Popular Posts

Tuesday, October 9, 2012

உள்ளமெல்லாம் தடுமாடுதே!


- க.அருள்மொழி
மண வாழ்க்கையில் மன நிறைவு (மகிழ்ச்சி,இன்பம்) அடையாதவர்கள்தான் இணையரை ஏமாற்றுகிறார்கள்: ஒரு ஆய்வின்படி 'புறமண' உறவில் ஈடுபடும் ஆண்களில் 56 விழுக்காட்டினரும் பெண்களில் 36 விழுக்காட்டினரும் தங்கள் இல்லற வாழ்வில் மகிழ்ச்சியாகவோ அல்லது மிக மகிழ்ச்சியாகவோ இருந்தும் புறமண உறவில் ஈடுபடுகிறார்கள்.

பெண்கள் புறமண உறவில் ஈடுபடக் காரணங்கள் ஆராயப்பட்டதில் பழி வாங்கும் நோக்கம், பாலுறவில் புதுமையை விரும்புதல், அடிக்கடி உறவுகொள்ள விரும்புதல் போன்ற காரணங்களை விட 'தனிமை' யில் இருத்தல்தான் முக்கிய காரணமாக இருக்கிறது.   நீங்கள் 'சந்தேக' ப் பட்டால் உங்கள் இணையரிடம் கலந்துரையாட வேண்டுமா?: ஒருவேளை நீங்கள் உங்கள் துணைவரின்/துணைவியின் நடத்தையில் சந்தேகம் உள்ளதாக நினைத்தால் அதுபற்றி  அவரிடம் பேச வேண்டுமா? 'சந்தேகம்' என்பதே 'உறுதிப் படுத்தப்படாத' என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் சொல்கிறது.
அதனால் பொறுமையுடனும் நிதானத்துடனும் வார்த்தைகளில் கவனத்துடனும் நீங்கள் நினைப்பது அல்லது கேள்விப்பட்டது பற்றி பேச வேண்டும். இருவழி தகவல் தொடர்பு மிக முக்கியம். அது உங்கள் எதிர்கால உறவு பற்றி தீர்மானிக்கக் கூடியது.
சரி, உளவு  அல்லது ஒற்றன் வேலை பார்க்கலாமா? வேண்டாம்! இது போன்ற செயல்கள் நல்லுறவையும் நம்பிக்கையையும் மிகவும் பாதிக்கும். இது உண்மையில் 'துரோகம்' செய்வதைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். நேரடி பேச்சு வார்த்தையே சரி.
அதிகம் துரோகம் செய்பவர்கள் படித்தவர்களா? படிக்காதவர்களா?: 25 முதல் 60 வயதுவரை உள்ளவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் படிக்காதவர்கள் அல்லது குறைவாகப் படித்தவர்களே கல்லூரிப் பட்டம் பெற்றவர்களை விட அதிகமாக நம்பிக்கை துரோகம் செய்கிறார்கள்.
அதிகம் துரோகம் செய்பவர்கள் யார்?: கணவனின் வருவாய்க்குச் சமமாக சம்பாதிப்பவர்களா? கணவனை விட அதிகமாகச் சம்பாதிப்பவர்களா? சற்று குறைவாக சம்பாதிப்பவர்களா? மிகக் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களா? என்று பார்த்தால் ஆணின் வருமானத்தை விடக் குறைவாகச் சம்பாதிப்பவர்கள் ஆண்களை அதிகம் நம்பி இருப்பதால் அவர்கள் நம்பிக்கை துரோகம் செய்வது குறைவாகவே இருக்கிறது. ஆனால் பெண்ணின் வருமானத்தை நம்பி இருக்கும் ஆண்கள் ஒப்பீட்டளவில் அதிகமாக துரோகம் செய்கிறார்கள்.
'துரோக' மனப்பான்மைக்கும் பரம்பரைக்கும் தொடர்பு உண்டா?: குடிப்பழக்கம், சூதாடுவது போன்ற பழக்கங்களுக்கும் மரபணுக்களுக்கும் தொடர்பு உள்ளதைப் போலவே நம்பிக்கையாக வாழ்வதற்கும் நம்பிக்கை துரோகம் செய்வதற்கும் கூட மரபுப் பண்புகள் காரணமாக அமைகின்றன. DRD4 என்ற ஜீனை  ஆய்வு செய்ததில் அந்த மரபணுவில் 7R+ என்ற மாறுபட்ட மரபுப் பண்பு உள்ளவர்களில் 50 விழுக்காட்டினர் துரோகம் செய்கிறார்கள். இந்த மாறுபட்ட மரபணு இல்லாதவர்கள் 22 விழுக்காட்டினர்தான்  துரோகம் செய்கிறார்கள்.

துரோகம் செய்வதற்கான அறிகுறிகள் உண்டா?: திடீரென்று அவர்களுடைய தோற்றத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது, கணவனை/மனைவியை விமர்சனம் செய்வது, அல்லது எதிர்பாராத பரிசுகள் கொடுப்பது அவன்/அவள் இன்னொரு காதலில் இருக்கிறான்(ள்) என்பதைக் காட்டும்.
மேலும்,
#    வழக்கமான வாழ்க்கை முறையில் குறிப்பிடுமளவுக்கு மாற்றம்- அதாவது உங்களிடம் அல்லது குழந்தைகளிடம் அக்கறையின்மை. வேலை மற்றும்  பொழுது போக்குகளில் அக்கறை இல்லாமை.
#    வாழ்க்கையில் சிலிர்ப்பான (thrill) அனுபவம் வேண்டுமென்று சொல்வது.
# உங்கள் இருவருக்குமிடையேயான நெருக்கம் குறைதல். அனேகமாக உடல் தொடர்பே இல்லாமை.
# தன்மதிப்பு (self-esteem) குறைந்து காணப்படுதல்.
# குழப்பத்துடன் காணப்படுதல்.
#    வீட்டில் இருக்கும்போது சோம்பேறித்தனமாகக் காணப்படுதல்.
# எதிர் மறையாகப் பேசுதல் நடந்து கொள்ளுதல்.
#    அருகில் இருந்து பேசும் சந்தர்ப்பத்தைத் தவிர்த்தல்.
#    நீங்கள் அவன்/அவள் செய்யும் துரோகத்தைப் பற்றிப் பேசும்போது தீவிரமாக மறுத்துப் பேசுதல்.
#    வழக்கத்தை விட விழிப்பு(ணர்வு)டன் இருத்தல்.
#    பணியிடத்தில் அதிக நேரம் இருத்தல்.
#    சீராக உடையணிதல், சீரான தோற்றத்திலேயே இருத்தல்.
#    கடன் அட்டை விவரப்பட்டியல் பல செய்திகளைச் சொல்லும்.
#    வீட்டில் நடக்கும் விழாக்களில் இருந்து விலகி இருத்தல்.
#    பல விஷயங்களில் பொய் சொல்வதை நீங்கள் கவனிக்க முடியும்.
#    பணம் பற்றி  உங்கள் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை வரும்.
#    உங்களுடன் சேர்ந்து எங்காவது போவதையோ செய்வதையோ தவிர்த்தல்.
#    நீங்கள் சண்டை போடும் சந்தர்ப்பத்தைத் தவிர்த்தல்.
#    உங்களைத் தவிர்ப்பது கண்கூடாகத் தெரியும்.
#    ஒதுங்கி இருத்தல்.
#    பெண்களின் பொட்டு, உதட்டுச் சாயம், முடி போன்ற அடையாளங்கள்.
#    பால்வினை நோய்கள் போன்ற சோதனைகள் செய்துகொள்ளல். (இணையரின் மூலமாக உங்களுக்குப் பரவி இருக்கின்றதா என்று).
மேற்கண்ட அறிகுறிகளில் சில அல்லது பல குறிப்பிடத்தகுந்த அளவு காணப்பட்டால் அது உங்கள் இணையரின் நம்பிக்கை துரோகத்தை உறுதிப் படுத்துவதாகும். உண்மையில் இந்தச் செய்தி உங்களுக்குப் பேரிடியாகத்தான் இருக்கும்.  நம்பிக்கை துரோகத்தை எப்படி சமாளிப்பது? எப்படி எதிர்கொள்வது?
உடனடியாக திருமண உறவை முறித்துக்கொள்வது போன்ற  எந்தவொரு பெரிய முடிவையும் எடுக்க வேண்டாம்.இது உங்கள் திருமண வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம். இன்னும் எதிர்காலத்தில் செய்து முடிக்க வேண்டிய கடமைகள், பிரச்சனைகள் இதைவிடப் பெரிதாக இருக்கிறதா என்று பாருங்கள்.
துரோகம் செய்துவிட்ட இணையருடன் இருக்கும்போது கடுங்கோபம், அதிர்ச்சி, நிச்சயமற்ற தன்மை, சண்டை, பயம், அழுகை, மன அழுத்தம், மனக் குழப்பம் போன்ற உணர்ச்சிகள் மாறி மாறி உண்டாவது இயல்பானதுதான் என்று புரிந்துகொள்வது நல்லது.
உங்கள் நலனைக் கருத்தில் கொள்ளுங்கள். துரோகம் உங்களைப் பாதிக்கும்போது குமட்டல், வயிற்றுப் போக்கு, தூக்கக் குறைபாடு(மிகக் குறைவாக அல்லது மிக அதிகமாகத் தூங்குவது) நடுக்கம், கவனக் குறைபாடு, உண்பதில்  குறைபாடு போன்ற உடலியல் பிரச்சனைகள் ஏற்படும். அவற்றை உரிய முறையில் சரி செய்யுங்கள்.
சரியான நலமளிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள், உங்கள் அன்றாட வேலைகளைச் சரியான நேரத்தில் செய்யுங்கள், வழக்கமான நேரத்தில் தூங்குங்கள். நாள்தோறும் சிறிது நேரம் உடற் பயிற்சி செய்யுங்கள், நிறைய தண்ணீர் குடியுங்கள், சில வேடிக்கை நிகழ்ச்சிகளைப் பாருங்கள். உங்களை சிரிக்க வைக்கக் கூடிய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். வலிதரும் துணையை   மறந்து வாழ்க்கை போகும் போக்கில் விடுங்கள்.
முதல் மரியாதைப் படத்தில் வைரமுத்து எழுதிய "பூங்காற்று திரும்புமா......"பாடலை முழுவதுமாக  நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் துணைவரின் துரோகத்தை உங்களுடைய உணர்ச்சிகளுக்கேற்ப உங்கள் சிந்தனையில் தோன்றியதை எழுதி வையுங்கள்.
துரோகம் செய்த உங்கள் துணைவருடன் பேசுங்கள். தான் செய்த துரோகம் பற்றிய சிந்தனை இல்லாமல் இருந்தால் அதைப் பற்றி அவருக்கு உணர்த்த அது உதவும்.
துரோகத்தை அனுசரித்து அதனுடனே (அவருடனே) வாழ்வதைவிட நல்ல குடும்ப நல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.   இருவரும் ஒரே நேரத்தில் AIDS/HIV மற்றும்  STD போன்ற பாலியல் நோய் சோதனைகளை செய்துகொள்வது நல்லது. மீண்டும் உடல் தொடர்பைத் துவங்கும் முன் இந்தச் சோதனை அவசியம்.
இருவரும் தொடர்ந்து  சேர்ந்து வாழ்வது என்று முடிவெடுப்பதாக இருந்தால் அவரவர் எல்லை எது என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைகளிடம் மறைக்காதீர்கள். நீங்கள் காயப் பட்டிருப்பதை தெரிவியுங்கள். உங்கள் இணையர் செய்த துரோகத்தை வைத்து குழந்தைகளை எடை போடாதீர்கள்.("அப்பனப் போலத்தான புள்ள இருக்கும்"- "ஆத்தாள போல மவ" என்பது போன்ற வார்த்தைகள் வேண்டாம்.)
துரோகம் நடந்ததற்குக் காரணம் யார் அல்லது எது என்று பார்த்து அவரைப் பழி வாங்கும் வேலை வேண்டாம். அதனால் ஆகப் போவது ஒன்றுமில்லை.
இன்னும் 'அந்த' விஷயம் உங்களை உறுத்திக் கொண்டே இருக்குமானால் உடனடியாக மருத்துவரைப் பாருங்கள் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு நடந்த அந்த 'விபத்து' அதனால் ஏற்பட்ட காயம் எல்லாம் ஆறுவதற்கு சிறிது காலம் ஆகும். அதுவரை அவசரப்படாமல் திருமண வாழ்க்கையை நிலை நிறுத்துங்கள்.
உங்கள் வருமானம், போதுமான பணம், சொத்து, வீடு, வேலை, குழந்தைகள் போன்ற எல்லா விஷயத்தையும் சிந்தித்தே  மண வாழ்க்கையத் தொடர்வது அல்லது முடித்துக் கொள்வது என்று முடிவெடுங்கள்.
உங்களுக்கு என்ன தேவை?:
+ உறக்கம்
+ ஆரோக்கியமான உணவு.
+ உடற் பயிற்சி
+ நிறைய தண்ணீர்.
+ நகைச்சுவை (சிரிப்பு)
+ தகுந்த காலம்.
+ மன்னிக்கும் மனப்பான்மை.
மேற்சொன்ன செய்திகளெல்லாம் ஏமாற்றுவதும் ஏமாற்றப்படுவதும் தெரிந்த பின்னர் செய்ய வேண்டிய விஷயங்கள். ஆனால் குடும்ப வாழ்க்கையில் இது நடக்ககூடாது என்றால் என்ன செய்வது? துரோகத்தைத் தவிர்ப்பது எப்படி? அதாவது துரோகம் செய்யாமலிருப்பது அல்லது துரோகம் நடக்கவிடாமல் செய்வது!
உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது அதாவது 'கால் கட்டு' போட்டாகிவிட்டது. உங்கள் பெற்றோருக்கு கடமை முடிந்துவிட்ட நிம்மதி. இனி உங்களுக்கு இரவு நேரத்தில் ஏற்படும்  'அந்த' இயற்கை உபாதைக்கு துணைக்கு வர ஆள் கிடைத்தாகி விட்டது.
எனவே இனி உங்கள் இனக்கவர்ச்சி உணர்வுகளெல்லாம் இனி நின்று போய் விடும்? அப்படியா? இல்லையே!...அப்படி இல்லையே! நீங்கள் இன்னமும் அடுத்த பெண்ணால் அல்லது ஆணால் ஈர்க்கப்படுகிறீர்கள். உங்கள் கண்கள் போகும் திசையை நோக்கி உங்கள் துணைவரின் கண்களும் பொறாமையோடும் கோபத்தோடும் பின் தொடர்கிறதே?
இதை எப்படி கையாள்வது? ஒரு 'கூடா நட்பு' நிகழ்ந்து விடாமல் தடுப்பது எப்படி?  முன்பே சொன்னதுபோல் 25% ஆண்களும் 10_-15 விழுக்காடு பெண்களும் ஏமாற்று நடத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். பல 'மன' முறிவுகளும் அதனால் கொலை,தற்கொலை, மண விலக்குகளும் 'ஏமாற்றத்தினால்' தான் ஏற்படுகின்றன. உங்கள் வாழ்க்கைப் படகு ஓட்டை விழாமல் (leak proof) செல்ல வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் அல்லது செயக்கூடாது?
உங்கள் திருமண வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: அதாவது உங்கள் இணையர்தான்  (கணவன்/மனைவி) எல்லாவற்றிலும் முதன்மையானவர்.முக்கியமானவர். குடும்பத்திலுள்ள மற்றவர்களும் நண்பர்களும் முக்கியம்தான் என்றாலும் அவர்கள் உங்கள் இருவருக்கிடையே 'நுழையாமல்' பார்த்துக்கொள்ளுங்கள். பழைய 'நட்பு' எதுவும் இருந்தால்  மீண்டும் புதுப்பிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருங்கள்.
சென்றவாரம் அலுவலகம் அல்லது தொழிலில் அல்லது நண்பர்களுடன்  அதிக நேரம் செலவிட வேண்டியிருந்திருந்தால் இந்த வாரம் அவற்றைத் தவிர்த்து குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குங்கள். உங்கள் செல்போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றை அணைத்து வையுங்கள். உங்கள் அன்பை வெளிப்படுத்த அதிக நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இருவருமாகச் சேர்ந்து குடும்பத்திற்கான முடிவுகளை எடுங்கள்.
எல்லைக்கோடு போடுங்கள்: சிலர் (ஆண்களும் பெண்களும்) இயற்கையாகவே நெருக்கமாக பழகும் (தொட்டுப் பேசுவது, அளவுக்கு அதிகமாக சிரிப்பது, எச்சில் உணவைப் பகிர்ந்து கொள்வது போன்ற ) இயல்புடையவர்கள்.
திருமணம் ஆன பின்னரும் இது தொடரும்போது அது சிக்கலை ஏற்படுத்துகிறது. அது தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அந்தரங்க விவகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் பேச்சுக்கள் நிச்சயம் தவிர்க்கப் படவேண்டும். அவை உங்கள் வாழ்க்கைத் துணைவருக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டவை. (Reserved).
ரகசியம் வேண்டாம்: ரகசியமாக எதையும் செய்யாதீர்கள். நீங்கள் 'வெளியுறவு' ஏதும் இல்லாமலிருந்தாலும் நீங்கள் எதையாவது மறைக்கிறீர்கள் என்ற உணர்வு வந்துவிட்டால் உங்கள் மீதான நம்பிக்கை போய்விடும். தகவல் தொடர்பில் விரிசல் ஏற்பட்டால் மனக்காயத்தை ஏற்படுத்தும். அவர்களாக எதையும் 'கண்டுபிடிக்கும் படி' நடந்துகொள்ள வேண்டாம். தினசரி நடவடிக்கைகளைப் பகிர்ந்து கொள்வது நல்லது. உண்மையாக இருப்பது நம்பிக்கையை வளர்க்கும்.
அபாயப் பகுதியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பல 'காதல்'கள் பணியிடத்தில் துவங்குகின்றன. தற்செயலாக ஆரம்பித்து 'துர்'செயலாக மாறி விடுகின்றது. குடும்பத்தினருடன் இருப்பதை விடக்  கூட வேலை செய்பவர்களுடன் அதிக நேரம் இருப்பது 'நட்பு' என்ற நிலையிலிருந்து 'உறவு' என்ற நிலைக்கு வழுக்கிச் செல்லக் காரணமாகி விடுகிறது.
மேலும் இப்போது இன்டர்நெட், செல்போன் ஆகியவற்றின் வளர்ச்சியால் cyber sex எனப்படும் வலைப் புணர்ச்சி வேகமாக வளர்ந்து(?) வருகிறது. இவற்றை தவிர்ப்பது நல்லது. உங்கள் துணைவர் இல்லாமல் விடுமுறையைக் கழிக்க வெளியில் செல்வதும் துரோகம் நடக்கக் காரணமாகி விடக்கூடும்.
உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதையும் உங்கள் இருவருக்குமான உறவில் விரிசல் ஏற்படுவதை விரும்பவில்லை என்பதையும் சுற்றியுள்ளவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இருவருக்கிடையே மற்றவர் யாரும் வருவதை விரும்பவில்லை என்பதை உணர்த்துங்கள். வெளியிடங்களுக்கு உங்கள் துணைவருடனே செல்லுங்கள். இண்டர்நெட்டை 'நட்பு' தேடப் பயன்படுத்தாதீர்கள். கூடா நட்பு ஏற்படும் சூழலைத் தவிர்த்து விடுங்கள்.
நண்பர்கள்-எச்சரிக்கை! சில நேரங்களில் எதிர் பாலின நண்பர்கள் இருவருக்குமே இருப்பார்கள். அது இயற்கைதான். ஆனால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உங்கள் நட்பு நீடித்திருக்க வேண்டும். உண்மைதான். அதே வேளையில் உங்கள் வாழ்க்கைத் துணைவருடன் பகிர்ந்து கொள்ளும் எல்லா விஷயங்களையும், உணர்ச்சிகளையும் அல்லது அதே அளவு நேரத்தையும் அவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாது-கூடாது.
உங்கள் நண்பர்கள் உங்கள் துணைவரின் நண்பர்களாகவும் ஆவார்கள். அவர்கள் உங்கள் துணைவரின் எதிர் பாலினராக இருக்கக் கூடும்.அவர்கள் இருவரும் தனியாக இருக்கும் சூழல் வரக்கூடும். இதனால் இது போன்ற நட்பையே சிலர் தள்ளி வைக்கவோ அல்லது தவிர்த்து விடவோ செய்கிறார்கள். சில நண்பர்கள் திருமணம் ஆனது தெரிந்தும் பழையபடியே நண்பர்களாக இருப்போம் என்று சொல்கிறார்கள். ஆனால் உங்கள் திருமண வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டுமானால் உங்கள் நட்பைத் துண்டித்து விடுங்கள்.
உங்கள் இணையருக்குச் சொல்லுங்கள்: ஒருவருக்கொருவர் உண்மையாக இருங்கள். ஒரு மனிதனாக (மனுஷியாக) நீங்கள் மற்றவர்களால் ஈர்க்கப் பட்டதை வெளிப்படுத்துங்கள். நீங்கள் (இணையர் வேறு யாராலும் கவர்ப்பட்டதைப் பார்த்து) பொறாமைப்பட்ட அல்லது கோபப்பட்ட  நேரத்தை பொறுமையாக நிதானமாக சொல்லிப்புரிய வையுங்கள்.
நீங்கள் 'தடுமாற' இருந்த அல்லது இருக்கக்கூடிய  நேரத்தையும் அதைத் தவிர்க்க என்ன செய்வது என்பதையும் குடும்ப வாழ்க்கையில் ஏதேனும் தொய்வு அல்லது குறைபாடு இருந்தால் அதை நீக்கி முன்னேறிச் செல்வது பற்றியும் பேசுங்கள்.
தந்தை பெரியார் சொன்னது போல "ஒருவருக்கொருவர் ஒத்த நண்பர்களாய் இருங்கள். மானம் பாராது விட்டுக் கொடுங்கள். பணிவிடை செய்வதில் ஒருவருக்கொருவர் முந்திச் செய்யுங்கள்". மண வாழ்க்கை இனிக்கும்!

Friday, August 24, 2012

அலையாத்தி மனம்

அலையாத்தி மனம்

- க.அருள்மொழி 


சுனாமி என்ற வார்த்தையை 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ம் நாளுக்கு முன்னர் நாம் கேள்வியே பட்டதில்லை. ஆனால் அந்த பேரழிவிற்குப் பின் மிகப் பெரிய பிரச்சினைக்கு சுனாமியை எடுத்துக்காட்டாகக் கூறுவது வழக்கமாகி விட்டது. அதன் பின்னர் இப்போது 2011 டிசம்பர் 30 ம் நாள் சுழன்றடித்து சூறையாடிய 'தானே' புயல் தன் 'சக்தி' எப்படிப்பட்டது என்பதை சொல்லிவிட்டது.   ஆண்டு தோறும் பருவ மழைக் காலங்களில் தென்மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. அவ்வப்போது தமிழ்நாட்டிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இதெல்லாம் வெளிநாடுகளில் நடக்கிறது, நமக்கு வராது ஏனென்றால் இது  'புண்ணிய'பூமி என்று நினைத்து சும்மா இருந்துவிட முடியாது. உலகில் எப்போதும் எங்கேயாவது ஓரிடத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கிறன்றன. நமக்கும் நடக்கிறது.

தகவல் தொடர்பு தொழில் நுட்பம் வளராத காலங்களில் ஒரு நிகழ்வு நடந்த மூன்றாம் நாள்தான் நமக்கு செய்தியே தெரிய வரும். ஆனால் இப்போது மூன்று நிமிடங்கள் என்பது அதிகம். இதனால் பதற்றம் வேகமாகப் பரவுகிறது என்பது உண்மைதான். ஆனால் மீட்புப் பணிகளும் வேகமாகச் செய்ய முடிகிறது என்பதும் உண்மையே.
முன்பு சுனாமி தாக்கிய பகுதிகளில் கடலூரும் ஒன்று. இப்போது 'தானே' புயலும் தன் பங்குக்கு கடலூரை சின்னாபின்னமாக்கி விட்டது. 'தானே' தாக்கிய மூன்றாம் நாள் நான் (கட்டுரையாளர்) அங்கு இருந்தேன். அதாவது புயல் மீட்புப் பணிகளுக்காக அலுவலகப் பணி மேற்கொண்டேன். ஒரு நிமிடம் இலங்கை யுத்தக் களத்திற்கு வந்து விட்டோமோ என்று அதிர்ந்து போனேன். இயற்கை தொடுத்த போர் அது. குண்டு வீச்சு நடந்ததா என்று அய்யம் ஏற்பட்டது. அந்தக் கொடுமையைச் சொன்னால் சொல்லில் அடங்காது;எழுதினால் ஏட்டில் அடங்காது; அது இருக்கட்டும்.   இது போன்ற நிகழ்வுகளால் ஏற்படும் உயிர்ச் சேதங்கள் பொருளாதார இழப்புகள் ஆகியவை பணத்தால் மதிப்பிடப் படுகின்றன. இயற்கையின் தாக்குதலுக்குள்ளான இடத்தில் தப்பிய மனிதர்களுக்கு ஏற்படும்  மன அழுத்தத்திற்கு  அரசும் தொண்டு நிறுவனங்களும் கொடுக்கும் பணம் சார்ந்த இழப்பீடுகள் போதுமா? (போதுமானதா என்பது வேறு கேள்வி)    சுனாமி போன்றவற்றின் தாக்குதலைக் குறைக்க அலையாத்தி(னீணீஸீரீக்ஷீஷீஸ்மீ )(அலைகளின் வேகத்தைக்  கட்டுப்படுத்தும்) மரங்களை வளர்க்கலாம் என்று சொல்கிறார்கள். அதற்கான செயல் வடிவம் எந்த அளவில் இருக்கின்றதென்று தெரியவில்லை. ஆனால், மனமாத்தி முறைகளைப் பற்றி தெரிந்துகொண்டால் மன அலைகளின் வேகம் குறைந்து வாழ்க்கைப் படகை செலுத்த வசதியாக இருக்கும்.   இயற்கை இடர்பாடுகளால் நீங்கள்  உடல் ரீதியாகப் பாதிக்கப் படவில்லையென்றாலும் அது மோசமான உணர்ச்சிப் பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. மன அழுத்தம், புரியாத எண்ணங்கள், மன ஒருமுகப்படுத்த இயலாமை,முடிவெடுக்க இயலாமை,உண்ணும் உறங்கும் முறைகளில் பாதிப்பு, பாதிப்பு ஏற்பட்ட நினைவு நாட்களில் பதட்டம், அதே போன்ற நிகழ்வுகள் வேறிடங்களில் நடந்தாலும் அதிர்ச்சி, மற்றவர்களோடு பழகுவதில் சிக்கல், தலைவலி, குமட்டல், நெஞ்சுவலி போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.
மனதில் உறுதி வேண்டும். எங்கேயும் எப்போதும் எதுவும் நடக்கலாம் என்பதால் அந்த எதிர்பாராததை எதிர்கொள்ள முன் தயாரிப்பு செய்துகொள்வது நல்லது. அடிக்கடி வெள்ளம் ஏற்படும் கடல் மற்றும்  நதிக்கரையோர மக்கள் தங்கள் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது குறித்து எப்போதும் கவலைப் படுவது உண்டு. அவர்களின் நிலையற்ற வாழ்க்கை மிகவும் கவலைக்குரியது. வெள்ளம் வரப்போகிறது என்ற அபாய அறிவிப்பு அவர்களுக்கு மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் பயத்தையும் உண்டாக்குகிறது. பயம் பதற்றத்தைச் சமாளிக்கும் எளிய பயனுள்ள வழிகளைத் தெரிந்துகொள்வோம். இது வெள்ள நேரத்தில் மட்டுமல்லாமல் எல்லாச் சூழ்நிலைகளிலும் உங்கள் உடல், மன நலனுக்கு ஏற்றதாக இருக்கும்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். வெள்ள அபாய நேரத்தில் நீங்களும் உங்கள் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் உங்கள் கால்நடைகள், செல்லப் பிராணிகள் ஆகியவையும் பாதுகாப்பாக இருக்க ஒரு திட்டத்தை வைத்திருப்பது அவசியமாகும். அண்மைய இயற்கைப் பேரிடர்கள் சொல்லிக் கொடுத்தப் பாடம் அதுதான். அரசோ, மற்றவர்களோ உங்கள் உதவிக்கு வருவார்கள் என்று எதிர் பார்க்காமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே முடிவு செய்யுங்கள். கிடைக்கக்கூடிய போக்குவரத்து சாதனம், உங்களுக்கு உதவக்கூடிய உறவினர், தங்குமிட விவரங்கள் வேறு தனியார், அரசு சார்ந்த உதவும் அமைப்புகளின் விவரங்களைத் தெரிந்து வைத்திருப்பது அபாய நேரத்தில் உங்கள் பதற்றத்தைக் குறைக்கும்.
உண்மைச் செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். இது போன்ற நேரங்களில் உண்மையை விட புரளி வேகமாகப் பரவுவதுண்டு. ('தானே' புயல் தாக்கிய சில நாட்களில் கடலூரில் சுனாமி புரளி பரவியதால் கடலோர மக்கள் ஒரு இரவு முழுவதும் ஒரு உயரமான பாலத்தின் மீது நின்று கொண்டிருந்தனர்.) அதனால் உண்மையான தகவல்களைச் சேகரியுங்கள். அது உங்கள் அபாய நிலையின் அளவைச் சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். அது உங்கள் வீண் அலைச்சலைக் குறைக்கும். உள்ளூர் செய்தி நிறுவனங்கள், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகங்கள்,மக்கள் செய்தித் தொடர்பு அலுவலகங்கள் ஆகியவற்றின் அலுவலர்கள் கூறும் செய்திகள் உண்மையாக இருக்கும். அவர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது நல்லது. ஒரே செய்தியை பல பேர் பல முறை கூறுவதால் அபாயத்தின் அளவு அதிகமாகத் தெரிய வாய்ப்புள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.
தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
குடும்ப உறுப்பினர்களிடமும் நண்பர்களிடமும் தொடர்பிலேயே இருங்கள்.இது உங்கள் வலிமையின் ஆதாரம். ஒருவருக்கொருவர் நெருங்கி இருப்பதும் உதவி செய்து கொள்வதும் உங்கள் மன நலனுக்கு ஏற்றது. நல்ல உடல் நலனைப் பராமரிப்பது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை - சரியான அளவு சரிவிகித உணவு, உடற்பயிற்சி, ஓய்வு ஆகியவை எந்த விதமான அச்சுறுத்தலையும் சமாளிக்கக் கூடியது. ஆரோக்கியமான உடல் எண்ணங்களில் நேர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு வெள்ளம் போன்ற அபாய நேரங்களில் நல்ல முடிவுகளை எடுக்க உதவும்.
குழந்தைகளோடு நெருக்கமாக இருங்கள்.
உங்கள் குழந்தைகள் தேவையில்லாத செய்திகளைக் கேட்பதைத் தடுங்கள். நாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம் என்று கூறி அவர்களுக்கு ஆறுதல் சொலுங்கள். (சுனாமியின் போது கடலூரில் ஒரு தாயும் ஏழு வயது பெண் குழந்தையும் வெள்ளத்தில் தூக்கி எறியப்பட்டு மின் கம்பத்தை தாயும் மின் கம்பியை குழந்தையும் பிடித்துக்கொள்ள ,(மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது) அவர்கள் காப்பாற்றப்படும் வரை அந்தக் குழந்தைக்கு அந்தத் தாய் தைரியம் சொல்லிக் கொண்டே இருந்தாராம்.-இதை அவர்களே சொல்லக் கேட்டேன்.)
நம்பிக்கையுடன் இருங்கள்.
அரசு ஊழியர்கள், மீட்புக் குழுவினர், ராணுவம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்றவை ஏற்கனவே மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதை நினைவில் வையுங்கள். அவர்களுடைய நடவடிக்கைகள் போதிய முன்னேற்றத்தை அடைந்திருக்கும் என்பதை நம்புங்கள். நீங்கள் ஏற்கனவே இது போன்ற சூழ்நிலைகளில் இருந்து வெற்றிகரமாக மீண்டிருந்தால் அந்த அனுபவத்தை வைத்து இப்போதைய சூழ் நிலையை சமாளிக்க முயற்சி செய்யுங்கள்.
உதவியை நாடுங்கள்.
பயம் பதற்றத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது நீடித்த பின் விளைவுகளால் மற்றவர்களுடன் பழகுவதில் அல்லது வேலையில் அக்கறையின்மை போன்ற சிக்கல்கள் இருந்தால் உரிய பயிற்சி பெற்ற மன நல வல்லுனரின் உதவியை நாடுங்கள். அவர்கள் உங்களின் இயல்பான வாழ்க்கைக்கு மீள உதவுவார்கள்.
நில நடுக்கத்தால் ஏற்படும் மன நடுக்கம்.
தமிழ்நாட்டில் அவ்வப்போது லேசாக நம்மை நடுங்க வைத்துக் கொண்டிருப்பது நில நடுக்கம். 2001 ஜனவரி 26 ம் நாள்  குஜராத்தில் நிகழ்ந்த பூகம்பம் மிகப்பெரும் சேதம் விளைவித்து சில கிராமங்களை முற்றிலுமாய் அழித்து விட்டதை கண்ட போது அனைவர் மனதிலும் ஓர் அச்சம் ஊடுருவ ஆரம்பித்துள்ளது. ஏனென்றால் வடக்கே ஆயிரம் கி.மீ. தாண்டி பிளந்த பூமி தெற்கே திருவையாறு வரை நிலத்தை அசைத்திருக்கிறது. அதைத் தவிர இப்பொழுது பாதுகாப்பான பகுதி என நம்பிக் கொண்டிருந்த சென்னையிலும் அவ்வப்போது  ஐந்து விநாடி பூமி அசைவு.   நில நடுக்கம் ஏற்பட்ட இடங்களில் நம்முடைய குடும்பத்தாரோ, உறவினரோ, நண்பர்களோ இருந்தால் அவர்களுடைய பாதுகாப்பு நிலைமைப் பற்றி அறிந்தோ கொள்ள அதைப் பற்றிய செய்தியை மிகுந்த கவலையுடன் கவனிப்பது இயற்கையே. ஆனால்...
நாம் என்ன செய்ய வேண்டும்?
செய்திகளுக்கு இடைவேளை,  இடைவெளி இல்லாமல் செய்திகளைக் கேட்பது அழுத்தத்தை மிகவும் அதிகப்படுத்தும். உங்கள் அன்புக்குரியவர் நில நடுக்கம் பதிக்கப்பட்ட இடத்தில் இருந்தாலும் சற்று இடைவெளி விட்டு செய்திகளைப் பாருங்கள். அந்த இடங்களில் அவ்வளவு விரைவாக செய்தி திரட்ட முடியாது என்பதாலும் தகவல் தொடர்புக் கருவிகள் பழுதடைந்திருக்கும் என்பதாலும் உடனடி செய்தி கிடைக்க வாய்ப்பில்லை. நிதானமாக இருங்கள்.
உங்கள் அன்றாட செயல்களைத் தொடருங்கள்.
வழக்கமான வேலைகளைச் செய்வதன் மூலம் தொடர்ந்து நிலநடுக்கம் பற்றிய செய்திகள் கேட்பதையும் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதையும்  தவிர்ப்பதால் பதற்றம் சற்றுக் குறையும்.
உடலை நல்ல ஆரோக்கியமுடன் வைத்துக் கொள்வதால் உணர்ச்சிகளை நல்ல நிலையில் நிர்வகிக்க முடியும்.
எதையும் எதிர் பாருங்கள்.
ஒரு பூகம்பம் ஏற்படுத்தும் பயங்கரமான பேரழிவு எந்த விதமான செய்தியையும் கொண்டுவரலாம். என்றாலும் நேர்மறையான எண்ணத்துடனே இருங்கள். நம்பிக்கையுடனும் பக்குவத்துடனும் அடுத்து வரும் நாட்களை எதிர் நோக்குங்கள்.
உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.
பல்வேறு நிறுவனங்கள் பூகம்பத்தில் தப்பிப் பிழைத்தவர்களுக்கு பல வகைகளிலும் உதவி செய்கின்றன. அவர்களுக்கு பணமாகவோ உடல் உழைப்பின் மூலமோ உதவி செய்வதன் மூலம் நிச்சயம் நல்ல மாறுதல் (ஆறுதல்) கிடைக்கும்.
நம்பிக்கையை கை விடாதீர்கள்.
துன்பம் நிறைந்த அனுபவத்தால் மனதை பக்குவப் படுத்திக் கொண்டதன் மூலம் மரியாதைக்குரிய வளர்ச்சியை அடைய முடியும். இதன் மூலம் தன் வலிமையைத் தெரிந்துகொள்ள முடிவதுடன் வாழ்வதற்கு அர்த்தத்தை ஏற்படுத்த முடியும்.
உளவியலாளர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
சாதாரணமாக அளிக்கப்படும் அறிவுசார்ந்த, நடத்தை சார்ந்த, அறிவு-நடத்தை இணைந்த, இணைந்து பழகும் முறை, மனிதாபிமான நடத்தை, உள வலிமை படுத்தல் ஆகிய முறைகளில் ஒன்றையோ சிலவற்றை இணைத்தோ சிகிச்சை அளிப்பதன் மூலம் தனிஆளோ தம்பதியரோ குடும்பமோ பயனடையும்.ஹிப்னாடிச சிகிச்சை அளிப்பதன் மூலம் வலிகள், பதற்றம்,பிறழ் மனநிலை ஆகியவை பெரிய அளவில் குணமாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உளவியலாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் மன அழுத்தம்,உணர்ச்சிக் கொந்தளிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். அவர்கள், உயிர் பிழைத்தவர்களுக்கும் தொண்டர்களுக்கும் மீட்புக் குழுவினருக்கும் அவர் களுடைய உணர்ச்சி நிலை, கோபம், அழுத்தம், துயரம் ஆகியவற்றைப் புரிந்து நடந்து கொள்ள உதவுகிறார்கள்.
பேரிடர் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீண்டு தன்னம்பிக்கையுடன் வாழ ஊக்கப்படுத்துகிறார்கள். சிறிய ஆரம்பத்திலிருந்து படிப்படியாக நீண்ட நாள் இலக்கை அடையும் வழிமுறைகளைக் கற்றுக் கொடுக்கிறார்கள்.
பேரிடரின் தாக்கத்திலிருந்து குழந்தைகள் மீண்டு எதிர்கால வாழ்வை அமைத்துக் கொடுப்பதைப் பற்றிய பெற்றோரின் கவலைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
குடியிருப்பில் உடன் வசிப்பவர்கள், தொண்டர்கள் மற்றும்  ஊழியர்களுடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டை நீக்க உதவுகிறார்கள். உயிரிழந்த குடும்பத்தினர்,உறவினர் ஆகியோரைப் பற்றிய கவலைகளை மறக்க உதவுகின்றனர். பேரிடரிலிருந்து தப்பியவர்களுக்கு பயம்,பயங்கரக் கனவுகள்,உறுத்தலான மன நிலை,குழப்பம் போன்ற விளைவுகள் ஏற்படுவது இயல்பே எனவும் தக்க சிகிச்சையின் மூலம் வழக்கமான வாழ்க்கைக்கு திரும்ப முடியும் எனவும் தெளிவுபடுத்தி அதற்கான ஆவன செய்கிறார்கள். குழந்தைகளுக்குச் சிறப்பாகப் பயிற்சி பெற்ற நிபுணர்கள் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு  தக்க வழி காட்டுகிறார்கள். நீண்ட கால உதவியை எங்கே எப்படி பெறுவது என்பது போன்ற வழிகாட்டி ஆலோசனையைத் தருகிறார்கள்.
திடீரென்று ஏற்படும் இழப்புகளை  "இயற்கையின் கோணல் புத்தி" என்று தந்தை பெரியார் சொல்வார். பேரிடர் நிகழ்வுகளில் ஏற்படும் துயரங்களைத் தாங்கிக் கொள்ள பகுத்தறிவைப் பயன் படுத்த வேண்டும்.ஏற்கனவே பட்டறிவு (பட்ட அறிவு) உள்ளவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இனி இப்படியொரு நிகழ்வு ஏற்படக்கூடாது என்பது விருப்பமாகும் . நிகழ்ந்தால் எப்படித் தாங்கிக் கொள்வது என்பதைத் தெரிந்து கொள்வது நம் பொறுப்புமாகும்.
- க.அருள்மொழி

Saturday, July 14, 2012

எதில் வேண்டும் தூய்மை?

எதில் வேண்டும் தூய்மை?


தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 52 விழுக்காடு மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் 'பெரும்பான்மை' என்று பெருமையாக சொல்லிக்கொள்ள முடியாது.

6 விழுக்காடு மக்கள் பொதுக் கழிப்பிடத்தைப் பயன் படுத்துகிறார்கள் என்றும் அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 விழுக்காடு மக்கள் மட்டுமே வீடுகளில் கழிப்பறைகளைக் கட்டிப் பயன்படுத்துகிறார்கள்.
கழிப்பறை இல்லாத வீடுகள் அனைத்தும் வசதி இல்லாதவர்களின் வீடு என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் தோப்புகளிலும் ஆற்றோரங்களிலும் 'போய்' பழகிவிட்டனர். வீடு கட்டும்போது கழிப்பறைக் கட்டவேண்டும் என்ற சிந்தனையே வருவதில்லை அவர்களுக்கு. உண்மையான 'வாஸ்து' வல்லுனர்கள் போலிருக்கிறது!
சுத்தம்-அசுத்தம், புனிதம்- தீட்டு, தூய்மை-அழுக்கு, ஆசாரம்-அனாசாரம் என்ற வார்த்தைகளைக் கற்றுக் கொடுத்த இந்தச் சமூகம் வாழ்க்கையில் இதைப் பயன்படுத்த வலியுறுத்திக் கற்றுக் கொடுக்கவில்லை.
வெளியிடங்களைக் கழிப்பறைகளாகப் பயன் படுத்திப் பழக்கப்பட்டு விட்டதால் திறந்த வெளி எல்லாமே அசுத்தம் செய்யுமிடங்கள்தான் என்று  நினைக்கிறார்கள். கண்ட இடங்களில் எச்சில், சளியைத் துப்புவது பற்றி சிறிதும் கூச்சப் படுவதில்லை நம் மக்கள். சாலையோரங்களில் மலம் கழிக்கலாம் எனும்போது சாலை நடுவில் எச்சில் துப்புவதில் தவறென்ன இருக்க முடியும்?
இன்றைய நாளில் இன்றியமையாப் பொருளாகிவிட்ட செல்பேசி பயன் படுத்துகிறவர்கள் 74 விழுக்காடாம். அதி நவீனக் கருவியைப் பயன்படுத்தும் இம்மக்களில் பலர்  நவீன கழிப்பிடத்தைப் பயன்படுத்தாது ஏனோ?
தூய்மை சுகாதாரம் என்பதையெல்லாம் எதோ படிக்காத பாமரர்கள்தான் கடைபிடிக்காமலிருக் கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். படித்த மேதாவிகள் கூட இந்த விஷயத்தில் அறியாமையில் தான் இருக்கிறார்கள்.
நாம் எடுத்துச் சொல்லப் போனால் "நீ என்ன பாப்பார வீட்டில் பொறந்த மாதிரி பேசற?" என்று(பார்ப்பனர்கள்தான் சுத்தத்திற்கு 'அதாரிட்டி'என்பது போல) கேட்கிறவர்கள் இருக்கிறார்கள். அன்றாட வாழ்வில் செய்யும் ஆரோக்கியமற்ற செயல்கள்.
தூய்மையாக இருப்பது என்பது கண்களுக்கு அழகு என்பது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு  அதுவே ஆதாரம்.
எச்சில் படிப்பு :
'படித்த' மக்கள் செய்யும் முக்கியமான ஒரு செயல் என்ன தெரியுமா? புத்தகத்தை எச்சில் தொட்டுப் புரட்டுவதுதான். இதுவரை எனக்குப் புரியாதது அதுதான்! 'நான் புரட்டும் போது எச்சில் தொடாமலே திரும்பி விடுகின்ற பக்கங்கள் இவர்களுக்கு மட்டும் ஏன் இப்படி முரண்டு பிடிக்கிறது?' பழையப் புத்தகங்களில் பூஞ்சான், பாக்டிரியா போன்றவை அலர்ஜியை ஏற்படுத்தி உடலுக்கு கேடு விளைவிப்பதைச்  சொன்னால், "ஆமாம், அப்படியே ஒட்டிகிறது!" என்று முகம் திருப்பிக் கொள்கிறார்கள் நண்பர்கள்! பணத்தாளை எண்ணும்போதும் இதே செயல்தான் தொடர்கிறது!
வாகனத்தில் செல்லும்போது எச்சில் துப்புதல்!
நம்மவர்களுக்கு எந்த தவறான பழக்கத்தையும் உடனே பற்றிக் கொள்ளும் 'ஆற்றல்' உண்டு! பான் பராக், குட்கா போன்ற தேவையற்ற பொருளை வாயில் போட்டுக்கொண்டு உடலுக்குத் தேவையான உமிழ் நீரை வெளியேற்றி விடும் 'நல்ல' பழக்கம் நமக்கு உண்டு! இந்தப் பழக்கத்தினால் அவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதோடு மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று சொன்னால் துப்புக் கெட்டவர்கள் மறுப்பார்கள்! கழிப்பிட வசதிதான் இல்லை.
ஆனால் வாகன வசதி பலருக்கும் வாய்த்து விட்டது! இதைப் பொறாமைப் பட்டுச் சொல்வதாக நினைப்பார்கள் சிலர். வாகனத்தில் போகிறவர்கள் அடுத்தவர்களுக்கு இடையூறு செய்யாமல் போனால் இதைப் பற்றிப் பேசப் போவதில்லை.
இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருப்பவர்கள் பின்னால் வருபவர்களைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் எச்சிலைத் துப்பிவிட்டுப் போகும்போது அந்த வாகனத்தைத் தொடர்ந்து வருபவர்கள் எச்சில் தன் மீது பட்டு விடக் கூடாது என்று 'சட்'டென்று பிரேக் போட, அவரைத் தொடர்ந்து வருபவர்கள் அவர் மீது மோத என ஒரு விபத்து நடப்பதற்கு ஒரு 'எச்சில்' காரணமாகி விடுகிறது.
அகத்தின் நலம் நகத்தில் உள்ளது! உடல் உழைப்புத் தொழில் செய்பவர்களின் கைகள் அழுக்காகத்தானிருக்கும். ஆனால் அவர்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதைப் பார்த்து நாம் கவலைப்படாமல் இருக்க முடியாது. அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் நகக் கண்களில் உள்ள அழுக்கால் எவ்வளவு கெடுதல் என்பதைப் பற்றிச் சொல்வதனால் அவர்கள் ஆரோக்கியம் காக்கப் படும்.
இங்கே இன்னொரு செய்தியையும் கவனிக்க வேண்டும். அழுக்கில் வேலை செய்பவர்கள் நகத்தில்தான் அழுக்கு உள்ளதா? 'கறை' படியாத வேலை செய்பவர்களும் சுத்தத்திற்கு 'அதாரிட்டி' எனப்படுபவர்களும் கூட நகத்தை வெட்டி தூய்மையாக வைத்துக் கொள்வதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல்தான் இருக்கிறார்கள்.
பெண்கள் பலர் நகப் பூச்சு (nail polish) பூசுவதால் வெளியில் தெரியாமல் இருக்கிறது. ஆனாலும் சுகாதார நோக்கில் மறைப்பதால் எந்தப் பயனும் இல்லையே?
வாரம் ஒருமுறை விரல்களைத் தாண்டி வளர்ந்த நகத்தை நறுக்கிப் பராமரிப்பது நல்லது.     'உணவு உண்பதற்கு முன்பும் மலம் கழித்த பின்னும் சோப்புப் போட்டு கழுவுங்கள்' என்று சொன்னால் "ரொம்ப சுத்தம் பார்க்கிறவர்களுக்குத்தான் எல்லா நோயும் வரும், எங்களுக்கு ஒன்றும் ஆகாது" என்று வியாக்கியானம் பேசுகிறவர்கள் உண்டு! அவர்களுக்கு வருகின்ற நோய்க்கு 'அது'தான் காரணம் என்று புரியாமலே!
நார்வேயில் இந்தியத் தம்பதிகள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் கலாச்சாரப்படி கையால் உணவு ஊட்டியதால் அந்தக் குழந்தைகளை அவர்களிடமிருந்து பிரித்து காப்பகத்தில் வைத்திருப்பது கூட சுகாதாரத்தை வலியுறுத்தத்தான்.
கைகளால் உணவு ஊட்டும்போதுதான் தாய்க்கும் குழந்தைக்கும் பாசப்பிணைப்பு அதிகரிக்கிறது என்று வாதிடுவோர் உணவு ஊட்டும் முன் தன் கைகளை நன்கு சுத்தம் செய்துவிட்டோம் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இல்லை என்றால் நோய்க்கும் குழந்தைக்குமான பிணைப்புதான் அதிகமாகும்.
கைக் குழந்தைகளுக்கு மாட்டுப் பால் கொடுக்கும்போது கூட பாட்டிலில் கொடுக்காதீர்கள், அந்த பாட்டிலை முழுமையாக தூய்மைப் படுத்துவது கடினம். அதனால் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படக் காரணமாகிறது.. ஸ்பூனில் மெதுவாக ஊட்டுங்கள் அதைத் தூய்மைப் படுத்துவது எளிது என்று மருத்துவர்கள்  சொன்னால் எத்தனை பேர் கேட்கிறார்கள்? மீண்டும் மீண்டும் மருத்துவரிடம் ஓடும் நேரத்தைப் பார்த்தால் ஸ்பூனில் ஊட்டும் நேரம் குறைவுதானே? பணமும் மிச்சம். குழந்தையும் நலமாக இருக்கும்.
பக்தி வந்ததால் போனது புத்தி:
நம்முடைய கோயில்கள் புனிதமானவையாம்! அதாவது அதி தூய்மையானது என்று பொருள். ஆனால் அங்கு இருப்பதைப் போல் ஆபத்தான நோய்க் கிருமிகள் வேறெங்கும் இருக்காது. தேங்காய் உடைப்பது, கூழ் ஊற்றுவது, கால்களைக் கழுவி வணங்குவது என்று கண்ட இடங்களையும் ஈரமாக்கி அதன் மீதே நடந்து சேறும் சகதியுமாக்கிவிட்டு பக்திப் பரவசத்தில் தன்னை மறந்திருக்கும் போது கிருமித் தொற்றுக்கு ஆளாகிறார்கள் பக்த கோடிகள்.

அதாவது கடவுளின் அருளைப் பெற்று விடுகிறார்கள்! கோடைக் காலத்தில் நடக்கும் திருவிழாக்களில் பல ஆயிரம் பேர் ஒன்றாகக் கூடும்போது ஒருவரின் வியர்வை மற்றவரின் உடலில் சவ்வூடு பரவல் மூலம் பரிமாறப்படும் பாருங்கள்! சந்தேகமே வேண்டாம்.

தேகம் அடையும் கும்பி பாகம்.  அப்புறம் கோயில்களில் அபிஷேகம் செய்ய பக்தர்கள் கொடுத்த பிரசாதத்தை (பிறர் சாதத்தை?)அய்யர் தன் 'கையால்' கொடுப்பார் பாருங்கள் அதற்கு அலாதி சுவை உண்டு! கூடவே வியாதி பரவுவதும் உண்டு!
மூக்கில் மூச்சு விடுங்கள் _ விரலை அல்ல!
உங்கள் அருகில் உள்ளவர்களோ அல்லது நீங்களோ மூக்கில் விரலை வைத்து குடைந்து கொண்டிருப்பவரா? நீங்களோ உடன் இருப்பவரோ யார் இந்த செயலைச் செய்தாலும் அதனால் குடைபவருக்கு ஏற்படும் பிரச்சனை கொஞ்சம் தாமதமாகக் கூட ஏற்படலாம்.
ஆனால் உடன் இருப்பவர் படும் அவஸ்தை உடனடி விளைவு! உண்மையில் மூக்கைக் குடைபவர் ஒரு வித போதை மயக்கத்தில் இருக்கிறார்! அவருடைய இரண்டு கைகளுக்கும் ஒரே நேரத்தில் வேலை இல்லை என்றால் ஒரு கையை மூக்கிற்குள் செலுத்தி விடுகிறார்.
பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் மூக்குக் குடையும் அருவருப்பான பழக்கத்திற்கு ஆளானவர் என்று அவருடைய முன்னாள் பாதுகாவலர் கூறியதாக 'டெய்லி மெயில்' பத்திரிக்கை கூறுகிறது.
நம் நண்பர்கள் சிலர் இப்படி 'பயமுறுத்தும்' அளவிற்கு மூக்குக் குடையும் போது அவரிடமிருந்து எப்படித்தப்பிப்பது என்று நாம் மூக்கை சொரிந்து யோசிக்க வைக்கிறது. எங்கேயும் எப்போதும் அவர்கள்  "ஒரே முறை" என்று நினைத்துக் கொண்டு வரைமுறை இல்லாமலும் "யாரும் கவனிக்க மாட்டார்கள்" என்று நினைத்துக் கொண்டு மற்றவர்கள் முகம் திருப்பிக் கொள்ளும் அளவிற்கும் இந்த செயலைச் செய்கிறார்கள்.
இதனால் ஏற்படும் 'நோய்த் தொற்று' என்பது அவரைப் பொறுத்தது. ஆனால் அவரை விட்டு விலகும் நேரத்தைப் பார்ப்பது நம்மைப் பொறுத்தது.
இதே போன்று தான் வாயில் விரலை விட்டு உணவுத் துணுக்குகளை அகற்றுவது, காது குடைவது, வாயில் எச்சிலோடு பேசுவது, தெருவில் வந்து பல் தேய்ப்பது, அக்குளில் கை வைத்து சொரிந்து கொண்டே பேசுவது  போன்றவையும் அடுத்தவர் நம்மை 'அண்ட' விடாமல் செய்யும் செயல்களாகும்.
உணவகத்தில் உள்ளவர்களுக்கும்- உண்பவர்களுக்கும்:
உணவகங்களில் பரிமாறப்படும் உணவோடு சேர்த்து அவர்கள் செய்யும் 'சேவை' பாக்டிரியா வையும்  பரிமாறுவதுதான்! டைப்பாய்டு நோயை உண்டாகும் பாக்டிரியாக்கள் தண்ணீர் அல்லது உணவோடு கலந்து மனிதர்கள் மீது பயணித்து அடுத்த மனிதர்களுக்கும் பரவுகிறது.

மாசடைந்த, ஆரோக்கியமற்ற தண்ணீர் அல்லது உணவின் மூலம் காலரா, வயிற்றுப்போக்கு போன்றவையும் உண்டாகிறது. விரலை விட்டுக் கொண்டுவரும் தண்ணீர் டம்ளர்கள் விரல் விட்டு எண்ணும் நாளில் நமக்கு நோயைக் கொண்டு வருவது நிச்சயம்.
விலை மலிவான உணவகங்களில் இந்த சுகாதாரம் என்பது கொஞ்சமும் பேணப்படு வதில்லை. விலை குறைவு என்பது கவனக் குறைவு, ஆரோக்கியக் குறைவு என்றும் பொருள்படும்.
உணவகங்களில் உண்ணும் அவசியம் ஏற்படும்போது நன்கு கொதித்து வேக வைக்கப்பட்ட உணவுகளை சூடாக இருக்கும் போதே உண்ண வேண்டும். கொதிக்க வைக்கப் பட்ட தண்ணீர் அல்லது குளோரின் மூலம் சுத்தமாக்கப்பட்ட தண்ணீரைக் கேட்டு வாங்கிக் குடிக்கலாம்.
சாலட் எனப்படும் காய்கறி அல்லது பழக் கலவைகளை உணவகங்களில் உண்ண வேண்டாம். அவை அவ்வளவு சுகாதாரமாக தயாரிக்கப்படுவதில்லை. பழச்சாறு வகைகளும் அப்படித்தான். இறைச்சி வகைகள் கூட பல உணவகங்களில் பயன்படுத்தப்படுபவை புதிய மாமிசங்களாக இருப்பதில்லை.
மேலும் கொழுப்பு நிறைந்ததாக உள்ளன.  உணவகத்தில் நல்ல தரமான உடலைக் கெடுக்காத உணவுகளைப் பரிமாறினால்தான் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வருவார்கள். உணவகம் நலமாக இயங்கும்.
அதற்கு உணவாகப் பணியாளர்களுக்குச் சில அறிவுறுத்தல்களை உரிமையாளர்கள் கொடுக்கவேண்டும்.
1. அடிப்படையான சுகாதார பயிற்ச்சிகளை வழங்க வேண்டும். அவர்களது ஆடை முதற்கொண்டு சரியாக வடிவமைக்கப்பட  வேண்டும். நகங்கள் , தலை முடி சரியாக திருத்தப் பட்டிருக்க வேண்டும்.பற்களை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.
2. தரமான சேவை வழங்குவது குறித்தும் விருந்தோம்பல் செய்வது குறித்தும்  பயிற்சி வழங்கப் பட வேண்டும்.
3. உணவகங்களில் வேலை செய்ய உண்மையிலேயே விருப்பமுள்ளவர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த வேண்டும்.
4. வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் பணியாளர்களுக்குப் பாராட்டும் பரிசும் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். அன்றாட வாழ்வில் அவரவர் நலனைப் பேணுவதோடு மற்றவர் நலனிலும் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.
நம்முடைய வேளைகளில்  சோம்பல் படாமல் சுகாதாரத்தில் அக்கறையுடன் செயல் பட்டால் நம்மை சுற்றியுள்ள வர்கள் நம் மீது ஒரு பெருமிதப் பார்வையைப் படர விடுவார்கள். படிப்பறிவு என்பது பகுத் தறிவுடன் இருக்க வேண்டும். பகுத்தறிவு என்பது சுகாதார விஷயத்திலும் இருக்க வேண்டும்.
- க.அருள்மொழி

Thursday, May 10, 2012

மதம் பிடித்து அலையாதீர்

மதம் பிடித்து அலையாதீர்

- க.அருள்மொழி

மனிதர்கள் குழந்தைகளாகப்  பிறந்தவுடன் அவர்களுக்குப் பெயர்வைக்கும்போதே அக் குழந்தையின் பெற்றோர் சார்ந்திருக்கும் மதத்தின் சாயல் தொணிக்குமாறு பெயரிடப்படுகிறது. அந்த மதத்தின் குறியீடுகள் அவர்களின் உடலில் அணிவிக்கப்படுகிறது. தொடர்ந்து அம்மதத்தின் சடங்குகள் சம்பிரதாயங்கள் கற்பிக்கப்படுகின்றன. அவன் அந்த மதத்தைவிட்டு விலகாதபடியும் மதத்தைப் பற்றிய தவறான எண்ணங்களைக் கற்றுக்கொள்ளாதபடியும் புலன்களுக்கு மூடி போட்டு வளர்க்கப்படுகின்றான். மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டம் தன்னுடைய சுகபோக வாழ்வுக்குப் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக தன் மதத்தைச் சார்ந்தவர்களுக்குத் தரும் போதனைகள் என்னும் 'போதை' தெளியாமல் இருக்கும் வரை சாதாரண மக்களுக்கு நலவாழ்வு என்பது சாத்தியமில்லை.
இங்கு நாம் பேசப்போகும் கருத்து உலகில் உள்ள எல்லா மதத்தினருக்கும்-மதம் சார்ந்த மக்களுக்கும் (மக்குகளுக்கும்) மதவாதிகளுக்கும் (வியாதிகளுக்கும்) பொருந்தும். இந்த மத போதனை மயக்கத்தில் இருப்பதால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
ம(னி)த பொம்மைகள்: பொதுவாக மனிதர்கள் தன்னுடைய மனக்குழப்பம் அல்லது உடல் பிரச்சினைகள் தீர்வதற்காகத்தான் மதத்தையும் மதவாதிகளையும் நம்பிச் செல்கிறார்கள். அப்படிச் செல்லும்போது அவர்களுக்கு ஏற்பட்ட அப்பிரச்சினை தீர்ந்து தெளிவு பிறக்க வேண்டும். மாறாக, நாம் அன்றாடம் செய்திகளில் பார்க்கும் அல்லது அக்கம்பக்கத்தில் நடக்கும் நிகழ்வுகள் சொல்வது, பழைய குழப்பம் தீராதது மட்டுமல்லாமல் புதிய பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வதுதான். இந்தக் குழம்பியக் குட்டையில் மதவாதிகள் நன்றாக மீன் பிடிக்கிறார்கள். இந்த மக்குகள் தெரிந்தே வலையில் மாட்டிக் கொள்கிறார்கள்.
மாறாக, சொந்த அறிவைக் கெண்டு சிந்தித்து வள்ளுவர் கூறியபடி "நோய் நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" பிரச்சினையை எளிதில் முடித்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஏதுவாகும். மாறாக, "இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட..." என்பதுபோன்ற  பொருளற்ற பாடல்களுக்குப் பொருத்தமாக பொம்மை மனிதர்களாக வாழ்வது நம்முடைய சுயமரியாதையைக் குறைப்பதோடு தெளிவான மன வளர்ச்சியைப் பாதிக்கும். உள்ளார்ந்த அறிவை மழுங்கச் செய்யும். "மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு"- பெரியார்.
தொலைநோக்குத் தொலையும்: உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறு- உங்களை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் சேர்த்து அடையாளப்படுத்திக் கொள்வதுதான். அதாவது, "நான் ஒரு இந்து" அல்லது "நான் ஒரு கிறித்துவன்" அல்லது "நான் ஒரு முஸ்லிம்" அல்லது "நான் ஒரு பவுத்தன்" என்று சொல்லிக் கொள்வது உங்களின் சிந்தனையை ஒரே இடத்தில் நகராமல் செய்துவிடும். மூர்க்கத்தனமாக, உண்மையைச் சரியாகப் புரிந்துகொள்ளமுடியாத நிலைக்கு ஆளாக்கிவிடும். காரணம், மதங்கள் சொல்வதெல்லாம் ஏதோ ஒரு காலத்தில் சொல்லப்பட்டவை. அவற்றைப் பற்றி மறுபரிசீலனைக்கு அனுமதி இல்லை. காட்டுமிராண்டிக் காலத்தில் சொல்லப்பட்டவை கம்ப்யூட்டர் காலத்தில் பொருந்துமா என்பதைப் பற்றி கம்ப்யூட்டரைப் - பயன்படுத்துபவர்கள் கூட சிந்திக்காதது ஆச்சரியம்தான். சுதந்திரமாக சிந்திக்க மதம் அனுமதிப்பதில்லை. 'உண்மை'க்கு மாறாக 'மத'ப் பொய்களைக் கற்பிப்பதால் வெளிச்சம் வருவதற்கான வழிகள் அடைக்கப்படுகின்றன. உங்களை நீங்களே இருட்டில் அடைத்துக் கெண்டு வெளிச்சம் வரவில்லை என்பது சரியல்ல. வெளிச்சத்தை நோக்கி வெளியே வரவேண்டியது நீங்கள்தான். எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியான தீர்வுகள் பலன் தராது. ஆனால், மதங்கள்  ஒரே தீர்வைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கின்றன.

தந்திரமான பயிற்சிகள்:
மதம் - உங்கள் சுதந்திரத்தைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட  பல்வேறு படிநிலைகள் கொண்ட அதிகார அமைப்பாகும். அது மதத் தலைவர்களின் அதிகாரம் மற்றும் சுக வாழ்வை உறுதிப் படுத்துவதற்காகவே தவிர மக்களின் நலவாழ்வுக்காக அல்ல. நீங்கள் உங்கள்  மதத்திற்காக செலவு செய்யும் பணம் உங்கள் மூளையை மழுங்கடித்து உங்களை ஏவலாளாக மாற்றும் பயிற்சிக்குக்  கட்டணமாகும். மதம் மக்களை மாக்களாக (ஆடு மாடுகளாக) மாற்றுவதில் வலிமை வாய்ந்த நிறுவனமாக உள்ளது. மதம் உங்களின் சொந்த அறிவை அரித்து(அழித்து) விட்டு ஏதேனும் ஒரு (அல்லது பல) கடவுள், தலைமை அடையாளம் (உருவம்), அல்லது ஒரு புனித நூல் ஆகியவற்றைப் பின்பற்றி நடக்க பயிற்சி அளிக்கிறது. இந்தக் கருவிகள் (கடவுள், அடையாளம், நூல்) ஆகியவை ஏவலாள் பயிற்சி 'வகுப்புகளை' நடத்துபவர்களால் கட்டுப் படுத்தப்படுகின்றது. ஆனால், அந்தப் பயிற்சிக்கு மதவாதிகளுக்குப் பொருந்தாது. இந்தப் பயிற்சிகளால்   நீங்கள் வலிமையற்றவராகவும் எதிர்ப்புத் தன்மயற்றவராகவும் எளிதில் கட்டுப் படுத்தக்கூடியவராகவும் மாறிவிடுகிறீர்கள். இந்தப் பயிற்சிகளெல்லாம் 'நம்பிக்கை' வார்த்தை என்ற வியாபார சின்னத்தை முன்னிறுத்தி நடத்தப்படுகிறது.
மதம் ஏராளமான மூடநம்பிக்கைகளை உங்கள் மூளையில் ஏற்றிவிடுகிறது. உங்களுக்கு ஒரே வழி- அதற்கு ஆமோதித்து தலையாட்டுவது அல்லது அமைதியாக இருப்பது. மதப் பயிற்சிகளில் முக்கியமாக மண்டியிடுவது, காலில் விழுவது, தலையாட்டுவது போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவமுண்டு. நாய் போன்ற விலங்குகளைப் பயிற்றுவிப்பதற்கும் இதற்கும் அதிக வேறுபாடு இல்லை. நீங்கள் சொல்ல வேண்டியதெல்லாம் "ஆமாம் சுவாமி".
நீங்கள் எப்போதாவது ' இந்தப் பயிற்சிகள் எல்லாம் மர்மமான, குழப்பமான , ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக உள்ளதே!?' என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் தர்க்க அறிவு மேலோங்கும்போது இந்தச் சிந்தனை வரலாம். ஆனால், இன்றைய நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ற சிந்தனையை மூட நம்பிக்கை வலைப்பின்னல் தடுத்துவிடும். "மதம் மக்களுக்கு அபின்  "-கார்ல் மார்க்ஸ்.
இந்து மதத்தில் சைவம்- வைணவம், கிறித்துவத்தில் பழைய ஏற்பாடு -புதிய ஏற்பாடு, புத்த மதத்தில் மஹாயானம்-ஹீனயானம் என பிரிவுகள் நடத்தை விதிகள் பலவற்றில் மாறுபட்டு நிற்கின்றன. அதன் தலைவர்கள் பல நேரங்களில் பல கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக் கொள்வதையும் அதை மறைக்க அவர்கள் படாத பாடுபடுவதையும் பார்க்கின்றீர்கள். உண்மையிலேயே தெளிவான மனநிலையில் உள்ளவர்கள் மதத்தின் விலங்குகளையெல்லாம் அறுத்தெறிந்துவிட்டு வெளியே வரவேண்டாமா? புனிதம் என்று சொல்லப்படுபவை எல்லாம்  விளங்கிக் கொள்ள முடியாதவகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதைப்பற்றிச் சிந்தித்து அதிலிருந்து வெளிவர நீங்கள் முயற்சி எடுக்காத வரை அதை வெற்றி கொள்ள முடியாது. இந்த அடிமை விலங்குகளை உடைக்க நீங்கள்தான் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும். மதவாதிகள் உங்கள் பயத்தையும் உறுதியற்ற தன்மையையும் பயன்படுத்தி தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்கிறார்கள்.

ஒருவேளை நீங்கள் கடவுளுடன் பேசவேண்டுமென்றால் நீங்களே நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்களேன். இடைத் தரகர்கள் எதற்கு? கண்டிப்பாக கடவுளுக்கு இடைத்தரகர் தேவையில்லை. அறிவற்ற ஏவல் அடிமை வலையில் விழாதீர்கள். வெறும் 'நம்பிக்கை' என்பது உங்களைக் கண்டிப்பாக கடவுளின் அருகில் கெண்டு செல்லாது. மாறாக, 'மனிதன்' என்ற நிலையிலிருந்து கீழிறக்கி 'விலங்கு' நிலைக்குக் கொண்டு சென்றுவிடும்.
நேரத்தை வீணடித்தல்:
மதக் காரியங்களுக்காகச் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் வாழ்க்கையின் விலை மதிப்பற்ற நேரத்தை, கழிப்பறையில் ஒன்றுக்கும் உதவாமல் கழித்துவிடுவது போலாகும். மோசமான கற்பனைக் கதைகள், புராணங்கள் போன்றவற்றைப் படிப்பது, அர்த்தமற்ற  சாஸ்திர சட்டங்களைப் பின்பற்றுவது மூளையைக் குப்பைகளைக் கெண்டு நிரப்பிக் கொள்வது போலாகும்.
தான் குடியிருக்கும் நாட்டின் சட்டதிட்டம் என்னவென்று தெரியாத தற்குறிப் பேர்வழிகள்கூட மதச் சடங்குகளைத் தெளிவாகக் கூறுவார்கள். தவறு செய்துவிட்டு "எனக்குச் சட்டம் தெரியாது" என்று யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது. சடங்குகள் தெரியாததற்குத் தண்டனை ஏதும் கிடையாது. ஆனால், மக்கள் வலிந்து தெரிந்து கொள்வதும் கற்றுக் கொடுப்பதும் எதை?
தேவையில்லாத குப்பைகளை மூளையிலிருந்து அகற்றிச் சுத்தப் படுத்தினால்தான் அறிவு வேலை செய்ய ஆரம்பிக்கும். இது கணினியில் வைரஸ்களை நீக்குவது போலத்தான்.
திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான சடங்குகள், விழாக்கள், பிரார்த்தனைகள் பயனற்ற வழிபாடுகள் உங்கள் நேரத்தை விழுங்கிவிடுகின்றன. இவை உங்களை மயக்க நிலையில் வைத்திருக்க உதவுகின்றன.
பண விரயம்:
எவ்வளவு நேரம் மதக் காரியங்களுக்காகச் செலவிடுகிறோமோ அந்த அளவிற்குப் பெரிய அளவில் பண விரயமும் ஆகும். ஒரு மதத்திற்கு நீங்கள் செலவிடும் பணம் அந்த மதத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் உங்கள் மற்றும் உடன் வாழும் மனிதர்களின் அடிமைத்தனம் நீடித்திருக்கவும் பயன்படுகிறது. சில மத நிறுவனங்கள் அல்லது மத (மட) அதிபர்கள் பெரிய அளவில் தொண்டு செய்வதைப் பார்க்கிறோம். அந்தப் பணம் அவர்களின் சொந்தப் பணமா?  வருமான வரி விலக்கிற்காகக் கொடுக்கப்படும் நன்கொடைகள் மற்றும் பிரார்த்தனை போன்றவற்றிற்காகச் செலுத்தப்படும் காணிக்கைகள் ஆகியவற்றிலிருந்து கொஞ்சம் இப்படி செலவிடப்படுகிறது. நீங்களே அந்தப் பணத்தைப் பெறும் நிலையில் இருந்தால் எவ்வளவு பெரிய வாய்ப்பு என்று எண்ணிப் பாருங்கள்! அதைக் கொஞ்சம் செலவிடுவதால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? மாறாக மேலும் வளர்ச்சி அடைவீர்கள்.

இவ்வாறு கொடுக்கப்படும் பணம்தான் பல நூறு 'கோடீஸ்வர துறவிகளை' உருவாக்கக் காரணமாக இருக்கிறது. நீங்கள் யாராவது காசுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் என்று சிந்தித்து இருக்கிறீர்களா? பணம் என்ற கருவியை மனிதன் கண்டுபிடித்தான். அதை வைத்துக் கொண்டு கடவுள் என்ன செய்யப் போகிறது? கடவுளுக்காக என்று கேட்டு "மனுஷன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே". நீங்கள் கடவுள் நம்பிக்கையைக் கைவிடாவிட்டால் பரவாயில்லை. கடவுளுக்காகக் காசு கொடுப்பதை நிறுத்துங்கள். ஒரு மாதத்திற்கு மேல் ஒரு கோவிலும் ஒரு மடமும் திறந்திருக்காது. எல்லா  'சாமிகளும்' பட்டினியால்  செத்துப் போய்விடும். அல்லது வயிற்றுப் பிழைப்பிற்காக வேலை தேடிப் புறப்பட்டுவிடும்.
சில மதங்கள் 'துறவிகளை'த் திருமணம் செய்துகொள்ள அனுமதிப்பதுகூட சொத்து கைவிட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான். சில மதங்கள் சாமியார்கள்   திருமணம்  செய்துகொள்ளக் கூடாது என்பதற்குக் காரணம், பணம் மடத்தைவிட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக. திருமண பந்தத்தில் ஈடுபடாமலேயே 'வாரிசு' களுக்கு மக்கள் சொத்தை எழுதி வைக்கும் 'பற்றற்ற' துறவிகளைப் பார்த்திருப்பீர்கள் to continue.....

Friday, February 17, 2012

வன்முறை!

- க.அருள்மொழி

வன்முறை! செய்திகளில்  இந்தச் சொல்லைக் கேட்காத நாளே இல்லை. நாள்தோறும் ஏதேனும் ஒரு இடத்தில்... தவறு! அனேகமாக எல்லா ஊர்களிலும் இது நடக்கிறது. தனி மனிதனாகவோ, குழுவாகவோ இச்செயல் நடந்துகொண்டே இருக்கிறது. தனி மனிதனுக்கோ ஒரு சமூகத்திற்கோ சட்டத்திற்குப் புறம்பாக, ஒழுக்க விதிகளுக்கு மாறாக நடந்துகொள்வதும் அதனால் மற்றவர்களின் அல்லது தன் சொந்த உடலுக்கோ, உடைமைக்கோ, உயிருக்கோ சிறிய அளவிலோ முழுமையாகவோ பாதிப்பு ஏற்படுமாயின் அந்தச் செயல் 'வன்முறை' என்றாகும்.
தமிழறிஞர் மா.நன்னன் அவர்கள் இதைப் பற்றிக் குறிப்பிடும்போது 'வன்முறை என்று குறிப்பிடுவதுகூடத் தவறு, முறையற்ற   செயலை எப்படி 'முறை' என்று சொல்ல முடியும் வன்செயல் என்பதே சரி' என்பார். என்றாலும், வழக்கப்படிப் புரிந்துகொள்வதற்காக அந்தச் சொல்லையே பயன்படுத்துகிறேன். இப்போது இளைஞர்கள் அதிக அளவில் வன்முறையில் ஈடுபடுகிறார்கள், வன்முறைக்குப் பலியாகிறார்கள். வெளிநாடுகளில் மட்டுமல்லாமல்   நம் நாட்டிலும் 'கலாச்சார' ஊடுருவலாகப் பரவியுள்ளது.
வன்முறையைப் பற்றி ஓரிரு சொற்றொடர்களில் விளக்கிவிட முடியாது. அதற்குப் பல காரணங்களைச் சொல்ல வேண்டும். அதில் பலவற்றை உங்கள் வாழ்க்கையில் பார்த்திருக்க முடியும், அதில் சிலவற்றில் நீங்களேகூட ஈடுபட்டிருக்கக் கூடும்.
வன்முறைக்குக் காரணங்கள்: ஒருவர், மற்றவரைக் குத்துவதற்கு, அடிப்பதற்கு, காயப்படுத்துவதற்கு அல்லது துப்பாக்கியால் சுடுவதற்குக்  (இந்தச் செயல்களைத் தனக்கே செய்துகொள்வதற்கு) காரணம் என்ன? முன்பே சொன்னது போல் இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

உணர்ச்சி வெளிப்பாடு: சிலர் தன்னுடைய கோபத்தையும் ஏமாற்றத்தையும் மனச் சோர்வையும் வெளிப்படுத்த வன்முறையைக் கையாள்கிறார்கள். அவர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காததால் ஏற்பட்ட கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சியை வன்செயலால் வெளிப்படுத்துகிறார்கள்.
சூழ்ச்சித் திறன்: ஒன்றைப் பெறுவதற்காக அல்லது மற்றவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக கையாளும் சூழ்ச்சி முறை இந்த வன்முறை.
பழிவாங்குதல்: தனக்குப் பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்குப் பதிலடி கொடுப்பதற்காக வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.
வன்முறை ஒரு பயிற்றுவிக்கப்பட்ட நடத்தை:
மற்ற நடத்தைகளைப் போல இதுவும் பழக்கத்தால் ஏற்படுவதுதான். இது மாற்றக்கூடியது . ஆனால் எளிதல்ல. ஏனென்றால், வன்முறைக்குப் பல காரணங்கள் உள்ளதால் எளிதான தீர்வை எதிர்பார்க்க முடியாது. நீங்கள் செய்ய முடிவதெல்லாம், வன்முறைக்கான அறிகுறிகளை அடையாளம் காணப் பயில்வதும், உங்களுக்குள்ளேயோ அல்லது உங்கள் நண்பர்கள் உறவினர்களிடமோ வன்செயலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அதனைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்வதும்தான்.
வன்செயல் நடத்தைக்கான காரணங்கள்  சில:
தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள.
மரியாதைத் தேவைக்காக.
தன்னைப் பற்றிய தாழ்வெண்ணம்.
குழந்தைப் பருவப் புறக்கணிப்பு அல்லது தகாத பயன்பாடு (Abuse).
வீட்டிலோ சமூகத்திலோ ஊடகங்களிலோ வன்முறையைப் பார்ப்பது.
ஆயுதங்கள் எளிதாகக் கிடைப்பது.
மற்றவர்களின் வன்முறை நடத்தையை உணர்ந்துகொள்ளல். அடிக்கடி வன்செயல்களில் ஈடுபடுபவர்கள்  உணர்ச்சிகளைக்  கட்டுப்படுத்துவதில் சிரமப்படுவார்கள். அவர்கள் மற்றவர்களால் 'காயப்பட்டவர்களாக இருப்பார்கள்.
வன்முறைமூலம் பயமுறுத்தலாம். அது பிரச்சினையைத் தீர்த்துவிடும். மரியாதையைத் தரும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள்.
வன்முறையைக் கையாள்பவர்கள் மரியாதையை இழக்கிறார்கள். அதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டும் வெறுக்கப்பட்டும் நடத்தப்படுவதால் அவர்கள் மேலும் கோபத்துடனும் மனத் தளர்வுடனும் காணப்படுகிறார்கள்.
கீழ்க்காணும் அறிகுறிகள் வன்செயலைச் சாத்தியப்படுத்துபவை.
அன்றாடம் கோபமும் எரிச்சலுமாக இருப்பது.
அடிக்கடி அடிதடியில் ஈடுபடுவது.
சொத்துக்களை அல்லது கலைப் பொருட்களை அழித்தல்.
மது அல்லது போதைப் பொருளைப் பயன்படுத்துவது அதிகரித்தல்.
இடர் ஏற்கும் (Risk-taking) நடத்தை அதிகமாதல்.
வன்செயலுக்கான விரிவான திட்டமிடல்.
மிரட்டல் விடுத்தல் அல்லது அடுத்தவரைக் காயப்படுத்த முற்படுதல்.
விலங்குகளைக் காயப்படுத்தி ரசித்தல்.
ஆயுதங்களை வைத்திருத்தல்.

கீழ்க்காணும் அறிகுறிகள் அதிகமாகக் காணப்பட்டால் வன்செயல்களில் ஈடுபடுவது உறுதி.
வன்செயல்கள் அல்லது கோபமான நடத்தை முன்பதிவுகள். (History)
மோசமான மது அல்லது போதைப் பழக்கம்.
குற்றவாளிகளுடன் கூடியிருப்பது அல்லது கூட்டமாக இருக்க வேண்டுமென்ற விருப்பம்.
ஆயுதங்களைக் கையாள்வது அல்லது தயாரிப்பது.
மற்றவர்களை எப்போதும் மிரட்டுவது.
கோபம் போன்ற உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாமை.
வழக்கமான வேலைகளிலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் விலகியிருத்தல்.
வெறுக்கப்பட்டவராகவோ தனியனாகவோ எண்ணுதல்.
கேலி வதையால் பாதிக்கப்பட்டவராயிருத்தல்.
பள்ளியில் வருகைப் பதிவு குறைதல்.
ஒழுக்கக் குறைபாடு அல்லது அதிகாரிகளிடம் அடிக்கடி சண்டையிடுதல்.
மரியாதை தரப்படுவதில்லை என நினைத்தல்.
மற்றவர்களின் உணர்ச்சியையும்   உரிமையையும் அவமதித்தல்.
மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் தகுந்த ஆலோசனையையும் உதவியையும் நாடவேண்டும்.
உங்களுக்கு நெருங்கியவர்கள் வன்முறை அறிகுறிகளோடு இருந்தால் என்ன செய்வது?
வன்முறை அறிகுறிகளோடு யாராவது இருப்பதை நீங்கள் கண்டுகொண்டால் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவரோடு தனிமையில் இருக்காதீர்கள். சாத்தியப்பட்டால் உங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவரை அந்தச் சூழ்நிலையில் இருந்து அகற்றி அமைதிப்படுத்தும் இடத்திற்கு மாற்றுங்கள்.
உங்களுக்கு நம்பிக்கையான ஒருவரிடம் உதவி கேளுங்கள். அவர்கள் ஒரு ஆலோசகர், அல்லது உளவியலாளர், ஆசிரியர், குடும்பத்தினர், நண்பர்கள்   என யாராகவும் இருக்கலாம். வன்செயலால் நீங்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டால் உங்களைக் காப்பாற்றக்கூடிய அதிகாரம் உள்ளவரை (காவல்துறையினை) நாடலாம். நீங்களே ஆயுதம் எடுக்காதீர்கள்.
உண்மையில் வன்முறை நடத்தையை மாற்ற தொழில் முறையிலான உளவியல் வல்லுநரின் உதவி தேவைப்படும். முக்கியமாக தனியராக இந்த முயற்சியை எடுக்க வேண்டாம்.
கோபத்தைச் சமாளிப்பது பற்றி...
பொதுவாக, நம்மைத் தோல்வியடையச் செய்யும் நிகழ்வுகளும் துரோகங்களும் நமக்குக் கோபத்தை ஏற்படுத்தச் செய்வன. ஆனால், கோபம் எல்லாம் வன்முறையாக மாறுவதில்லை. ஆனாலும் அதைக் கட்டுப்படுத்துவதும் கடினம்தான். கோபம் ஏற்படும்போது அமைதியாக இருக்க முயற்சி செய்வதுதான் சரியான விளைவைத் தரும்.
கோபம் வன்முறையாக மாறாமலிருக்க சில வழிகள்:
#    உங்கள் உணர்ச்சிகளைக் கொட்டித்தீர்க்கப் பழகுங்கள். ஒரு நம்பிக்கையான நண்பர் அல்லது மூத்தவர்களிடம் உதவி கேளுங்கள்.
# அமைதியாக உங்கள் கட்டுப்பாட்டை இழக்காமல் உங்களுடைய கோபத்தை, வருத்தத்தை, தோல்வியை, விமர்சனத்தை வெளிப்படுத்தப் பழகுங்கள். உங்களுடைய எதிர்வினை பாதுகாப்பானதாகவும் காரணத்தோடும் உள்ளதா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்
# மனச் சோர்வடையாமல் உங்களுக்கு வரும் எதிர்வினைகளைக் கேட்டு உள்வாங்கி பதில் சொல்லுங்கள். மற்றவர்களின் பார்வையில் இருந்து உங்களைப் பார்க்க முயற்சி செய்யுங்கள்.
# மாற்று வழிகளைப் பற்றி யோசியுங்கள். அல்லது சமாதான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். கோபம் வாழ்க்கையின் ஒரு பகுதி. அது வன்முறையாக மாறாமல் இருக்க உங்கள் உணர்ச்சிகளைப் பேசித் தீர்க்கப் பயிற்சியும் முயற்சியும் எடுக்க வேண்டும். உறுதியாக, பாதுகாப்பாக, அமைதியாக இருங்கள்.
நீங்கள் வன்முறை நடத்தை ஆபத்திலிருக்கிறீர்களா?
வன்முறை நடத்தை அறிகுறிகள் உங்களிடமிருப்பதை அறிந்தால் உடனே உதவியை நாடுங்கள். மற்றவர்களைக் காயப்படுத்துவதைப் பற்றிய குற்ற உணர்வோ வருத்தமோ மனத்தளர்வோ இல்லாமலிருப்பது நல்லதல்ல. மற்றவர்களைக் காயப்படுத்துவது தவறு என்பதை ஏற்றுக் கொள்வது முதல்படி. அடுத்ததாக ஒரு ஆலோசகர், அல்லது உளவியலாளர், ஆசிரியர், குடும்பத்தினர், நண்பர்கள், அறிஞர்கள் யாரிடமாவது பேசலாம். அவர்கள் மன நல வல்லுநர்களின் உதவியைப் பெற உதவுவார்கள்.
வன்முறை நடத்தையிலிருந்து உங்களை நீங்களே  கட்டுப்படுத்துவது எப்படி?
ஒவ்வொருவரும் கோபத்தை ஒவ்வொரு வகையில் உணர்கிறார்கள். கோபத்தை நீங்கள் எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்று உணர்ந்து அதைக் கட்டுப்படுத்துங்கள்.
நீங்கள் கோபப்படும்போது கீழ்க் கண்டபடி உணரலாம்.
தசைகள் இறுக்கமாதல்.
இதயத் துடிப்பு அதிகரித்தல்.
வயிற்றில் ஒரு முடிச்சு விழுந்ததுபோல் அல்லது பட்டாம்பூச்சி பறப்பதுபோல் உணர்தல்.
மூச்சு விடுதலில் இயல்புக்கு மாறான நிலைமை.
படபடப்பு.
தலையை மோதிக்கொள்ளுதல்.
முகம் சிவந்துபோதல்.
இது போன்ற நேரங்களில் அட்ரினல் வேகமாக சுரப்பதால் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, குரல் ஓங்கி ஒலிக்கிறது, நரம்புகள் புடைத்துக் கொள்கின்றன. இதைத் தவிர்க்க,
மூச்சை நிதானமாகவும் ஆழமாகவும் அதனையே கவனித்துக் கொண்டு உள்ளிழுத்து வெளிவிடவும்.
நீங்கள் ஒரு கடற்கரையிலோ பூங்காவிலோ இதமான தென்றலை அனுபவிப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அமைதியாக உடலைத் தளரச் (Relax) செய்யவும்.
.உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் கடந்த கால நிகழ்வுகளில் மூழ்கவும்.
உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்...
"அமைதியாக இரு...."
"என்னை நானே வருத்திக் கொள்ள  வேண்டியதில்லை".
"மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை."
நிற்க... பின்விளைவுகளைப் பற்றிச் சிந்தியுங்கள். செயல்படுவதற்கு முன் யோசியுங்கள். உங்கள் கோபத்தைத் தூண்டியவரின் செயல்கள் அல்லது சொற்களில் உள்ள பொருள் பற்றி நடுநிலையோடு அல்லது நேர்மறையாகச் சிந்தியுங்கள். மற்றவர்கள் முன்னால் விவாதம் செய்யாதீர்கள். பிரச்சினையை முடிப்பது பற்றி இலக்கு நிர்ணயுங்கள்... ஆளை முடிப்பது பற்றியல்ல! கோபத்தைக் கட்டுப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் கட்டுப்பாட்டை இழப்பதால் ஏற்படும் மோசமான பின்விளைவுகளைப் பற்றியும் சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள். கோபம் உங்களை ஆட்கொள்ள(கொல்ல) விடாதீர்கள். உங்கள் வன்செயலைக் கட்டுப்படுத்துவது உங்கள் கையில் இருக்கட்டும்.
சுய வன்முறை:
சிலர் கோபத்தை மற்றவர்கள் மேல் காட்டுவதற்குப் பதிலாக தன் மீதே காட்டுவார்கள். தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வது, பட்டினி கிடப்பது, வேலைசெய்ய மறுப்பது, பேசாமலிருப்பது போன்றவை. பெரும்பாலும் இதன் அதிர்ச்சியடையச் செய்யும் விளைவு தற்கொலையாக இருக்கிறது. மற்ற வன்முறை வடிவங்களைப் போல தற்கொலையையும் தடுக்க முடியும். அதற்கு எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறிவது, மற்றும் உதவியை நாடுவதுதான் வழிகளாகும்.

சுய வன்முறையின் அடையாளங்கள்:
+ முந்தைய தற்கொலை முயற்சிகள்.
+ குறிப்பிடத்தக்க மது அல்லது போதைப் பழக்கம்.
+ தற்கொலை பற்றிய பயமுறுத்தல் அல்லது தகவல் அளித்தல், மரணத்திற்குப்  பின் என்ன என்பதைப் பற்றிப் பேசுதல்.
+ திடீரென அதிகரிக்கும் அமைதி, விலகி இருத்தல், தனிமை தேடல்.
+ உண்ணுவதிலும் தூங்குவதிலும் பெரிய மாற்றங்கள்.
+ உதவாக்கரை என்ற எண்ணம், குற்ற உணர்வு.
+ கட்டுபாடற்ற நடத்தை.
+ திடீர் மனவெழுச்சி, கோபம் அதிகரித்தல்.
+ பள்ளி அல்லது வேலைக்குச் செல்ல விருப்பமின்மை.
+ வழக்கமான நடவடிக்கைகளில் ஆர்வமின்மை.
+ உயரதிகாரிகளிடம் முரண்படுதல்.
+ திடீரென மிகச் சரியானவராக இருத்தல்.
+ சொத்துக்களைப்  பற்றிய அக்கறையின்றி இருத்தல்.
+ எதிர்காலம் பற்றிய அக்கறை இல்லாததோடு 'விடை பெறும்' போக்கு.
இந்த அறிகுறிகள் முக்கியமாக ...
அண்மையில் நடந்த குடும்ப உறுப்பினரின் அல்லது நண்பரின் மரணத்தின்போது,
அண்மையில் நடந்த காதலன் அல்லது காதலியுடன் ஏற்பட்ட பிரிவு அல்லது பெற்றோருடன் தகராறு ஏற்படும்போது,
அவரைச் சுற்றி ஏற்படும் இளவயதினரின் தற்கொலை நிகழ்வுகள் ஆகியவற்றின்போது அதிகமாகக் காணப்படும்.
பெரும்பாலும் உள ரீதியான வலிகள் அதிகமாகும்போது தற்கொலைகள் அதிகமாக நடைபெறுகிறது. காரணம், மரணம் ஒன்றே அதிலிருந்து வெளிவர வழி என்று நினைப்பதுதான். ஆனால் அப்படியல்ல.
ஒருவேளை உங்கள்   நண்பர்கள் தற்கொலையைப் பற்றி அடிக்கடி குறிப்பிட்டால் அதைக் கவனமாகக் கையாளுங்கள். உடனடியாக நிபுணர்கள் மூலமாக  உதவி செய்யுங்கள் . அவர்களுடைய தற்கொலை எண்ணத்தை ரகசியமாக வைக்காதீர்கள்-அவர்கள் கேட்டுக்கொண்டாலும் கூட.
வன்முறை என்பது இருபக்கமும் கூரான ஆயுதம். இதை மழுங்கச் செய்யக்கூடியதும் ஒரு கூரான ஆயுதம்தான். அது அறிவாயுதம்! வன்முறைக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்வோம். மனித நாகரிகத்தை முன்னெடுத்துச் செல்வோம்.

செய்திகளை பகிர்ந்து கொள்ள