Popular Posts

Sunday, May 15, 2011

கடனைத் தீர்க்குமா தற்கொலை?

    கடனைத் தீர்க்குமா தற்கொலை?
க.அருள்மொழி M.B.A.,
        பிறவிப் பெருங்கடல் கடப்பது கடினமான விஷயமாக இருக்கிறது என்பதால் சிலர் ஆழ் கடலில் மூழ்கி மூச்சை நிறுத்திக்கொள்கிறார்கள். ஆம். வாழ்க்கை என்பது கடலை நீந்திக்கடப்பதுபோல் கடினமான செயல்தான். ஆனால் அந்தக்கடலில் நாம் வாழ்வதற்குத்தேவையான வளங்கள் நிறையவே இருக்கின்றன. அதில் ஒன்றை எடுத்துக்கொண்டாலே முழு வாழ்க்கைக்கும் தேவையானது கிடைத்துவிடும். ஏனோ சிலர் கண்களுக்கு அது தெரிவதில்லை.
    மரணம் என்பது பலவகை.
* பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வயதாகிச் சாவது- இயற்கை மரணம்.
* நோயாலோ விபத்தாலோ இளவயதில் சாவது- அகால மரணம்.
* கொண்ட கொள்கைக்காக களப் பலியாவது - வீர மரணம்.
* பிறர் கோபத்தால் கொல்லப்படுவது- துர் மரணம்.
* சட்ட ரீதியாக அரசாங்கத்தால் கொல்லப்படுவது - தண்டனை மரணம்.
* பல்வேறு காரணங்களுக்காக தன்னைத்தானே கொல்வது- அவல மரணம்.(தற்கொலை)
      இவற்றில் தற்கொலை என்பது ஒருவர் தனக்குத்  தானே பழி சுமத்திக்கொள்ளும் முடிவாகும்.
எப்படியும் மனிதனுக்கு (எல்லா உயிர்களுக்கும்) மரணம் நிச்சயம் என்றாலும் முழு வாழ்க்கைக் காலமும் வாழாமல் தானே தன் முடிவைத் தேடிக்கொள்வது தனிப்பட்ட முறையிலும் சமுதாயத்திற்கும் அவர் நட்டத்தை ஏற்படுத்துகிறார் என்று பொருள். அதனால்தான் தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது.
      மனித ஆயுளை அதிகப்படுத்த முயற்சி செய்வதற்குக் காரணம் அவர்களுடைய திறன், உழைப்பு , அனுபவம், ஆகிய வளங்கள்  முழுமையாக சமுதாயத்திற்குக் கிடைக்கவேண்டும் என்பதால்தான். எந்த மனிதனும் வீணானவனல்ல. அதனால்தான் உடல் குறைபாடு உள்ளவர்களைக் கூட மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறோம்.
     'மரணம் எல்லாக் கடன்களையும் தீர்த்துவிடுகிறது' என்றொரு பழமொழி இருக்கிறது. அதனால் தற்கொலை செய்துகொள்வது என்று முடிவு செய்துவிட்டால் ஒரு மனிதனும் இயற்கை மரணம் அடைய முடியாது. மரணம் இயற்கையாக வரும் வரை நம்முடைய கடன்களை (கடமைகளை) முடிக்க முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும்.

மனிதர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?
    தற்கொலை செய்துகொள்ளும் பெரும்பாலோனோருக்கு தீவிர மன அழுத்த பாதிப்பு இருந்திருக்கும்.அந்நிலையில் அவர்களுடைய மூளையில் ரசாயன மாற்றம் அவர்களை தற்கொலைக்குத் தூண்டுகிறது. ஆரோக்கியமான நிலையில் உள்ளவர்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை. மன அழுத்தத்தில் உள்ளவர்கள் நல்லநிலையில் உள்ளவர்களைப்போல் சிந்திக்க முடிவதில்லை. அவர்களுடைய நோயின் தீவிரம் அவர்களை வேறு எதையும் கண்கொண்டு பார்க்க முடியாமல் தடுத்துவிடுகிறது. 'நிகழ்காலம்' ஒன்றுமில்லாமல் இருப்பதால் எதிர்காலமும் அப்படித்தான் என்று முடிக்கு வந்துவிடுகிறார்கள்.
அவர்களுடைய பிரச்னைக்கு தீர்வு என்று ஒன்று இருப்பதாகவே நினைப்பதில்லை.அவர்களைச் சுற்றி உள்ளவர்கள் உதவுவார்கள் என்ற எண்ணமே மூளையில் உதிப்பதில்லை. உணர்ச்சிகளாலும் உடல் பாதிப்பாலும் தாக்கப்படுகிறார்கள். நம்பிக்கையும் உதவியும் இழந்த நிலைக்கு வந்துவிட்டதாக உணர்கிறார்கள். இறப்பதற்கு விரும்பவில்லை என்றாலும் அவர்களுடைய 'வலி'யை முடிவுக்குக் கொண்டுவர அதுதான் வழி என்று நினைக்கிறார்கள். ஆனால் இது அறிவுக்குப் பொருந்தாத தேர்வாகும். வேறெந்த நோயையும் நாமே தேடிக்கொள்ளாததைப் போலவே மன அழுத்தத்தையும் நாமே தேடிக்கொள்வதில்லை. ஆனால் அதற்கும் சிகிச்சையுண்டு, மீண்டும் இயல்பான வாழ்க்கை வாழலாம்.
நினைவிருக்கட்டும்- மன அழுத்தத்திற்கு மதுவோ வேறு போதைப் பொருட்களோ மருந்தல்ல.பெரும்பாலான மக்கள் அவர்களுடைய 'வலி'க்கு நிவாரணியாக மதுவையும் போதை மருந்துகளையும் பயன் படுத்துகிறார்கள். ஆனால் அது பிரச்னையை அதிகப்படுத்திவிடுகிறது-நிதானமி
ன்மையால், திடீர் உணர்ச்சிக்கு ஆளாகிறபடியால் தற்கொலை எண்ணத்தைத் தூண்டிவிடுகிறது.

யாரெல்லாம் தற்கொலை முயற்சி செய்கிறார்கள்?
    வாழ்க்கையின் கசப்பான அனுபவங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தி அதிலிருந்து மீள உதவி கிடைக்கப் பெறாதவர்கள் தற்கொலை முயற்சி செய்கிறார்கள்.
தற்கொலைக்குக் காரணங்கள்.
* அன்புக்குரியவரின் இழப்பு.
* விவாகரத்து, பிரிந்து வாழ்தல், உடைந்துபோன உறவு.
* பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதுமைக் காலம்.
* வேலை இழப்பு, பணம், சொத்து இழப்பு.
* நோயின் தீவிரம்
* மோசமான விபத்து.
* நீண்டநாள் உடல் வலி.
* வலி தரும் மனக் காயங்கள்.
* நம்பிக்கை இழந்த நிலை.
* குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை, உடல் ரீதியான துன்புறுத்தல்.
* அன்புக்குரியவருக்கு ஏற்பட்ட கொடுமையை தாங்க இயலாமை.
* ஏளனமான , இழிவான பேச்சு .
* சதி வலையில் மாட்டிக்கொள்ளுதல்.
* சட்டப் பிரச்சனையில் மாட்டிக்கொள்ளுதல்.
*  மானக் குறைவு ஏற்படுவதால்.
* தோல்வியை சந்திக்க பயந்து.(தேர்வு,தேர்தல் முதலானவை.)
* குடும்பம், நண்பர்கள் , சமுதாயம் போன்றவற்றால் விலக்கி வைக்கப்படுதல்.
* மோசமான ஏமாற்றம்.
* கேலி , கிண்டல் செய்யப்படுதல்.
* தன்னம்பிக்கைக் குறைவு.
    மேற்கண்ட காரணங்கள் மன அழுத்தத்திற்குக் காரணமாகின்றன. சிகிச்சையளிக்கப்படாத மன அழுத்தம் தற்கொலைக்குக் காரணமாகிறது.
      ஒரு குடும்பத்தில் பெற்றோர்களுக்கோ உடன் பிறந்தவர்களுக்கோ தற்கொலை எண்ணம் இருப்பின்(தற்கொலை செய்துகொண்டிருந்தால்) மற்றவர்களுக்கும் அந்த எண்ணம் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தற்கொலை மூலம் அவர்கள் சாதிப்பதென்ன?     தற்கொலை மூலம் யாரும் எதையும் சாதித்துவிடமுடியாது.ஆனால் அவர்கள் உதவி ஏதும் கேட்காமல் அல்லது கிடைக்காமல் போன ஏமாளிகள் என்பதை நாம் அலட்சியப் படுத்திவிட முடியாது. ஆனால் அதை அவர்கள் வெளிப்படுத்திய வழிமுறை முற்றிலும் தவறானது. அவர்களுடைய வலியை,வேதனையை வார்த்தைகளால் வெளிப்படுத்தி தீர்வு காண இயலாத தற்குறிகள். தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டவர்கள் அவர்களுடைய பிரச்னைக்கு தீர்வு கிடைக்காவிடில் மீண்டும் அதே வழியைத் தேடுவதற்கான வாய்ப்பு அதிகம். அதனால் தற்கொலைக்கான காரணத்தை அவர்களுடைய வாழ்க்கையில் இருந்து விலக்கி வைக்கவேண்டிய பொறுப்பு சுற்றியுள்ளவர்களுக்கு இருக்கிறது.

ஒருவர் தற்கொலை எண்ணத்தில் இருக்கிறார் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?
*
அடிக்கடி  தற்கொலை பற்றி பேசுவார்கள்.
* உணவு மற்றும் உரக்கக் குறைபாடு இருக்கும்.
* தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது.
* நடத்தையில் குறிப்பிட்ட அளவு மாறுதல்.
* நண்பர்களிடமிருந்தும் சமுதாயத்திலிருந்தும் விலகி இருத்தல்.
* உயில் எழுதுதல் போன்ற கடைசி ஏற்பாடுகளை செய்தல்.
* வேலை, பொழுதுபோக்கு , படிப்பு போன்றவற்றில் ஈடுபாடு குறைதல்.
* தேவையில்லாத இடர்களை (Risk ) ஏற்றுக்கொள்ளுதல்.
* அண்மையில் ஏற்பட்ட பெரிய நட்டத்தைப் பற்றிய கவலை.
* சாவை எதிர்நோக்கி தயார்படுத்திக்கொள்ளல்.
* தன் தோற்றத்தைப் பற்றி கவலைப்படாமல் இருத்தல்.
*மது, போதைப் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்துதல்.

தற்கொலை எண்ணத்தில் இருப்பவரை  எப்படி தடுத்து நிறுத்துவது?
* நேரடியாகப்
பேசுங்கள்.தற்கொலை முயற்சிக்கான காரணத்தைக் கேட்டறியுங்கள்.
* அவர்களுடைய பேச்சைக் கேட்பதில் ஆர்வம் காட்டுங்கள்.அவருடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த வாய்ப்பளியுங்கள்,அவருடைய உணர்வுகளை மதியுங்கள்.
*நீங்களாக எந்தத் தீர்ப்பையும்  சொல்லாதீர்கள். அவர்களுடைய உணர்வுகள் சரியா தவறா, அல்லது தற்கொலை சரியா தவறா என்று வாதம் செய்யாதீர்கள். வாழ்க்கையின் மதிப்பைப் பற்றி விரிவுரை ஆற்றாதீர்கள்.
*அவர்கள் சொல்வதை ஆர்வமாகக் கேளுங்கள், அவர்களுடனே இருங்கள். ஆதரவு காட்டுங்கள்.
* எதையும் செய்யச்சொல்லி வற்புறுத்தாதீர்கள்.
* அதிர்ச்சியானதாகக்  காட்டிக்கொள்ளாதீர்கள்.
* ரகசியமாக வைத்துக்கொள்ளாதீர்கள்.தேவையான உதவியை நாடுங்கள்.
* மாற்று வழிகள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள். அலங்காரமான வாக்குறுதிகளைக் கொடுக்காதீர்கள்.
* நடவடிக்கையில் இறங்குங்கள். தற்கொலைக்குத் தேவையான கருவிகளை அப்புறப் படுத்துங்கள்.
*தற்கொலைத் தடுப்பு சங்கம், உளப்பிணி மருத்துவர் போன்றோரை உதவிக்கு அழையுங்கள்.

பள்ளிகளின் கடமை
     தற்காலத்தில் இளவயதினரும் மாணவர்களும் கூட அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதனால் பள்ளிகளில் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். இதற்கான முயற்சியை பள்ளி நிர்வாகமும் மாணவர்களும் சேர்ந்து செய்யவேண்டும். சமூக தொண்டு நிறுவனங்களையும் மருத்துவர்களையும் உதவுமாறு கேட்டுக்கொள்ளலாம்.
     தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டங்களை மாணவர்களுக்கு சிறு சிறு குழுவாகப் பிரித்து வழங்க வேண்டும். தலைப்பைப் பற்றி முழுமையாக தெளிவுரை வழங்கவேண்டும். சிறு சிறு துண்டறிக்கைகளை வழங்கலாம்.
   
        தற்காலத்தில் பெரும்பாலானோருக்கு கல்வியறிவு கிடைத்திருக்கிறது. அதிக உடலுழைப்பு இல்லாமல் அதிக வருமானம் ஈட்ட வாய்ப்பு இருக்கிறது. உலக அறிவு அதிகரித்திருக்கிறது. ஆனால் வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைந்திருக்கிறது. எளிதாகப் பணம் சம்பாதிக்க வழியிருக்கும் பலர் சின்னச் சின்னக் காரணங்களுக்காகத் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்திருக்கிறது. ஆகையால் பணம் மட்டுமே மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தந்துவிடமுடியாது.
           ஒரு சிறிய நிகழ்வு. தூத்துக்குடி உரத் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பூங்காக்களில் உள்ள மரங்களுக்கு தினந்தோறும் தண்ணீர் ஊற்றப்படுகிறது. அவ்வப்போது உரம் இடப்படுகிறது. இதனால் அந்த மரங்கள் வேகமாகவும் செழிப்பாகவும் வளர்கின்றன. ஆனால் அந்த வளாகத்திற்கு வெளியே உள்ள மரங்கள் இதைப் போன்ற கவனிப்பு இல்லாததால் நிதானமாகத்தான் வளர்கின்றன.
        ஒரு புயல் அடித்தால் போதும் உரத் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்துவிடுகின்றன. அதே சமயத்தில் வெளியே தானாக வளரும் மரங்கள் புயல் காற்றுக்கு ஈடுகொடுத்து நிற்கின்றன. காரணம்,தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மரங்கள் தண்ணீருக்கும் உரத்திற்கும் வேர்களை ஆழப் பாய்ச்ச வேண்டியதில்லை.கேட்காமலே எல்லாம் கிடைத்துவிடும். ஆனால் வெளியே தானாக வளரும் மரங்கள் மிக முயன்று தண்ணீரையும் சத்துப் பொருட்களையும் தேடவேண்டியிருக்கிறது. இதனால் அதன் வேர்கள் ஆழத்தில் ஊன்றியிருக்கின்றன.
     மனிதனின்  வாழ்க்கையில் துன்பமும் இருக்கும் என்பதை உணர்த்தும் கல்விமுறையும் சமுதாய பழக்கவழக்கங்களும் தேவை. துன்பங்களை எதிர்கொள்ளும் மனத்திடத்தையும் உடல் வளத்தையும் பெறும் அறிவை மரங்களிடமிருந்துகூடக் கற்றுக்கொள்ளலாம்.

ootti valarkkum oodakankal

தொலைவில் இருக்கும் நிலவைக் காட்டி சோறு ஊட்டும்  தாய்மார்கள் இப்போது யாரும் இல்லை. தொலைக்கட்சியில் திரை நட்சத்திரங்களைக் காட்டித்தான் உணவு (சோறு?) ஊட்டுகிறார்கள். குழந்தைகள் பிறப்பது வளர்வது எல்லாம் தொலைக்காட்சியின் முன்னால்தான். அவர்களின் விருப்பம், தேர்வு எல்லாம் ஊடகம் சொல்வதைத்தான்.
தொலைக்காட்சியில் வரும் நொறுக்குத்தீனிகளுக்கு குழந்தைகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். காற்றடைத்த பையில் கொஞ்சமே இருக்கும் வற்றல் வகைகள் உண்மையில் உடம்பைக் காற்றடைத்ததைப் போல் ஊத வைக்கின்றன. அந்த உணவு வகைகளின் மணம்? வாயருகே கெண்டு செல்லும்போதே வாந்தி வருவதுபோல் இருக்கிறது. இருந்தாலும் விளம்பரக் கவர்ச்சியில் மயங்கிய சிறுவர்கள் பெருமையாக அதைச் சுவைத்து உண்கின்றனர்.
இந்த வகை உணவுகளில் கலக்கப்படும் வேதிப் பொருட்கள் ஒரு வகை போதைக்கு அவர்களை ஆளாக்கி திரும்பத் திரும்ப அதை வாங்கி சுவைக்கத் தூண்டுகிறது. பெற்றோர்கள் வங்கித் தரவில்லை என்றால் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறார்கள்.தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று காசைக் கொடுத்துவிடுகிறார்கள் பெற்றோர்கள். இதன் விளைவு அதீத உடற்பருமன். பெரியவர்கள் பலரும் இந்த நொறுக்குத் தீனிக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்பதும் உண்மை.
பள்ளிக்குப் போகும் குழந்தைகளின் பாடப் புத்தகச் சுமையைப் பற்றிப் பேசும் அளவுக்கு அந்தக் குழந்தைகளின் உடல் எடையைப்பற்றிப் பேசுகிறோமா? குழந்தைப் பருவ உடற்பருமன் என்பது மக்கள் நலப் பிரச்சினைகளில் முக்கியமானது ஆகும். இது குழந்தைகளின் செயலற்ற தன்மையையும் இளவயது மரணத்தையும் ஏற்படுத்தக் காரணமாகிறது. அதுமட்டுமில்லாமல் நீண்டகால சமூக, பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.

கடந்த கால் நூற்றாண்டில் குழந்தைப் பருவ உடற்பருமன் மும்மடங்காக அதிகரித்திருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.  இப்போதுள்ள இளைஞர்களில் 20 % வரை அதிக உடற்பருமன் உள்ளவர்களாக  இருப்பதாக ஒரு அபாய அறிவிப்பு அந்த ஆய்வில் இருக்கிறது. 2 லிருந்து 5 வயது வரையுள்ள குழந்தைகளில் உடற்பருமன் அதிகமாக உள்ளவர்கள்  5 .0 % லிருந்து 12  .4 % ஆகவும் 6 லிருந்து 11 வயதுக் குழந்தைகளில் உடற்பருமன் அதிகமாக உள்ளவர்கள் 6.5%லிருந்து 17%ஆகவும் அதிகரித்திருக்கிறது.
பதின்பருவத்தினரில் (Teenage) உடற்பருமன் அதிகமாக உள்ளவர்கள் 5.0 %லிருந்து 17.6% ஆகவும் அதிகரித்திருக்கிறார்கள். குழந்தைப் பருவத்தில் உடற்பருமன் அதிகரிப்பு நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் ஒரு வகைப் புற்று நோய்க்கும் காரணமாகிறதாம்.
கூடுதல் எடையைக் குறைக்கும் முயற்சியைப் பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தரவேண்டும்.  இன்றைய குழந்தைகளில் 8 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் பலவகையான ஊடகங்களிலும் நேரத்தைச் செலவிடுகிறார்கள். வலைத்தளம் ,தொலைக்காட்சி , வீடியோ கேம் முதலியவற்றில் வாரத்திற்கு 45 மணி நேரம் வரை செலவிடுகிறார்கள். இந்த ஊடகங்களில் வரும் ஊட்டச்சத்தற்ற உணவுப் பொருட்களின் விளம்பரங்களுக்கும் குழந்தைகளின் உடற்பருமனுக்கும் முக்கியத் தொடர்பு உள்ளதாக ஆய்வில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தொலைக்காட்சி,இணையம் ஆகியவற்றில் வரும் திண்பண்டங்களின் நம்பகத்தன்மையைக் குறித்து ஏதும் அறியாமலேயே அந்தப் பொருட்களை வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அதைப் பற்றிய விழிப்புணர்வு பெறும் வயதல்ல அவர்களுக்கு என்பது உண்மைதான். மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படுகின்ற விளம்பரங்களின் வாசகங்கள், யுக்தி , கவர்ச்சி ஆகியவற்றால் உடல்நலனைக் கெடுக்கும் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் அதன் தாக்கத்திற்கு ஆளாகிறார்கள். பெற்றோர்களை வாங்கித்தரச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.
விளம்பரங்களும் இளைஞர்களின் உடல், மன நலன் கேடுகளும்
1 குழந்தைகளையும் இளைஞர்களையும் குறி வைத்துச் செய்யப்படும் விளம்பரங்கள் அவர்களின் உடல் எடை அதிகமாவதற்குக் காரணமாகிறது. (மொறு மொறுப்பான நொறுக்குத் தீனிகள், அய்ஸ் கிரீம்கள் , சாக்லேட்டுகள், நூடுல்ஸ் இன்னும் பல. )
2 . வேறு சில நிறுவனங்களின் விளம்பரங்கள் இளம்பெண்களையும் நடுத்தர வயதுப் பெண்களையும் குறி வைக்கிறது. இதனால் அவர்களுக்கு தங்களின் உடலமைப்பு மீதான மனக்குறையும் ஒழுங்கற்ற உணவுப் பழக்கமும் தன்னம்பிக்கைக் குறைவும் மன அழுத்தமும் ஏற்படுகிறது.( சிகப்பழகு கிரீம், உடலழகுக் கருவிகள் ,மருந்துகள் பற்றிய விளம்பரங்கள்.)
3 . பல வளரிளம்பெண்கள்  குறிப்பாக பதின் பருவத்தினர்  (ஜிமீமீஸீணீரீமீ) விளம்பரங்களின் தாக்கத்தால் ஆரோக்கியமற்ற வழிகளில் எடைக் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள்கிறார்கள்.
4 . ஆரோக்கியமற்ற எடைக் கட்டுப்பாட்டுப் பழக்கங்கள் ( பட்டினி, மிகக் குறைவாக உண்ணுதல், வேண்டுமென்றே வாந்தி எடுத்தல், வயிற்றுப் போக்கு  மாத்திரைகள் சாப்பிடுதல் போன்றவை) எதிர் விளைவாக உடல் பருமனை அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.    5 . உடல் பருமன் அதிகமுள்ள இளையோரை மற்றவர்கள் ஏளனமாகப் பார்ப்பதும் கிண்டல் செய்வதும் அவர்களின் மனதைப் பாதிக்கிறது.    6 . உடல் பருமன் பற்றிய மனக்குறை உலகில் உள்ள எல்லா மனிதர்களிடத்திலும் இருக்கிறது. இதனால் மன அழுத்தமும் தன்னம்பிக்கைக் குறைவும் ஏற்படுவதோடு தற்கொலை எண்ணமும் உருவாகிறது.
தொலைக்காட்சி விளம்பரமும் குழந்தைப் பருவ உடற்பருமனும்

ஆதாரம் : Kaiser Family Foundation 2007
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நேரம் அதிகரிக்க, அதிகரிக்க உடல் பருமனும் அதிகரிக்கிறது. நான்கில் மூன்று  விளம்பரங்களில் வரும் உணவு வகைகள்  ஊட்டச்சத்தற்றதாகவும் உடலைக் குண்டாக்கக்கூடியதாகவும் இருக்கிறது. குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் வரும் விளம்பரங்களில்  அய்ம்பது விழுக்காடு ஆக்கரமித்திருப்பது உணவு வகைகள்தான்.
அதிக கலோரி, குறைந்த ஊட்டச்சத்துக் கொண்ட துரித உணவுகள் சுவையூட்டப்பட்ட பானங்கள் ஆகியவற்றின் மீதான ஆர்வம், அவற்றை வாங்கி உண்ணத் தூண்டுகிறது. ஒரு நாளைக்கு 150 கலோரிகள் அதிகமானாலே உடற்பருமன் அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.
தெளிவாகச் சொல்லவேண்டும் என்று சொன்னால் 8 லிருந்து 12  வயது வரையுள்ள குழந்தைகளைக் குறி வைத்து விளம்பரப்படுத்தப்படும் உணவு வகைகள் அவர்களை ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தில் தள்ளிவிடுகிறது.
வயது வாரியாக குழந்தைகளைக் குறிவைத்துச் செய்யப்படும் விளம்பரங்களின் விவரத்தைக் கீழே காணலாம்.
தொலைக்காட்சி மட்டுமல்லாமல் இணையதளமும் இதே வேலையைச் செய்கிறது. ஆனால், இணையதளத்தைப் பயன்படுத்தும் குழந்தைகளின் வயது 8 க்கு மேல் இருப்பதால் அதனுடைய தாக்கம் குறைவு. ஆன் லைன் விளையாட்டுகளில் செய்யப்படும் விளம்பரங்கள் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கின்றன.


பெற்றோருக்குச் சில குறிப்புகள்
  1. தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைப்பது, குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்பது , தவறாமல் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றைக் குழந்தை களுக்குப் பழக்கப்படுத்தவேண்டும்.
  2. 8 வயதுக்குக் குறைவான குழந்தைகள் எந்த மாதிரியான நிகழ்சிகளைப் பார்க் கிறார்கள் என்பதைக் கண்காணியுங்கள்.
  3. பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொழுப்புக் குறைக்கப்பட்ட பால் பொருட்கள், கொழுப்பற்ற மாமிசம், மீன், போன்ற உணவுகளை மட்டுமே சாப்பிடச் செய்யுங்கள் . அதோடு உடலுழைப்பை அதிகப்படுத்தக் கற்றுக்கொடுங்கள். குழந்தைகளோடு சேர்ந்து உண்பது மனதுக்கும் மகிழ்ச்சியளிக்கும் என்பதை உணருங்கள்.
  4. ஆரோக்கியமான உணவு உண்பதும் உடற்பயிற்சி செய்வதும் நல்லது என்பதற்கு நீங்களே முன்னுதாரணமாக இருங்கள்.