கும் நாம், அடுத்தவர்களின் படுக்கைய-றைக் கதவில் சாவி துவாரத்தைத் தேடுவது ஏன்? ஆண் பெண் சேர்ந்து வாழ்வதற்கே திருமணம் என்ற சடங்கு தேவையில்லை எனும்போது, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் எந்தச் சடங்கும் தேவைப்படாது.
சட்டப்படி தகுதியுடைய வயதிலுள்ளவர்கள் ஆண் பெண் யாராகினும் அவர்களுடைய விருப்பப்படி எதிர்பாலினருடனோ, ஒரே பாலினருடனோ கூட்டாளியின் விருப்பத்துடன் உறவு கொள்வதும் _ இணைந்து வாழ்வதும் சட்டப்படி மட்டுமல்லாமல் சமுதாய விதிகளின்-படியும் மனிதர்கள் திறந்த மனத்துடனும் ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கமுடியும் என்கிறார்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள்.
ஓரின உறவை விரும்புபவர்கள் மிகமிகச் சிலரே. அதனால், மனித இனப்பெருக்கத்திற்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடாது.
பூக்களில் அயல் மகரந்தச் சேர்க்கை செய்பவையும் உண்டு. தன்மகரந்தச் சேர்க்கை செய்பவையும் உண்டு. எல்லாமே பூக்கள்தானே.

  Bookmark and Share
உண்மை புத்தக வடிவில் படிப்பதற்கு...
Archive's


2010

 

Monday, October 18, 2010

மனம் வெளுக்கட்டும்

மனம் வெளுக்கட்டும்
 க.அருள்மொழி 

இனக்கலவரம்
எனும்போதெல்லாம்
மனக்கலவரம்!

சாதிச் சகதியில்
மூழ்கிப்போன
மனக் கறையை
எந்த வெள்ளாவியில்
வெளுக்க முடியும்?

இந்த ரத்தக்கறை
அடுத்த தலைமுறையையும்
அழுக்காக்கிவிடுமே !

இருபத்தோராம் நூற்றாண்டு
இப்படி இருக்க வேண்டாம்!
இல்லாவிட்டால்
இந்த மனித
இனமே
இருக்க வேண்டாம்!

viduthalai

விடுதலை வேட்கை
 க.அருள்மொழி



அரசியல் விடுதலை
அந்நியனிடமிருந்து
ஆகஸ்ட் 1947 -ல்
உள்ளூர் விடுதலை எப்போது
உச்சி குடுமிகளிடமிருந்து ?

சமூக விடுதலை வேண்டும் 
சங்கர மட 
சனி பகவான்களிடமிருந்து

மூளைக்கு விடுதலை வேண்டும்
மூடப்பழக்கங்கங்களிடமிருந்து

பத்திரிகை  பெண்ணுக்கு
விடுதலை வேண்டும்
பார்ப்பனர்களிடமிருந்து

சாமியாடும் சினிமாவிலிருந்து 
சனங்களுக்கு விடுதலை வேண்டும்

சமூக நீதி திட்டங்களுக்கு 
(அ)நீதி மன்றங்களிளிருந்து
விடுதலை வேண்டும்


சாதனைகள் பல செய்ய 
வேத விலங்கொடித்து 
விடுதலை பெற வேண்டும்

இதற்கெல்லாம்...
தமிழன் கையில் 
தந்தை பெரியாரின்
விடுதலை வேண்டும்.


(10 /10 /1993 ல் வெளிவந்த 'விடுதலை' ஞாயிறு மலரில் வெளி வந்த கவிதை)